திரும்பிய கிருஷ்ணன் – நங்கநல்லூர் J K SIVAN
இன்னும் நாலே நாள்.அடுத்த திங்கட்கிழமை 26.8.24 அன்று இந்த வருஷமும் ஜாம் ஜாம் என்று கிருஷ்ணன் பிறந்தநாளை ஜன்மாஷ்டமியை கொண்டாடப் போகிறோம். இப்போதிலிருந்தே தினமும் கிருஷ்ணன் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன். இனிமேல் தினமும் விடாமல் கிருஷ்ண மழை தான் பெய்யப் போகிறது. என்னோடு சேர்ந்து நீங்களும் ரசியுங்கள், ருசியுங்கள். சந்தோஷம் தானே?
++
எங்கும் ஒரே பொட்டல் காடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேய்ச்சல் நிலம். பெரும்பாலும் அங்கிருப்ப வர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள் தான். அந்த ஊர் வேறு எதுவுமில்லை. கர்நாடகாவில் உள்ள ஒரு குக் கிராமமான பாதா. குருபா என்று அவர்களுக்கு பெயர். இந்த குருபா குலத்தை சேர்ந்தவர் பீரப்பா. அவர் மனைவி பச்சம்மா. பீரப்பா விஜயநகர ராஜா வுக்கு ஒரு சேனைத் தளபதி. சிவ பக்தர்.
பீரப்பா காலத்தில் வைஷ்ணவ மகான் ராமானுஜர் கர்நாடகாவில் புதிதாக ஸ்ரீ வைஷ்ணவ கோட்பாடு களை பரப்பி நிறைய குருபாக்கள் வைஷ்ணவர்களா யினர். திருப்பதி பாலாஜியை குல தெய்வமாக கொண்டாடினார்கள். பீரப்பா, பச்சம்மா தம்பதிக் கு ஒரு மகன். திம்மப்பா. குல தெய்வமான திருப்பதி பெருமாள் பெயரால் திம்மப்பா. வருஷங்கள் ஓடியது. திம்மப்பா வளர்ந்தான். வில் வாள் மல்யுத்தம் எல்லாம் கற்று தேறினான். அப்பாவின் காலத்துக்கப்புறம் அவனும் கிருஷ்ண தேவராயரின் படையில் தளபதியானான். ராஜாவின் நம்பிக்கைக்கு பாத்திர மாகி நிறைய பரிசுகள் பெற்றான். ராஜாவுக்கு அவனை பிடித்தது, அவனுக்கு ராஜாவை பிடித்தது.
திம்மப்பா தனது சொந்த நிலத்தில் ஒருநாள் வேலைசெய்து குழி ஒன்று நோண்டப்போக அதில் ஒரு புதையல் கிடைத்தது. தங்கக்காசு நிறைந்த பெரிய பானை ஒன்று கிடைத்ததை ஊர்க்காரர்கள் வந்து பார்த்து மெச்சி திம்மப்பாவை ”கனக நாயக்” என்று அழைத்தார்கள். (தங்கம் உடையவன்). பெருமாள் பக்தன் அல்லவா. திம்மப்பா காசிநெள்ளி என்கிற ஊரில் பெருமாள் கோவில் ஒன்று அந்த பணத்தை வைத்து கட்டினான். பெருமாள் பெயர் ஆதிகேசவர் . திம்மப்பா ராஜாவுடன் வேட்டைக்கு போவான். மிருகங்களை சாதுரியமாக வேட்டை யாடுவான்.
அன்றாடம் பெருமாளை வணங்காமல் எங்கும் எந்தவேலையும் ஆரம்பிக்க மாட்டான். ”ஆதிகேசவ பெருமாளை மனங்கனிந்து வேண்டுவான். ராஜாவின் நெருங்கிய நட்பு அவனுக்கு பரம சந்தோஷம் கொடுத்தது.
ஒரு நாள் கனவில் ஆதிகேசவ பெருமாள் ”கனகா, நீ எனக்கு தாசனாக இறேன்” என்றார்.
‘நான் இங்கே ராஜாவிடம் சௌக்யமாக இருக்கிறே னே. நான் எதற்கு இதெல்லாம் விட்டு விட்டு உனக்கு தாசனாக வேண்டும்?” என்று திம்மப்பா திருப்பிக் கேட்டான். பெருமாள் பதில் சொல்லவில்லை.
காலம் உருண்டது. கனகனின் பெற்றோர் மனைவி எல்லாரும் மாண்டார்கள். ராஜாங்க உத்தியோகமும் விருப்பமளிக்க வில்லை. வேட்டையாடுவது நின்று போயிற்று. அவ்வப்போது ஆதிகேசவனை தரிசிப்பான்.
மீண்டும் ஒரு இரவில் ஆதிகேசவன் தோன்றி ”நீ எனக்கு தாசனாவாயா?” அதே பதில் .
