காலத்தின் கோலம் – நங்கநல்லூர் J K SIVAN
நேரம்,காலம் என்பதை ஆங்கிலத்தில் டைம் TIME என்கிறோம். நேரமாச்சு, டைமாச்சு, என்று சொல்லாத மனிதர்களே கிடைடயாது. இந்த டைம் நமது வாழ்வில் பல வேடிக்கைகளை செய்யும் ஒரு அபூர்வ வஸ்து . நமது வாழ்வில் நாம் அனுபவிக்கும் சில நேரங்களை உதாரணமாக சொல்கிறேன்.
யாருக்காவது நாம் காத்திருக்க நேர்ந்தால் அடிக்கடி கடிகாரத்தை பார்க்கிறோம், மொபைலில் டைம் என்ன என்று பார்க்கிறோம். இன்னும் ஒரு இருபது நிமிஷம் இருக்கும்போதே ஏதோ மணிக்கணக்காக காத்திருப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. ஏன் நேரம் ஓடமாட்டேன் என்கிறது?, இவ்வளவு மெதுவாக போகிறதே! என அங்கலாய்க்கிறோம்.
எங்கோ ஒரு கல்யாணத்துக்கு போகவேண்டும், வண்டி இன்னும் வரவில்லையுயே, இன்னும் ஒரு மணி நேரத்தில் ரயில் நிலையத்துக்கு போகவேண்டும் என்றால் மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி முடிக்கும்போது அடடா ஏன் இந்த நேரம் இவ்வளவு வேகமாக பறக்கிறது. ஏன் டைம் இவ்வளவு வேகமாக போகிறது. ரொம்ப லேட் ஆகிவிட்டதே கிளம்ப.. என்கிறோம்.
ரொம்ப சோகமாகவோ,துக்கமயமாக இருக்கும் சமயத்தில் அது வேறே கதை. காலம் சீக்கிரம் நகர மாட்டேன் என்கிறதே என்கிறோம்.
நண்பர்களோடு, எங்கோ உல்லாசமாகவோ இருக்கும்போது சே இந்த டைம் ஏன் இவ்வளவு கருணை யற்றதாக இருக்கிறது.கண் மூடி கண் திறப்பதற்குள் இந்த சந்தோஷ நேரத்தை சட்டென்று குறைத்து விடுகிறதே! என்கிறோம்.
வியாதியால், வலியால் தாங்கமுடியாமல் துடிக்கும் போது ” எனக்கு டைம் சீக்கிரம் வந்து தொலைக் காதா?”என்று முனகுபவர்களை தெரியுமல்லவா?
ஒரு வேலையுமில்லாமல் சும்மா இருக்கும்போது, நேரம் ஆமை வேகத்தில் போவது போல் அலுத்துக் கொள் கிறோம். ”நேரத்தைப் போக்குவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஸார்”. பொழுதே போக மாட்டேன் என்கிறது. என்னசெய்வது என்றே தெரியவில்லை. காலத்தை ஓட்டுவது முடியவே இல்லை ஸார்” என்கிறோம்.
மேலே சொன்னதற்கெல்லாம் காரணம் நேரம், டைம் எதுவும் இல்லை, நமது மனோ நிலை என்பது தான் சரியான விடை. நமது உணர்ச்சிகளுக்கு அனுபவங்களுக்கு தக்க மாதிரி நேரத்தை அளக்கிறோம். கணக்கிடுகிறோம்.
கடிகாரம் பாவம் பேசாமல் சுவற்றில் அது பாட்டுக்கு ஒரே சீராக தான் ஓடிக்கொண்டிருக்கிறது. காலண்டர் கடிகாரம் எல்லாமே காலம் காட்டுபவை மட்டும் அல்ல நமது மனத்தின் ஓட்டத்துக்கு தக்கபடி நகர்பவையாக தான் நம் கண்ணுக்குப் படுகிறது. வேடிக்கையான மனப்போக்கு. ஆங்கிலத்தில் ஒருவரை வாழ்த்தும் போது அதனால் தான் நாம் ‘HAVE A NICE TIME என்று வாழ்த்துகிறோம். வாழத்தப் படுகிறோம்.