பெரிசுகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சி- நங்கநல்லூர் J K SIVAN
பெரிசுகளைப் பற்றி எழுத எனக்கு தகுதி உண்டு. ஏன் என்றால் நானும் 85. நிறைய விஷயங்களை கவனித்து, நானும் நடந்து கொண்ட சில விஷயங்களைத்தான், என் அனுபவ பூர்வ ஆராய்ச்சி என சொல்ல முடிகிறது.
மற்ற தேசங்களில் எப்படியோ, நமது பாரத தேசத்தில் பெரிசுகள் தியாகிகள். வாழ்க்கை பூரா எளிமையாக ஏழையாகவே வாழ்ந்து சாகும்போது பணக்காரனாக மறைபவர்கள் என்று சொல்ல தோன்றுகிறது. பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்து,தனக்கு என்று ஒன்றும் தனியாக சுகமாக வாழாமல், அனுபவிக்காமல், அடுத்த தலைமுறைக்கு வைத்துவிட்டு செல்பவர்கள். கிருமிகள் என்று சொல்லலாமா?
பெரிசுகள் நிலம், வீடு, தோட்டம், தங்கம் வாங்குவதில் மட்டுமே ஈடுபாடு கொண்டு வாழ்பவர்கள். இக்காலத்து தலைமுறை அப்படியல்ல, அவர்கள் எண்ணம் விசாலமானது.நிறைய விஷயங்கள் பெரிசு களுக்கு தெரியாததெல்லாம் அவர்கள் அறிவார்கள். அவர்கள் போக்கு தனி. இளம் தலைமுறை எதிலும் குறைந்த ஈடுபாடு கொண்டவர்களாக அவசரக்காரர்களாக இருக்கிறார்கள்.
பெரிசுகளுக்கு க்ரிப்டோ கரன்சி CRYPTO CURRENCY, கம்மோடிட்டி மார்க்கெட், ஸ்டாக்,மியூச்சுவல் பண்ட் , MF, பிட்காயின், BITCOINS, பற்றி என்ன தெரியும்?
எப்போதும் பழைய ரூபா அணா பைசா, விலைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் பெரிசுகள் கிடுகிடுவென்று ஏறும் விலைவாசிகளைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு செல்வுகளை குறுக்கிக் கொண்டு, மேலும் சிக்கனமாக வாழ தங்களை சுருக்கிக் கொள்பவர்கள். நத்தைகள், ஆமைகள்.
தேகத்தில் வியாதிகளுக்கு நிவாரணத்துக்கு ஆஸ்பத்திரி, டெஸ்ட்கள், டாக்டர்கள் வாங்கும் கட்டணம் பெரிசுகளை தலை சுற்ற வைக்கிறது. அவர்களது பலகால சேமிப்பு கணநேரத்தில் காணாமல் போவது அவர்களுக்கு பெரிய இடி, ஷாக்.எங்கள் கால வைத்தியத்தில் இவ்வளவு செலவு கிடையாது என்று முனகுபவர்கள். பத்தியம், மூலிகை,நாட்டு வைத்தியம் எல்லாம் குணப்படுத்தும் என்று இன்றும் நம்புபவர்கள்.
பிள்ளைகள் பெண்களின் படிப்பு, உத்யோகம், வியாபாரம் ஆகியவற்றுக்கு தங்கள் முழு சேமிப்புகளை தானம் செய்யும் பெரிசுகளை நான் அறிவேன். இவற்றுக்காக தங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு நாளை எண்ணிக்கொண்டு எளிமையாக வாழ்பவர்கள். காலத்தோடு ஒட்டி வாழ கற்றுக் கொள்ள தெரியாத ஏமாளிகள். மாறி வரும் சமுதாயத்தில் மாற்றங்களை புரிந்துகொண்டு வாழ்க்கை முறையை அதற்கேற்ப அனுசரித்து நடந்துகொள்வது பெரிசுகளுக்கு கஷ்டமாக இருக்கிறது.
எப்படி தான் சுகமாக வாழவேண்டும் என்ற நினைப்பே இல்லாமல், நண்பர்கள் அதிகமில்லாமல், வெளியே நாலு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ளாமல், வீட்டோடு இருப்பவர்களாகி விட்டார்கள். பேரன் பேத்தி களோடு விளையாடலாம் என்றால் பேரன் பேத்திகளுக்கு பெரிசுகளோடு பேசவே நேரம் இல்லை. பள்ளிக்கூடம், அதை விட்டால் பல க்ளாஸ்கள், CLAASES ,ட்யூஷன் என்று விலகியே இருப்பதால், பெருசுகள் ரெண்டும் கெட்டானாக வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வார கடைசி ரெண்டு நாட்கள், சனி ஞாயிறு, விடுமுறை நாட்களில் இளசுகள் வெளியே போய் சாப்பிடுகிறார்கள். நாள் நக்ஷத்திரம்,திதி பார்க்கும் பெரிசுகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வெளியே போய் சாப்பிட பிடிக்காதவர் களாக வீட்டிலே இருக்கவே விரும்புகிறார்கள். இளசுகளின் பேச்சு, ஆடை, பழக்க வழக்கங்கள் பெரிசுகளுக்கு பிடிக்காவிட்டாலும் பேசாமல் ஊமையாக பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டிய நிலைமை. ஹிந்து கோவில்களில் ஹிந்துக்களை வேஷ்டி புடவை கட்டிக்கொண்டு வாருங்கள் என்று சொல்ல வேண்டிய காலம் இது. பெரிசுகள் சொல்லும் யோசனைகளை காதிலேயே வாங்காமல் இளசுகள் ”உனக்கு ஒண்ணும் தெரியாது. பேசாமல் இரு” என்ற உபதேசத்தை வாங்கிக்கொண்டு மூலையில் போய் உட்காருகிறார்கள். தனிமை அவர்களுக்கு உதவுகிறதா?உடல் நலம், மனநலம் குன்ற உதவுகிறதா? யாருக்கு தெரியும்? முந்திய தலைமுறை போலும் இல்லாமல், இப்போதைய வாழ்க்கை முறையும் புரியாமல்,தெரியாமல், சிறு வட்டத்தில் பெஞ்சில் படுத்துக் கொண்டு யோசிக்கிறார்கள்.
சில பெரிசுகளுக்கு, இதுவரை படிக்காத, படித்தாலும் புரியாத பகவத் கீதை இப்போது தான் கொஞ்சம் லேசாக அடையாளம் தெரிகிறது.புரிகிறது.
டிவி,யூட்யூப்,மொபைல் ஆபரேட், OPERATE பண்ணக்கூட தெரியாத டிஜிடல் உலகம் அறியா பெரிசுகள் பாடு கஷ்டம் தான்.