ஒரு சின்ன பயிற்சி. – நங்கநல்லூர் J K SIVAN
எண்பதுக்கு மேல் இது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. திடீர் திடீர் என்று ஞாபக மறதி வந்து விடுகிறது. அடிக்கடி நினைவிருக்கும் ஒரு பாட்டு மறந்து போகும். பெயர்கள் மறந்து போகும், ஊர்கள் மற்றும் சில முகங்கள் மறந்து போகும். அப்புறம் சட்டென்று நினைவுக்கு வரும். பேனா எங்கே வைத்தேன்? மூக்குக் கண்ணாடியைக் காணோமே? கல்யாண வீட்டில் செருப்பை எங்கோ வைத்துவிட்டு எங்கேயோ தேடுவது போன்ற அவஸ்தைகள் அடிக்கடி வரும். அடேடே எங்கே நான் கொண்டுவந்த மஞ்சள் பை? அதற்காகத்தான் தோளில் பூணல் மாதிரி ஒரு தோள்பையைத் தொங்கவிட்டுக்கொண்டு எங்கேயும் அதை சுமந்து போகி றேன். மறக்காமல் என் வீட்டு அட்ரஸ் டெலிபோன் நம்பர் அதில் எழுதி வைத்திருக்கிறேன். நான் ஒரு காலத்தில் ஞாபகசக்திக்குப் பேர் போனவன்.
ஒவ்வொருவருக்கும் மூளை ஒரு பிரதான அங்கம். எல்லோருக்கும் ஒரே அளவு தான். வயிறு போல மூளைக்கும் ஆகாரம் தேவை. உடல் பயிற்சி போல EXERCISE தேவை. நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நாம் எதை சாப்பிடுகிறோமோ அது நமது மூளையையும் பாதிக்கிறது. ஆளி விதைகள் என்பார்களே FLAX SEEDS அது மூளைக்கு ரொம்ப நல்லது. ஞாபக சக்தியை அதிகரிக்கும். பாதம் பருப்பு, பச்சை வேர்க்கடலை, சூப், பொட்டுக்கடலை, சோயா பீன்ஸ், காலிஃப்ளவர், இதெல்லாம் மூளைக்கு நல்ல சிறந்த உணவுகள். பச்சை காய்கறிகள்,கீரைகள் உடம்புக்கும் மூளைக்கும் சத்து அளிப்பவை. பழங்களில் பப்பாளி, திராக்ஷை, தர்பூசணி ரொம்ப சூப்பர். டீ அடிக்கடி குடிப்பது சிலருக்கு ஊக்க சக்தி கொடுக்கிறது.
தினமும் புதிர்கள்,சுடோகு SUDOKU போடும் பழக்கம் எனக்கு ரொம்ப உதவுகிறது. செஸ் விளையாட்டு மூளைக்கு நல்ல பயிற்சி. ஆனால் விளையாட ரெண்டு பேர் வேண்டுமே? இன்னொரு ஆளுக்கு எங்கே போவது? நல்ல பாட்டுகளைக் கேட்டு கூடவே பாடுவது தெம்பு அளிக்கிறது.
அதிக நேரம் ப்ராணாயாமம் பண்ணுவது சௌகர்யமாக இருக்கிறது. மூச்சு பயிற்சி நுரையீரலுக்கும் நல்லது,மனதுக்கும் சந்தோஷம். மூளைக்கும் சிந்திக்க ரொம்ப உதவும். மூளைக்கு ரெஸ்ட் என்பதே கிடையாது. தூங்கும்போது கூட அசுரத்தனமாக வேலை செய்கிறது. என்னென்னமோ எண்ணங்களை கிளப்பி விடுகிறதல்லவா?
எனக்கு என் கம்ப்யூட்டர் ஒரு வரப்பிரசாதம். அடேயப்பா எத்தனை எத்தனை விஷயங் களை அன்றாடம் நான் புதுசு புதுசாக தெரிந்து கொள்கிறேன்.ரசிக்கிறேன். அதை சுருக்கி தமிழில் உங்களுக்கும் சொல்கிறேன். இதில் எனக்கு நேரம் ஓடுவது தெரிவதே இல்லை. குறைந்தது 18 மணி நேரம் ஒவ்வொரு நாளும் இப்படி செலவழிப்பதில் களைப்பு இல்லை, புத்துணர்ச்சி தான் கிடைக்கிறது.
ஆனால் அப்படி நான் தரும் விஷயம் உங்களுக்கு பிடிக்கிறதா? என் பெயரைப் பார்த்தவுடனே முகநூலை, வாட்டசாப்பை WHATSAPP, FB யை விட்டு ஓடவைக்கிறதா என்று தான் தெரியாது. யாரும் திட்டி இனிமேல் நீ எழுதாதே என்று சொன்னாலும் நிறுத்து வேனோ என்று தெரியவில்லை.
என் ஐந்து வயது பேத்திக்கு நானாக இட்டுக்கட்டி நிறைய கதைகள் சொல்கிறேன். அதில் பாதிக்கு மேல் பழைய படித்த விஷயங்கள், மீதி கட்டுக்கதை. இட்டுக்கட்டு. அதைக் கேட்கும்போது அவள் முகத்தில் ஸ்வாரஸ்யம் தெரிகிறது.
என் வயதை ஒத்த நண்பர்களே, ஒவ்வொருநாளும் சில நிமிஷங்கள் நன்றாக நிமிர்ந்து உட்காருங்கள், கண்களை மூடி, மூச்சை நன்றாக மெதுவாக உள்ளிழுத்து,கொஞ்சம் அடக்கி, பிறகு மெதுவாக வெளியே விடுங்கள். நீங்கள் மூச்சை இழுப்பது, உள்ளே தங்கவைப்பது, வெளியே விடுவதில் கவனம் செலுத்துங்கள். இது மூளைக்கும் நல்லது, நுரையீரலுக்கும்நல்லது. இது தான் ஸார் ப்ராணாயாமம் . மூச்சை இழுத்து, வெளியே விடும் நேரம் ஏதாவது காயத்ரி மந்திரம்,ஸ்லோகம் நினைவில் இருந்தால் இன்னும் விசேஷம். பூரகம்,கும்பம், ரேசகம் இது தான்.
இன்று காயத்ரி ஜபம்.எத்தனை மணி நேரம் காயத்ரி ஜபம் இப்படி செய்தேன் என்று கணக்கே இல்லை.