நாட்கள் நகர்ந்தன. எதிரிகளோடு கிருஷ்ண தேவரா யர் படை மோதியது. கனகன் படையை விட எதிரிப்படை பலம் வாய்ந்தது. இருந்த போதிலும் சாகசமாகவும் வீரமாகவும் கனகன் போரிட்டான். உடலெங்கும் காயம். மூர்ச்சையாகி தரையில் சாயப்போகும் நேரம் மனம் ஆதிகேசவனை நினைத்தது. அவனையறியாமலேயே ” கேசவா” என்று அடிவயிற்றிலிருந்து தீனமாக கூவினான். விழுந்தான். கனகன் படை நிர்மூலமாக அழிந்த தாகவும் கனகன் மயங்கி விழுந்ததை இறந்துவிட்டதாக கருதி எதிரிகள் போய் விட்டார்கள்.
பிணம் தின்னும் கழுகுகள் மேலே வட்டமிட்டன. பிணங்களுக்கு இடையே குற்றுயிரும் குலையுயி ருமாக இருந்த கனகனை யாரோ ஒருவன் கவனித்து சிஸ்ருஷை செய்தான். மடியில் போட்டுக்கொண்டு மயக்கம் தெளிய வைத்தான். நீர் கொடுத்தான். கண்கள் திறந்தன. தெம்பு வந்தது. மெலிதாக பேச்சும் வந்தது. கையெடுத்து வணங்கிய கனகன் கேட்டான்;
”என் உயிரைக் காப்பாற்றின நீங்கள் யார் ?”
”என்னை மறந்துட்டியா? நான் உனக்கு தெரிஞ்சவன் தான். ஒரே ரத்த வெள்ளமாக இருக்கிறாயே. இனிமேயாவது ஹரி தாசனாக மாறிவிடு”
”ஆஹா அப்படியே செய்கிறேன். முதலில் உடல் குணமாகட்டுமே. யோசிக்கிறேன்”
ஆதிகேசவன் கனகனின் உடலை தடவி கொடுத்தான். காயங்கள் அனைத்தும் மறைந்தன.
”சுவாமி நான் நினைக்கும்போதெல்லாம் நீங்கள் என் முன் தோன்றுவதாயிருந்தால், சம்மதித்தால் நான் இப்போதே ஹரி தாசனாகிறேன் ”
”ஆஹா அப்படியே, நீ சொன்னதற்கு சம்மதம்.”
கனகன் கண் முன் ஆதிகேசவர் சங்கு சக்ரதாரியாக தோன்றினார். அவர் கால்களில் தடால் என்று விழுந்த கனகன் எழுந்திருக்கும்போது கனகதாசரானார்.
கேசவா நாராயணா, மாதவா, கோவிந்தா, என்ற ஒரு கன்னட பாடல் அவரிடமிருந்து புறப்பட்டது. இது விஷ்ணுவை 24 நாமாக்களில் போற்றி பாடப்பட்ட தேவர் நாமா.
சிறந்த மாத்வ குருவான வ்யாசராஜரிடம் சிஷ்யராக வேண்டியபோது குருவுக்கு தெரிந்து விட்டது இவர் யாரென்று. கனகதாசர் யமதர்மனின் அம்சம்.
கனகதாசரிடம் குரு விசேஷ அபிமானம் வைத்திருப் பதில் மற்ற சிஷ்யர்களுக்கு அதிருப்தி. இது குருவுக்கு தெரிந்தது. ஒரு நாள் அவர்கள் அனைவரிடமும் ஆளுக்கொரு பழம் கொடுத்து ‘இதை யாரும் பார்க் காத இடத்தில் சாப்பிட்டு விட்டு வாருங்கள் ” என்றார்.
அனைவரும் திரும்பினர். கனகதாசர் கையில் மட்டும் பழம் அப்படியே இருந்தது.
”கனக தாசா ஏன் நீ பழத்தை உண்ணவில்லை?”
”யாரும் பார்க்காத இடம் எனக்கு தெரியவில்லை”
”ஏன் தனி இடம் எதுவும் கிடைக்கவில்லையா உனக்கு?. இதோ மற்றவர்கள் அப்படித்தானே யாரும் பார்க்காத இடத்தில் பழத்தை சாப்பிட்டிருக்கிறார்கள். ”
‘
‘குரு தேவா, யாரும் பார்க்காத இடம் இல்லை சுவாமி. எங்கும் என்னை எப்போதும் ஸ்ரீ ஹரி பார்த்துக் கொண்டே இருக்கிறானே. நான் எப்படி சாப்பிடுவது?”
மற்ற சிஷ்யர்கள் அசந்து நின்றனர்.
‘ இப்போவாவது கனக தாசரைப் புரிந்து கொண்டீர்க ளா” என்றார் குரு.
கனகதாசர் விஷ்ணுவை தரிசிக்கும் பாக்கியம் கொண்டவர் என்று அறிந்த சிஷ்யர்கள் தங்களுக்கும் தரிசனம் செய்து வைக்க வேண்டினர். கனகர் குருவை நோக்க அவரும் ”அப்படியே செய்வாய்” என்று ஆசி வழங்கினார்.
அவர்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டி அனைவ ரும் குழுமி இருக்க கனகதாசரும் குருவும் பூஜையில் ஈடுபட்டனர். நேரமாகியது. இருவரும் பூஜையில் த்யானத்தில் இருக்கும்போது எங்கிருந்தோ ஒரு தெரு நாய் கதவு திறந்திருந்ததால் உள்ளே வந்து விட்டது. சீடர்கள் அதை அடிக்காத குறையாக விரட்டி கதவை சாற்றினார்கள். பூஜையெல்லாம் முடிந்து கனகதாச ரும் குருவும் சந்தோஷமாக சிஷ்யர்களை பார்த்தனர். சிஷ்யர்கள் ஏமாற்றமடைந்தனர்.
”எங்கே நாராயணன் வரவில்லையே,எங்களுக்கு தரிசனம் தரவில்லையே?”
”தரிசனம் தந்தவரை நீங்கள் அடித்து விரட்டி விட்டீர்க ளே” என்றார் குரு.
”அடடா கடவுள் நாய் வடிவத்திலும் வருவார் என அறியாமல் போய்விட்டோமே ” என்று அவர்கள் வருந்தினர். மறுநாள் பூஜை முடிந்து ஒரு கரு நாகம் உள்ளே நுழைந்து குரு இட்ட பாலை குடித்து விட்டு சென்றது. சிஷ்யர்கள் பாம்பைப் பார்த்து ஓடி வெகு நேரமாகி இருந்தது. இது போன்ற பல நிகழ்ச்சிகள்.
கிருஷ்ணனை தரிசனம் செய்ய அவரது ஆவல் அவரை சுண்டியிழுக்க உடுப்பிசென்றார். கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. ஏன்? பிறவி யில் மேல் வகுப்பு இல்லையாம்?
”கிருஷ்ணா என் மனத்தில் உள்ள உன்னை வெளியே இங்கு கோவிலில் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும்” என்று பிரயாசை பட்டார். உள்ளே செல்ல முடியாது. எப்படியோ மெதுவாக உள்ளே நகர்ந்துவிட்டார். யாரோ பார்த்து முறையிட நிர்வாகத்தார் குற்றம் செய்ததற் காக அவர் விழிகளைக் குருடாக்க கட்டளை யிட்டனர். ஆனால் கனகதாசரின் தேனினுமினிய பாடல்களைக் கேட்டு தண்டனையின்றி அவரை கோவிலை விட்டு வெளியேற்றி னார்கள்.
அவர் கோயிலின் பின்னே சென்று சுவற்றின் பின் நின்று “ஹே. கிருஷ்ணா! “நான் உன் பக்தனல்லவா? எனக்கு உன் தரிசனம் கிடைக்கவில்லையே. பிறவிப் பயன் என்னை உன் தரிசனம்கிட்டாமல் செய்கிறதே!” என குமுறினார்
இங்கு தான் இப்போது தான், அந்த அதிசயம் நிகழ் ந்தது. கிருஷ்ணன் கர்பக்ரஹத்தில் கிழக்கே வாசலை பார்த்து நின்றவன் மேற்கு பக்கமாக திரும்பி சுவற்றை பார்த்து நின்று கொண்டான். கர்பக்ரஹ பின் சுவர் பிளந்தது. பிளவின் வழியே சுவற்றுக்கு பின்னால் விரட்டப்பட்ட கனகதாசரை பார்த்தவாறு கிருஷ்ணன் நின்றுகொண்டான். கனகதாசருக்கு கிருஷ்ணனின் திவ்ய தரிசனம் கிட்டியது. பிளந்த சுவர் ஒரு ஜன்னலாக மாற்றப்பட்டு (கனகன கிண்டி என்று பெயர்) இன்று வரை கிருஷ்ணனை உடுப்பியில் அந்த ஜன்னல் வழியாகவே தரிசனம் செய்கிறோம்.
தவறு செய்த அனைவரும் கனகதாசர் காலடியில் விழுந்தனர் என்பது எல்லா கதைகளிலும் வரும் ஒரு வழக்கமான வாக்கியம். ஆனால் அன்று முதல் நினைத்த போதெல்லாம் கிருஷ்ணன் கனகதாசர் முன் தோன்றினான். நாம் எப்படி ஒருவரை யொருவர் பார்க்கிறோமோ அவ்வாறே கிருஷ்ணனும் பக்தரும் சந்திப்பது வழக்கமாயிற்று. கிருஷ்ணன் பக்த வத்சலன் அல்லவா?