கோபம் பாபம் சண்டாளம் – நங்கநல்லூர் J K SIVAN நம் காதில் அடிக்கடி கேட்கும், அல்லது நாமே சொல்லும் ஒரு வார்த்தை. ”அவன் கிட்டே போகாதே, பேசாதே, ரொம்ப கோபக்காரன்.வள்ளுன்னு விழுவான்” சிலர் பேசும் வார்த்தைகளில் மற்றவர்கள் இதயம் சுக்கு நூறாக உடைந்து விடும். வார்த்தைகளின் காயம் எத்தனை காலம் ஆனாலும் மாறாது.ஆறாது. ஆகவே கோபத்தை,முன்கோபத்தை எல்லாம் அடக்கவேண்டும். வார்த்தைகளில் இதம், ம்ருது தன்மை இருக்க வேண்டும். வார்த்தைகளை முதலில் எண்ணி,. கண்ட்ரோல் பண்ணி வெளியே விடவேண்டும். ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு இளைஞன். ரொம்ப கோபிஷ்டன். அவன் வார்த்தையால் துன்பப்பட்டவர்கள் அநேகர். அவன் அப்பா அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவெ டுத்தார். அவனிடம் ஒரு பை நிறைய ஆணி களை கொடுத்தார். பையா நீ ஒவ்வொரு தடவை கோபப் படும்போதும் ஒரு ஆணியை இதோ இந்த தோட்டத்து மரக்கதவில் அடிக்கவேண்டும்.மறுநாளே அவன் ஆணி அடிக்க ஆரம்பித்தான். அன்று மாலை அடித்த ஆணிகளை எண்ணினான். 42.அடுத்த சில வாரங்களில் இந்த நம்பர் குறைந்தது. அதாவது அவன் கோபப்படுவது ஆத்திரத்தில் பேசுவது குறைந்தது. ஆகவே மா மரத்தில் ஆணிகள் குறைந் தன. ஆணிகளை மரத்தில் அடிப்பதை விட கோபத்தை அடக்குவது எளிது என்று புரிந்தது அவனுக்கு. சில வாரங்களில் அவன் கோபமே படாமல் சாந்தமாகி விட்டான். அப்பாவிடம் சொன்னான். அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்.”அடேய் பையா என்னோடு வாடா”அப்பா அவனை தோட்டத்து மரக் கதவருகே அழைத் துக் கொண்டு போனார்.”நீ இப்படி மாறியதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி பையா” என்று சொன்ன அப்பா, மேலே என்ன சொன்னார் தெரியுமா?”இதோ இந்த கதவைப் பார்த்தாயா? நீ முதலில் அடித்த ஆணிகள், அப்புறம் வரிசை வரிசையாக குறைந்து கொண்டு வந்த ஆணிகள், கடைசியில் ஆணிகள் இல்லை . இந்த கிடுக்கியால் நீ அடித்த ஆணிகளை எல்லாம் பிடுங்கு பார்க்கலாம்”எல்லா ஆணிகளையும் பையன் பிடுங்கி விட்டான்.”இப்போ என்ன தெரிகிறது?”மரக்கதவில் துவாரங்கள்” ஆணிகளை பிடுங்கி விட்டாலும் மரக்கதவு தனது பழைய ஸ்வரூபத்தில் இல்லை. அதில் அநேக த்வாரங்கள். அதைக் காட்டி அப்பா கடைசியாக சொன்னது அந்த பையனுக்கு மட்டும் அல்ல நமக்கும் சேர்த்து தான்.’நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளின் நினைவுகள், இந்த மரக்கதவின் துவாரங்களை போல் என்றும் நிரந்தர மானவை. அடித்த ஆணிகளை நீ பிடுங்கி விட்டாலும் கதவின் துவாரங்கள் மறையப்போவ தில்லை. எவ்வளவு தான் நீ ஸாரி SORRY கேட்டாலும் சொன்னது சொன்னது தானப்பா. நாவினால் சுட்ட வடு என்றும் மாறாது. ஆகவே இனி ஜாக்கிரதையாக பேசு.”