A STRANGE AVATHAR J K SIVAN

தெரியாத ஒரு  அவதாரம்.                       நங்கநல்லூர்  J K  SIVAN
குருவாயூர்  கிருஷ்ணன்  பக்தவத்சலன்.  அதுவும்  மலையாள தேசத்தில்  சம காலத்தில் வாழ்ந்த  ரெண்டு  பரம பக்தர்களை  தனது இரு கண்களாக மதித்தவன். அந்த ரெண்டு கண்கள் யார் தெரியுமா?  ஒருவர் குருவாயூர் கிருஷ்ணன் எதிரே உட்கார்ந்து அவனோடு பேசிக்கொண்டே  அவன் சரித்திரத்தை நாராயணீயமாக  இயற்றிய  மேல்பத்தூர்  நாராயண பட்டத்ரி.  இன்னொருவர்  அதிகம் கல்வியறிவில்லாத, சமஸ்க்ரிதம் அறியாத மலையாள  பாட்டுகள் பாடும்  ”ஞானப்பான”  இயற்றிய  கிருஷ்ண பக்தர்  பூந்தானம்.
பட்டத்ரிக்கு  பூந்தானத்தை கண்டாலே  இளக்காரம். முட்டாள், படிப்பறிவில்லாதவன் என்று அவரை அலக்ஷியம் செய்வார்.  பூந்தானம்  பட்டத்ரியை வணங்கி அவரை சிறந்த கல்விமான் என அறிந்து போற்றுபவர் . 

பட்டத்ரி  தினமும்  நாராயணீயம் உபன்யாசம் பண்ணும்போது விடாமல் பூந்தானம் முதல் வரிசையில்  உட்கார்ந்து கொண்டு ரசிப்பார். ஒருநாள்  பட்டத்ரியை வணங்கி பேச முற்படுகிறார்.
”பட்டத்ரி ஸ்வாமி உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கவேண்டும். நீங்கள் சிறந்த கல்விமான், நன்றாக படித்த மேதாவி எனக்கு அருள்  புரியவேண்டும்?””என்ன சந்தேகம் உனக்கு சொல்?””உங்களது நாராயணீயம் கேட்கும்போது எனக்கு உள்ளே சொல்லமுடியாதபடி ரொம்ப  ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஸ்வாமி..”.”’பூந்தானம்  என்ன சொல்கிறாய் நீ,உனக்கு எப்படி என் நாராயணீயம் புரியும்?. அது சமஸ்க்ரித ஸ்லோகங்கள் நிறைந்தது. உனக்கோ ஸமஸ்க்ரிதமே  தெரியாதே. விஷயமே  புரியாதவனுக்கு என்ன சந்தேகம் சொல்?”
‘ஸ்வாமி  எனக்கு ஸமஸ்க்ரிதம் தெரியாது. ஆனால்  நீங்கள் சொல்லும்போது என் மனத்தில் குருவாயூரப்பன் புகழை காதால்  கேட்கும் சப்தமே இனிக்கிறது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் பொங்குகிறது.  அதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது சுவாமி?””என்ன சந்தேகம் உனக்கு  சொல்?”” தினமும் நீங்கள்  சொல்லும்  நாராயணீயம்  வார்த்தைகள் புரியாவிட்டாலும் கிருஷ்ணன் என்கிற சப்தம் என்னை கண்மூடி அவனை அனுபவிக்க வைக்கிறது.  என் மனக்கண் முன்பு கிருஷ்ணன்  சிரத்தில் மயில் பீலி அவன் தலை அசைக்கும்போது ஆடுகிறதை  பார்க்க முடிகிறது. சில நேரங்களில் அவன் புல்லாங்குழல்  என் கண்ணில் படுகிறது. ஒரு நாள் அவனுடைய  கருணை மிகுந்த தாமரைக்  கண்களைபார்த்தேன். ஆனால்  ஏனோ  ஸ்வாமி எனக்கு அவன் முழு  உருவத்தையும்  பார்க்க இன்னும் முடியவில்லையே?   நீங்கள்  தான்  அவன் முழு உருவ தரிசனம்  பெற  நான் என்ன செய்யவேண்டும் என்று  உபதேசிக்க வேண்டும். நீங்கள் மஹான் உங்களால் தான் முடியும்” என்கிறார் பூந்தானம்.
பட்டத்ரி ஏளனமாக சிரித்தார். இந்த முட்டாளுக்கு  எந்த உருவில்  தியானம் செய்தால்  கிருஷ்ண தர்ச னம் கிடைக்கும் என்று தெரியவேண்டுமாம்? இவனுக்கெல்லாம் பக்தி எதற்கு? படிப்பு வாசனை இல்லாத இந்த அறிவிலி,   மாடு மேய்க்கத்தான் பொருத்தமானவன்”  என்ற  எண்ணம்  தோன்றியது..
”பூந்தானம் கிருஷ்ணனின் தரிசனம் முழுசாக பெறவேண்டுமா உனக்கு?   அதோ தெரிகிறது பார்  ஒரு எருமை மாடு.  அதை மனதில் நினைத்து கிருஷ்ணனை வழிபடு. அவன் முழு உருவமும்  உனக்கு தரிசனம்  கிடைக்கும் ”  என்று  கேலியாக  சொன்னார்  பட்டத்ரி.  ஆனால்  பூந்தானம் அதையே  குரு உபதேசமாக,  வேத வாக்காக ஏற்றுக்கொண்டார்.   அது முதல்  கண்ணனை  எருமை மாடு வடிவில் மனதில் த்யானம் செய்ய தொடங்கினார்.  குருவாயூரப்பனுக்கு படு குஷி.  ”அடாடா, எனக்கு என் பக்தன் பூந்தானம் இப்படி ஒரு அவதாரம் கொடுத்து விட்டானே என்று பூரித்து  சேற்றில் உழலும் எருமை  மாடாக பூந்தானத்துக்கு காட்சி தந்தான். அவனோடு  ருக்மணி சத்யபாமாவும் கிருஷ்ணனை இப்படி எருமை மாடாக பூந்தானம் வேண்டி தொழுவதைப் பார்த்து விட்டு தாங்களும்  அந்த எருமை மாட்டுக்கு ஜோடியாக பெண்   எருமைகளாக  சேற்றில் உழன்று  காட்சி தந்தார்கள்.”  பூந்தானத்துக்கு பரம பக்தி. விடாமல் அந்த உருவிலேயே  கிருஷ்ணனை மனதில் இருத்திக் கொண்டார். அடுத்தநாள் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் ஏதோ பெரிய ஒரு விழா.  பூந்தானம், குருவாயூருக்கு வந்துவிட்டார்.  பட்டத்ரியும் வந்துவிட்டார். குருவாயூர் கண்ணன் உத்ஸவ மூர்த்தியாக   தயாரானான். பக்தர்கள் கூட்டம்  நெருக்கியது. உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்த பக்தர்கள்  பல்லக்கை வெளியே கொண்டுவர முடியாமல் எங்கோ ஏதோ  தடை செய்தது.  எது தடுக்கிறது ஏன் பல்லக்கு  நகரவில்லை? என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணுக்கு தடை எதுவும் தெரியவில்லை.
அப்போது உத்ஸவ மூர்த்தியையே பார்த்துக்கொண்டிருந்த பூந்தானம்  பரபரப்படைந்தார். ஓடிவந்தார், திடீரென்று உரக்கக்  கத்தினார். ”கொம்புகள்  தடுக்கிறது. ஒவ்வொரு  கொம்பாக சாய்த்து வெளியே கொண்டு வாருங்கள்”’இது என்ன உளறல் இந்த முட்டாளிடமிருந்து ‘ பட்டத்ரி அருகில் எல்லோரிடமும் சொன்னார்.  பூந்தானம் விடாமல்,  ”இன்னும் கொஞ்சம் தாழ்த்தி இடது பக்கம்  சாய்த்து வலது கொம்பை வெளியே வர இடம் கொடுங்கள். இதோ வலது கொம்பு வெளியே வந்து விட்டது. இப்போது வலது பக்கம் தாழ்த்தி மடக்கி  இடது கொம்பு வெளியே  வர இடம் கொடுங்கோ”
யாருக்குமே  எதற்கு  பூந்தானம் ஏன்  இப்படி ஏதோ அர்த்தமில்லாமல் கத்துகிறார் என்று புரியவில்லை.
அப்போது கர்பக்ரஹத்திலிருந்து அர்ச்சகர்  ஆவேசமாக  வெளியே ஓடிவந்தார். அவர் சொன்னது எல்லோருக்கும் திகைப்பை மூட்டியது. அர்ச்சகர்  ஓடிவந்து  உத்ஸவ  விக்ஹத்தைப் பார்த்துப் படார்  படார்  என்று கன்னத்தில்  போட்டுக் கொண்டே   என்ன சொன்னார்?
”கிருஷ்ணனுக்கு  நான் அர்ச்சனை  பண்ணிக் கொண்டிருந்தபோது   குருவாயூரப்பன் மூல விக்ரஹம்  என் கண்ணுக்கு  ஒரு பெரிய  மஹிஷமாக  (எருமையாக ) மாறி தெரிந்தது.  பகவான்   எருமைக் குரலில்
“என் பக்தன் பூந்தானம்  நாராயண பட்டத்ரி சொன்ன அறிவுரைப்படி, என்னை  எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்த தரிசனம் கொடுத்தேன்.  என்  உத்ஸவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம்  பூந்தானம்  சொல்வது போல் என் கொம்புகள் சன்னதியிலிருந்து மெதுவாக  வெளியே  வரும்படி சாய்த்து நகர்த்தி  கொண்டு போகச்சொல்”
அர்ச்சகர்  இப்படிச்சொன்னவுடன்  பட்டத்ரிக்கு வியர்த்தது. உடல் நடுங்கியது.  தான் எவ்வளவு பெரிய  தவறு செய்தோம் என்று உணர்ந்தார்.  பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார். ”உங்க  மஹிமை, தூய பக்தி  அறியாத நான் தான் முழு முட்டாள்.என்னை க்ஷமியுங்கோ” என்று கதறினார்.பூந்தானத்துக்கு இதெல்லாம் காதில் விழவில்லை. அவர் மனம் பூரா  எப்படி  எருமையின் கொம்பு இடிக்காமல் சந்நிதியிலிருந்து வெளியே உத்ஸவ மூர்த்தியை கொண்டுவரவேண்டும் என்பதிலேயே இருந்தது.
” இன்னும் கொஞ்சம் தான்  வலது கொம்பு முழுதும்  வெளியே வந்துட்டுது. இடது  கொம்புதான்  சுவத்தில் இடிக்கிறது. கொஞ்சம்  கீழ் பக்கம் சாய்த்து  விக்ரஹத்தை லது பக்கம் நகர்த்தி வெளியே மெதுவாக  கொண்டு வாங்கோ” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
பல்லக்கு சுமப்பவர்கள் பூந்தானம்  சொன்னபடியே சாய்த்து எடுத்து வந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.  பல்லக்கு வெளியே வந்த மறுகணம் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.  எல்லோர்  காதிலும் ஒரு சப்தம் ஒலித்தது. உத்ஸவ விக்ரஹத்திடமிருந்து  “அம்மா!’ என்ற கம்பீர  எருமைக் குரல் எங்கும் எதிரொலித் தது.!
பட்டத்ரி கண்ணீரும் கம்பலையுமாக   ”குருவாயூரப்பா  என்னை மன்னிச்சுடு ”என்று சாஷ்டாங்கமாக  உத்ஸவ  விகிரஹத்தின் முன் தரையில் விழுந்தார்.  நான் சொன்னதை ஏற்று என்னப்பா குருவாயூரா  எவ்வளவு  எளிமையாக   உன் பரம பக்தன் பூந்தானத்துக்கு  எருமையாக காட்சி  தந்தாய். அவரிடம் நான் மன்னிப்பு  கேட்டு அவர் ஆசியை பெறுகிறேன் ” என்று மீண்டும்  பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
கிருஷ்ணன் பக்தவத்ஸலன்  என்று எடுத்துக் காட்ட  இந்த ஒரு சம்பவமே போதுமே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *