கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம் – நங்கநல்லூர் J K SIVAN
எப்படி அநேக விஷயங்கள் தெரியாமலேயே சில காரியங்கள் செயகிறோம். உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம் அலைகிறது. பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியாவது யாரையாவது பிடித்து பொது வரிசையில் போகாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்காமல் உள்ளே போய் தரிசனம் செய்ய வழியுண்டா என்று கண்கள் தேடுகிறது. மனம் அலைகிறது.
கோவில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து விடுகிறோம். கோவிலுக்கு போனதினால் கொஞ்சம் புரிபடாத நிம்மதி மனதில் தங்குகிறது. ஆனால் எத்தனை ரஹஸ்யங்கள் கோவிலைப் பற்றி இருக்கிறது. கொஞ்சம் தோண்டிப்பார்த்தால் புதையல் கிடைக்கிறது. சில விஷயங்கள் அறிந்து கொண்டேன். அதே வேகத்தில் அதை உங்களிடம் சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும்போல் இருக்கிறது. இப்போதைக்கு கொடிமரம் மட்டும் பற்றி சொல்கிறேன்.
ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் ஒரு பெரிய கொடிமரம், த்வஜஸ்தம்பம் இருக்கிறதே அதே பல விஷயங்கள் சொல்கிறபாது.
எதற்காக கோவிலுக்கு கொடிமரம்? கோவிலை ஒரு மனிதனைப் போல் உருவகமாக்கி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். திருமூலரின் ஒரு பாடல் உடனே ஞாபகத்துக்கு வருகிறது.
”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே”
நம் உள்ளம் ஒரு பெரிய கோயில், தேகம் தான் ஆலயம். வாய் தான் கோபுர வாசல். உள்ளே ஆன்மா தான் பகவான். மூலவர். திருட்டு கொட்டு ஐந்து புலன்கள் தான் உண்மையில் கோவில் மணி விளக்குகள். அதை ஜாக்கிரதையாக துடைத்து, நல்ல எண்ணங்களை எண்ணெய்யாக ஊற்றி, ஒளி வீசச் செய்ய வேண்டியது நமது கடமை. இல்லாவிட்டால் ஓடிவிடும்.
ஒவ்வொரு மனிதன் உடலிலும் ஐந்து கோசங்கள், உரைகள் இருக்கிறதோ (அன்னமய, பிராணமய,மனோமய, விஞ்ஞானமய, ஆனந்த மய பஞ்சகோசங்கள்). கோவிலுக்கு இந்த கோஸங்கள் தான் ஐந்து ப்ராஹாரங்கள்.
பஞ்ச அங்கங்கள் என்று கூட வைத்துக்கொள்ளலாம். நமக்கு தலை, கழுத்து, மார்பு, கால்கள் கைகள் போல.
மனிதன் உடலுக்கு ஆத்மாவைப் போல் கோவிலுக்கு மூலவர் இருக்கும் கர்பக்ரஹம். சந்நிதி தலை. பகவான் தான் ஆத்மா. விமானம் தான் மூக்கு நுனி. அர்த்தமண்டபம் தான் கழுத்து. மகாமண்டபம் தான் மார்பு. பிரகாரங்கள் ஐம்புலன்கள். பலிபீடம் தான் நாபி கமலம். கொடிமரம் ஜீவாதாரம். கோபுரம் சிரம். கோபுர வாசல் தான் காலடி. ஒரு ஆலயத்தின் வளமை, செழுமையை பிரதிபலிப்பது கொடிமரம். கொடிமரத்தின் அடிப்பாகம் சிவன். நடுப்பகுதி ப்ரம்மா . மேல்பகுதி விஷ்ணு. கொடிமரம் உயரமானது. ரொம்ப தூரத்திலேயே பக்தர்கள் கண்ணுக்குப் படுவது. கொடி மரத்தைப் பார்த்தே கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். கொடிமர உச்சியில் பகவானின் வாஹனம் உருவம் தெரியும். உள்ளே இருப்பது சிவனா, விஷ்ணுவா என்பது தூரத்திலேயே கொடி மர உச்சி காட்டிவிடும். சிவாலயங்களில் கொடிமர உச்சியில் நந்தி. பெருமாள் கோவில்களில் கருடன். துர்கைக்கோவில்களில் சிம்மம். காளி கோவில்களில் வேதாளம். சாஸ்தா கோவிலில் குதிரை. சுப்ரமணிய சுவாமி கோவில்களில் மயில். பிள்ளையார் கோவில்களில் மூஷிகம். சரஸ்வதி கோவில் கொடிமரத்தில் அன்னம்.கொடிமரத்தின் அடியில் அஷ்டதிக் பாலகர்கள் உருவம் இருக்கும்..
ஒரு கோவிலில் ஏதாவது உற்சவம் என்றால் முதலில் கொடிமரத்தில் கொடியேற்றி விடுவார்கள். உள்ளூர் காரர்கள் காப்பு கட்டிக் கொள்வார்கள். யாரும் அதற்கப்புறம் ஊரை விட்டு நகர மாட்டார்கள். விழாக் காலங்களை இப்படி தான்
அறிவிப்பது வழக்கம். கொடிமரம் உறுதியான தேக்கு மரத்தால் செய்யப்பட்டு மேலே தங்கம், வெள்ளி, தாமிரம் கவசம் அணிவித்திருப்பார்கள். கொடிமரம் விஞ்ஞான பூர்வமாக இடி மின்னல் தாங்கி.
கொடிமரம் கோவிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்துக்கும் மூலவர் சந்நிதிக்கு இடையில் முதலில் இருக்கும்.சகல தீய சக்திகளையும் விரட்டும் மஹிமை கொண்டது கொடிமரம். கொடிமரத்தில் கொடியேற்றினால் வானவர்களும் தேவர்களும் அருள்மாரி பொழிவார்கள். விண்ணையும் மண்ணையும் பக்தியால் ஒருங்கிணைப்பது கொடிமரம். கொடி மரத்தடியில் தான் பக்தர்கள் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். அது தான் பழக்கம். கொடிமரத்தின் அருகே தான் பலி பீடம். நமது அஹம்பாவத்தை , தீய எண்ணங்களை பலி கொடுப்பதற்கு. பலிபீடத்துக்கு நைவேத்யம் வைத்துவிட்டு தான் மற்ற சந்நிதிகளுக்கு நைவேத்தியம். இன்னொரு முக்கிய விஷயம். கொடிமரம் குண்டலினி சக்தியை குறிப்பது. அதன் அடிப்பாகம் தான் மூலாதாரம், உச்சி தான் ஸஹஸ்ராரம் .கொடிமரம் முதுகெலும்பு. தாமிர, வெள்ளி பித்தளை கவசங்கள் தான் அங்கங்கள். எலும்புகள்.
அடேயப்பா நமது ஆலயங்கள் எத்தனை ரஹஸ்யங்கள் கொண்டவை என்று உணரும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னும் எத்தனையோ விஷயங்கள் சொல்ல வேண்டி இருக்கிறது.