கீத கோவிந்தம் – நங்கநல்லூர் J K SIVAN ஜெயதேவர்
ஜெகந்நாதன் செலக்ஷன்.-
ஜெயதேவர் ஒரு ஒரிஸ்ஸா தேச பிராமணர். ஸம்ஸ்க்ரித நிபுணர். கல்வி கேள்விகளில் சிறந்து கிருஷ்ணனின் மீது அலாதி ப்ரியம் கொண்டு ராதையும் கிருஷ்ணனும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அதி உன்னத பிரேமையை அருமையான மனம் கவரும் ஸ்லோகங்களாக எழுதினார். அதற்கு ”கீத கோவிந்தம்” என்ற பெயர் கொடுத்தார். ஒரு காரண்டீ விஷயம் இப்போதே சொல்லிவிடுகிறேன் . அதைப் படித்து அனுபவித்தவர்கள் பிருந்தாவனத்தில் கண்ணன் இருந்த காலத்துக்கே கொண்டு செல்லப்படு கிறார்கள். அந்த ஸ்லோகங்கள் அவ்வளவு காந்த சக்தி கொண்டவை. நான் என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். மதுரா, பிருந்தாவனம் கோகுலம் எல்லாம் போக விரும்பி ஒரு குரூப்புடன் சென்றேன். நேரில் பார்த்து மகிழ்ந்தேன்.
ஜெயதேவர் காலத்தில் ஒரிசாவில் அந்த ஊருக்கு ஒரு ராஜா இருந்தான். அவன் பெயர் சாத்விக். பூரி ஜகன்னாதர் மீது அபார பக்தி.. அவன் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்தை படித்து விட்டு தானும் ஒரு புத்தகம் அதேபோல் எழுதினால் என்ன என்று யோசித்து கஷ்டப்பட்டு ஒரு புத்தகம் எழுதினான். அதற்கு நிறைய பிரதிகள் எடுத்தான். எல்லோரும் இதை படியுங்கள் என்று கொடுத்தான். ராஜாவின் புத்தகமாச்சே. படிக்காவிட்டால் தலையை வாங்கிவிடுவானே. எனவே தலையை காப்பாற்றிக்கொள்ள படிக்கவேண்டும். ஊரில் இருந்த அனைத்து பக்திமான்களும் விசனம் அடைந்தார்கள். இது எப்படி கீத கோவிந்தத்துக்கு சமமாகும்? கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா? என்று வருத்தமடைந்தார்கள். வெளியே சொல்ல முடியுமா. தலை தப்பாதே.
ராஜாவோ விடாமல் தனது புத்தகத்திற்கு முதல் மரியாதையும் மதிப்பும் தேடினான்.
(சாதாரண ஆள் நான் புத்தகம் எழுதி அதனால் உண்டாகும் தொந்தரவே படிக்கும் உங்களுக்கு பொறுக்க முடியவில்லையே. அதிகாரத்தையும் கூர்மையான வாளையும் கையில் வைத்துக்கொண்டு ராஜா புத்தகம் எழுதி, எல்லோரும் படியுங்கள் என்றால் …..!!!)
தாங்கமுடியாமல் போய் அனைத்து பண்டிதர்களும் பக்தர்களும் ஒருநாள் ராஜாவின் சபையில் நுழைந்தனர்.
” ராஜா நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்துடன் உங்கள் புத்தகம் போட்டி போட முடியாது..”
அவர்களுடைய நல்ல நேரம். ராஜாவுக்கு கொஞ்சம் நல்ல புத்தி இருந்த வேளை அது.
“ஏன் நானும் தானே அந்த ஜகந்நாதனை பணிந்து புகழ்ந்து எழுதியுள்ளேன் எந்த விதத்தில் என் புத்தகம் கீத கோவிந்தத்துக்கு சமம் ஆகாது?” என்றான் சாத்விக். எல்லோரும் நிறைய பேசி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ”இந்த விஷயத்தில் ஜகன்னாதனே முடிவெடுக்கட்டும்”
“ஜெகந்நாதா, நீயே முடிவு செய். ஜெயதேவர், சாத்விக் ராஜா , ஆகிய ரெண்டு பேர் எழுதிய புத்தகங்களையும் உன் சந்நிதியில் இன்று இரவு வைத்து கர்ப்ப கிரகம் பூட்டி விடுகிறோம். நாளை காலையில் எந்த புத்தகம் உயர்ந்ததோ அது உள்ளே இருக்கும். மற்றதை ஜகந்நாதா, நீயே கர்பக்கிரஹத்துக்கு வெளியே எறிந்து விடு”
இரவு அவ்வாறே ஜெயதேவரின் கீத கோவிந்தமும் ராஜா எழுதிய புத்தகமும் ஜெகந்நாதன் முன் வைக்கப் பட்டது. பூஜை எல்லாம் முடிந்து கர்ப க்ரஹம் பூட்டப்பட்டது மறுநாள் காலையில் ராஜா உட்பட அனைவரும் ஆவலாக கோவிலில் நின்றனர். கர்பக்ரஹத்தின் வாசலுக்கு வெளியே ராஜாவின் புத்தகம் கிடந்தது . பூட்டை திறந்ததும் ஜெகந்நாதன் கையில் கீதகோவிந்தம் இருந்தது. ராஜா சாத்விக் ஜெகந்நாதனிடம் முறையிட்டான்.
“ஜெகன்னாதா, நானும் உன் பக்தன். நானும் உன்னைத் தானே பாடினேன். எப்போது என் பக்தியை நீ ஏற்கவில்லை என்று தெரிந்துவிட்டதோ, நான் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை” என்று தனது உடைவாளை உருவினான்.
”சாத்விக் , என்ன அவசரம் உனக்கு? நிதானமாக கேள். உன் பாடலில் எனக்கு பிடித்த 24 ஸ்லோகங்களை நான் ஏற்கனவே ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் சேர்த்து விட்டேனே” என்று சிரித்தான் ஜெகந்நாதன் . ராஜா மகிழ்ந்தான். ஜெயதேவரின் பெருமையை உணர்ந்து அடி பணிந்தான் அவருடைய சிஷ்யனானான்