GANESH EVERYWHERE J K SIVAN

பிள்ளையாரும் பாட்டியும்  -நங்கநல்லூர் J K SIVAN
தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும்  ஒரு குட்டி பிள்ளையார் கண்ணில் படுவார். மரத்தடி, குளத்தங்கரை, தெரு மூக்கு, வீடு வாசலில் என்று  கோவில்களைத்தவிர மற்ற இடங்களிலும் அவர் சர்வவியாபி. சில மரங்களின் வேர்கள் தண்டுகள் கூட பிள்ளையார் மாதிரி  உருவத்தில் அமைந்திருப்பது ஆச்சர்யம். எளிமையானவர்  கணேசர்.  வெயிலிலும் மழையிலும் கூட  சந்தோஷமாக  காய்வார்.  வேறெந்த ஸ்வாமியையுமிப்படி  எளிமையாக  எல்லோரும் விரும்பும்படி  எங்கும்  காணமுடியாது.  “பிள்ளையார்” என்றே அன்போடு  நாம் சொல்லுவதே அவர்  எவ்வளவு அவர் நமது மனதுக்கு  சொந்தக்காரர் என்று புரியும்.  சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர்.
முதல் பிள்ளை விநாயகர்.  குழந்தை ஸ்வாமி ஷண்முகன். பிள்ளையாரே  எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்  தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவ, ஓம், வடிவமாகவே தோன்றும்.
பிள்ளையார் குழந்தை போல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வர்.  ஒளவைப் பாட்டி  கதை தெரியுமல்லவா?  ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியவள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.
 ஒளவையார் பிள்ளையார் கதை  ஞாபகப்படுத்துகிறேன். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரைக் கண்டு  ”பாட்டி நீயும் எங்களோடு வா” என்றபோது பாட்டி  பிள்ளையாருக்கு  பூஜை பண்ணிக்கொண்டிருந்தாள் . நடுவில் எழுந்து போக  மனமில்லை. ”நீங்கள் இருவரும் போகிறபடி  கைலாசத்துக்கு போய்ச் சேருங்கள்.  நான்  என் விநாயகனுக்கு பூஜை எல்லாம் செயத முடிக்கவேண்டும். அவனுக்கு பூஜை செய்வது தான் எனக்கு  கைலாசம்” என்றாள்  பாட்டி.
 முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்து விட்டார்! அவளுக்குப் அப்புறம் தான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அருணகிரி இதை அற்புதமான  திருப்புகழாக  பாடுகிறார்.கேளுங்கள்:
நாத விந்து கலாதி நமோ..நமோ…………………………………………………………..
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி…………………………………………………………….
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர்….
சேரனும்  சுந்தரரும் கையிலை  ஏகியதை  அருணகிரி  பாடுகிறார்.
பிள்ளையாருடைய சக்தியினால்  சேரனும் சுந்தரரும்  கையிலை சென்றடையும் முன்பே  ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் பிள்ளையார்  ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர். அவரைத் தொழுது இன்புறுவோம். நமக்கு வேண்டியதே அவர்  நாம் வேண்டாமலேயே அளிக்கும்  ஞான கருணாமூர்த்தி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *