NARAYANA J K SIVAN

”நாராயணா”  –   நங்கநல்லூர்  J K SIVAN
எனது  நீண்ட  ஆயுளில் அடிக்கடி  ஒரு  ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வந்து எனக்கு இஷ்டமான ராகத்தில் காமா சோமா என்று பாடி எனக்கு நானே  இன்புறுவேன். மற்றவர்க்கு என் குரலோ, என் ராகமோ  இன்பம் தராது என ஓரளவு விவேகம் அப்போதே எனக்கு இருந்தது.

சிறு  வயதில் எந்த ஆழ்வார் பாசுரம் இது என்றே தெரியாது. பாசுரம் என்றால் என்ன என்றும் தெரியாது. ஆனால்  ராகவய்யங்கார் எங்கள் வாத்யார் தினமும் வகுப்பில் இதைப்  பாடுவார்.கட்டை தொண்டை. சங்கீத ஞானம் கிடையாது. பக்தி பெருமாள் மேல் அவருக்கு பொங்கி வழிந்தது.  என்னையும் கூடவே  பாட  வைத்தார். ஆகவே இந்த பாசுரம்   எப்படியோ என்மனதில் இடம் பிடித்துவிட்டது. வயதாக ஆக, அதன் அர்த்தம் புதிது புதிதாக   மனதில் பதிந்து மகிழ வைத்தது. அந்த பாசுரம் இது தான். எத்தனையோ பெருமாள் கோவில்களில் இந்த பாசுரம் சுவற்றில் இடம்பிடித்து இருப்பதைப்  பார்க்கிறேன். நினைவூட்டிக்கொண்டே வருகிறது.

”குலம் தரும் செல்வம் தந்திடும்  அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்  பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்  நாராயணா என்னும் நாமம்”

நாராயணனின்  அவதாரங்களில் என்னைக் கவர்ந்தவன் கிருஷ்ணன்.  ஆனாலும்  ”நாராயணா”  என்ற ஒரு வார்த்தை சொன்னாலே கிடைக்கும் இன்பத்தை இந்த பாசுரம்  ஜம்மென்று சொல்கிறது.  என்ன வெல்லாம் காரண்டீ கொடுக்கிறது பாருங்கள்:
அவன் பேரைச் சொல்பவனுக்கு  நல்ல  ஆனந்தமான  ஒற்றுமையான பாசமான குலம்  அமையும். அதுவே அவனை,  விடாது  நாராயணனை நினைக்கப் பண்ணும்.  கேட்காமலேயே  அனைத்து செல்வங்களும் அவனை வந்தடையும். ”திரு” வையே மார்பில் உடையவன் அளிக்கும் செல்வத்துக்கு லிஸ்ட் போட முடியாதே. எப்போதும்  இன்பத்தை அருள்பவன் பக்தனை  துன்பம் நெருங்கச் செய்வானா? ஆகவே  துன்பமே இல்லை.அவனுக்கு வைகுந்தத்தில்  பெர்மனெண்ட்டாக இடம் ரிசெர்வ்  செய்து விடும்.எதற்கு  நிறைய நீளமாக சொல்லவேண்டும். உலகத்தில்  ஒருவனுக்கு  அதிகமாக  கிடைக்கும் செல்லம் எதுடா?அம்மாவின் அரவணைப்பும் பாசமும், நேசமும் பரிவும் தானே? ஒரே வார்த்தை. அம்மாவை விட பல மடங்கு  நாராயணா என்ற பேர் சொன்னாலே அவன் தருகிறேன் என்கிறானே! .  இனிமேலாவது ஒருநாளைக்கு ஒரு முறையாவது நாராயணா என்ற வார்த்தையை அவன் பேரை, மனமார கைகூப்பி சொல்வோமா? யாராவது இத்தனை நன்மை கிடைக்கும் என்றால் விடுவார்களா? ஆரம்பிப்போம் இப்போது முதலே  அவன் பேர் சொல்ல.
ஒரு குட்டிக்கதை சொல்லி நிறுத்துகிறேன்.
ரொம்ப ரொம்ப மோசமாக வாழ்கிறான் அஜாமிளன் என்பவன். அவனுக்கும்  அவன் தாசி மனைவிக்கும் பல குழந்தைகள். பத்தாவது பையன் கடைக்குட்டி  ரொம்ப செல்லம் அஜாமிளனுக்கு.  அவனுக்கு நாராயணன் என்று பேர் வைக்கிறான். வார்த்தைக்கு வார்த்தை  அடிக்கடி அவனைக்  கூப்பிட்டு செல்லம் கொஞ்சுவான்.  ஒருநாள்  உயிர் பிரியும் முன்பு அஜாமிளனுக்கு பிள்ளை ஞாபகம் வந்து அவனைப் பார்க்க ஆசை. ”நாராயணா” என்று அவனைக் கூப்பிடுகிறான்.  அவன் உயிர் பிரியும் நேரம் அது என்பதால் எம தூதர்கள் வந்துவிட்டார்கள் அவனை  நரகத்துக்கு கொண்டு செல்ல.அஜாமிளன் கண்ணில்  கோரமான அவர்கள் முகம் பட்டதால்  மீண்டும் பையனை அழைக்கிறான். ”நாராயணா  நாராயணா ”. அவன் கூப்பிட்ட குரல்  வைகுண்டத்தில்  விஷ்ணு தூதர்கள் காதில்  விழுந்துஅடித்துக்கொண்டு  ஓடி வருகிறார்கள்.

எம தூதர்கள்  ”இந்த பயல் அஜாமிளன் பல பாபங்கள் செய்தவன். நரகத்துக்கு அழைத்துப் போக வந்துள்ளோம் தடுக்காதீர்கள்” என்று சொல்ல விஷ்ணு தூதர்கள்  ‘  எம தூதர்கள்,அஜாமிளன்  எந்தவகை  பாபம் எத்தனை முறை செய்தாலும்  அவன்  காக்கும் கடவுள் மேல்   ”நாராயண  நாம ஜபம் ” செய்த போது  விலகிவிட்டது.  ஆகவே நீங்கள் போகலாம்”  என்று அவர்களை அனுப்ப,  யமதர்மனும்  அஜாமிளனை  விஷ்ணுதூதர்களிடமே விட்டு  விட்டு வேறே இடத்திலே  இருக்கிற  நிறைய  ஆட்களை கொண்டு  வாருங்கள் ” என்று கட்டளையிடுகிறான்.

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்வதால் உண்டாகும் பலன்களை  பல ஸ்ருதி ஸ்லோகங்கள் சொல்கிறது. அதில் ஒன்று  ”சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து” என்ன அர்த்தம்?பகவான்  மஹாவிஷ்ணுவின்  நாமம் என்று தெரிந்தோ தெரியாமலோ கூட  சும்மா   ”நாராயணா” என்ற சப்தம் வாயினால் ஒரு முறை யாவது சொல். அது உன் கஷ்டங்கள், பாபங்கள் சகலத்தையும் தூரக் கடாசிவிடும்.  பகவான் நம் எல்லோரையும் எப்போதும்  கவனித்துக் கொண்டிருக்கிறான்.தன்னைக் கூப்பிட்ட அடுத்த கணமே ஓடிவருகிறான்.  உன் சப்தத்தை  நாம சங்கீர்த்தனமாக ஏற்றுக் கொள்கிறான்.அருள் புரிகிறான்.’
ஆஹா எவ்வளவு அற்புதமான வசதி நமக்கு. இந்த  சான்ஸ் விட்டுவிட்டால் நம்மை விட சிறந்த முட்டாள் கிடைப்பானா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *