ரயிலில் ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN
சமீப காலத்தில் எனக்கு அறிமுகமான திருமதி உமா அபர்ணா அதி சுறுசுறுப்பான புத்தக வெளியீட்டாளர். அவரது லக்ஷியம், எப்படியாவது வயதான குடும்பத்தலைவிகளை, ஒய்வு பெற்ற உத்யோகஸ்தர்களான பெண்களை எழுத வைக்கவேண்டும், அவர்களது தனித்வ எழுத்தாற்றலை, திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பது. அஷ்டதிக் கஜங்களாக, அஷ்ட லக்ஷ்மிகளாக சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைப்பு குறிப்பு கொடுத்து எழுத வைத்து ஒரு கின்னஸ் ரெகார்ட் பண்ணி இருக்கிறார். 52 எழுத்தாளர் களைக் கொண்டு 62 புத்தகங்கள் ஒரே வருஷத்தில்! புஸ்தகா நிறுவனம் புத்தகங்களை கடகடவென்று வெளிக் கொண்டுவந்து விடுகிறது. pachyderm என்ற நிறுவனம் உமா அவர் மகள் லக்ஷ்மி ப்ரியா வோடு சேர்ந்து நடத்தும் அற்புத நிறுவனம். சிறப்பாக பணிபுரிந்து புத்தக உலகத்தில் கொடிகட்டி பறக்கிறது.
உமா இப்படி கண்டெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் திருமதி கல்பனா லக்ஷ்மிநரசிம்மன்.(இவர் வயதானவர் இல்லை) சுறுசுறுப்பான குடும்பத்தலைவி. எழுத்துலகில் எப்படி ஒளிவீசுகிறாரோ அதே திறமையுடன் தனது வியாபார நிறுவனத்திலும், சமூக சேவையிலும், ஆன்மீக ஈடுபாடுகளிலும் தனக்கென ஒரு இடம் கொண்ட முதல்வரிசையாளர். என் உறவினர் என்பதில் எனக்கு ஒரு பெருமை.
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாள் நல்லூர் நரசிம்ம ஜெயந்திகளிலும் ராதா கல்யாண உற்சவங்களிலும் அவர் குடும்பத்தோடு ஒட்டு மொத்தமாக பங்கேற்று அற்புத நிகழ்ச்சிகள் நமக்கு கிடைக்கிறது. சமீபத்தில் சென்னையில் திருவையாறு போல சென்னையில் தேப்பெருமாநல்லூர் விழா விருகம்பாக்கம் நடேசன் நகர் சிவ விஷ்ணு ஆலயத்தில் ரெண்டு நாள் ராதா கல்யாணமாக நடந்த போது முதல் நாள் நிகழ்ச்சியை நேரில் அனுபவித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
அங்கே தான் கல்பனா தான் சமீபத்தில் எழுதி வெளியிட்ட தாசரதி, மனதிற்கினியான் என்ற இரு புத்தகங்களை எனக்கு அளித்தார்.
இரண்டிலுமே கல்பனாவைத் தவிர திருமதி கீதா வீரராகவன், வசந்தா கோவிந்தன் போன்ற ஜாம்பவி எழுத்தாளர்களும் இரண்டிரண்டு தலைப்புகளில் கதை எழுதி இருக்கிறார்கள்.மனதிற்கினியானில் திருமதி கே. சரண்யாவின் ஒரு கதை .
‘தாசரதி’ பற்றி மட்டும் இப்போது சொல்கிறேன். வால்மீகிரிஷியின் வாழ்க்கை, அவர் எழுதிய ராமாயணம் தான் ”தாசரதி” என அழைக்கப்படும் ராமகாதை, ராமாயணம்.
நான் ராதா கல்யாணத்தில் அஷ்டபதி 16 ஸ்லோகங்களில் ஜெயதேவரின் ராதாவை,கிருஷ்ணனை காதால் கேட்டு சுகமாக அனுபவித்துக்கொண்டே கண்ணால் கல்பனாவின் ராமனை ”தாசரதி” யில் பருகினேன். எனக்குத் தெரியாத ஒரு உத்தி, சாமர்த்தியம், எப்படி சரியான சுருக்கமான வார்த்தைகளை பிரயோகித்து எழுதுவது? என்பது.கல்பனாவிடம் நான் கற்றுக்கொள்ள நிறைய சங்கதிகள் இருக்கிறது.
வால்மீகி ராமாயணத்தின் முதல் இரு காண்டங்களை ராகவன் என்ற ஒய்வு பெற்ற பள்ளி முதல்வர் ஓடும் ரெயிலில் சக பிரயாணிகளுக்கு சொல்வது போல கல்பனா தாசரதியை துவங்குகிறார். தாசரதியின் 122 பக்கத்தில் 52 பக் கத்தில் ரத்நாகர் எனும் வேடன், ”மரா மரா” ஜெபித்து வால்மீகியாகி ராமாயணம் பாடுகிறான். பாயசத்தில் உருவான ராமன், விஸ்வாமித்ரருடன் காட்டுக்குலக்ஷ்மணனோடு சென்று யாகத்தை காத்து, அரக்கி, அரக்கர்களை கொன்று, மிதிலை நடந்து பழைய கனமான சிவதனுசை எளிதில் தூக்கி நிறுத்தி ஒடித்து, சீதையைக் கைப்பிடிக்கிறான். வரும் வழியில் பரசுராமன் கர்வத்தை அடக்கி, அயோத்தியில் கைகேயியின் வரத்தால் சீதையோடு மரவுரி தரித்து 14 வருஷம் காட்டுக்கு சென்று, குகனை சந்தித்து, பராதனைச்சந்தித்து, அவன் எவ்வளவோ முயன்றும் ராமனை அயோத்திக்கு திரும்ப கொண்டுவர முடியாமல் ராமனின் பாதுகைகளை வாங்கி ராஜாவாக்கி, பரதன் தானும் மரவுரி தரித்து நந்திக்ராமத்தில் 14 வருஷம் காத்திருக்கிறான். இதற்கிடையில் சூர்ப்பனகை விஜயம் ஒரு காமெடி ஸீன்.
ராகவன் என்ற பள்ளி முதல்வரின் பிரசங்கம் முலமாக அயோத்தி செய்யும் ரயிலில் அனைவரும் அவர் மேலே சொன்னவைகளை ஓடும் ரயில் விறுவிறுப்பாக கேட்பதாக கல்பனாவின் எழுத்து ரயிலை விட வேகமாக ஓடுகிறது. கதை எழுதுவது என்பது கஷ்டமானது. கேட்பது சுலபம்.