பேனா மஹாத்மியம் – நங்கநல்லூர் J K SIVAN
எழுதுவது என்பது ஒரு கலை . அதில் எல்லோரும் பிரகாசிக்க முடியாது. ஜொலித்தவர்கள் ஏராளமானவர்கள். கல்கி,தேவன், ஜெயகாந்தன், பாரதி, கம்பன், சுஜாதா,உவே சா, என நிறைய பேர் கண்முன் தோன்றுகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் எழுத்து ஓலையில். எழுத்தாணி மூலம். ஓலையைக் கிழித்து பள்ளமாக்கும் சொல் கூட்டம்.தரையில் மண்ணில் எழுதி பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கை விரல்கள் தான் பேனா.
சுவற்றில் எழுதிய காலத்தில் கரித்துண்டு தான் பேனா. ஆற்றங்கரையில் கால் கட்டை விரல் தான் பேனா.
ஸ்லேட்டில் எழுதி கற்றபோது பலப்பம் தான் பேனா.
காகிதம் கண்டு பிடித்த பின் முதலில் பென்சில் தான் பேனா .
மசிக்கூட்டில் தோய்த்து எழுதிய போது இறகு தான் பேனா. அப்படி எழுதி எத்தனையோ காவியங்கள் கவிதைகள்.
கட்டை பேனா,ஸ்டீல் பேனா, என்ற NIB வைத்த பேனா வந்த போது எழுதியவர்கள் எத்தனையோ பேர்கள்.உருவானது எத்தனையோ ஆவணங்கள்.
நான் படித்த காலத்தில் WRITER என்ற பேனாவை நிறைய மாணவர்கள் உபயோகித்தனர்.
ஜப்பான் பைலட், சீனா பைலட் ஹீரோ HERO பேனாக்கள் தங்க நிறத்தில் குல்லாய் போட்டுக்கொண்டவை. அவற்றுக்கு மதிப்பு அதிகம். அவைகளை என் பள்ளி நண்பர்கள் வைத்திருத்தபோது தொட்டு பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
பேனாவுக்குள்ளே அதனுடம்பில் இங்க் நிரப்பி, அது நிப்,பீடர் இடையே இங்க் சுரந்து நிப் இரு பிளவுக்குள்ளும் பாய்ந்து முனை எழுதும். இதில் ஏதாவது ரிப்பேர் என்றால் இங்க் சொத்தென்று நோட் புத்தகத்திலோ, பேப்பரிலோ கொட்டும், பேனாவின் கழுத்து, கசியும். பாக்கெட்டில் இங்க் கோடு பல நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு நடந்திருக்கிறேன். எழுதும் போது கட்டைவிரல் ஆள்காட்டிவிரல் முழுதும் மசி. துஷ்ட விஷம நண்பர்கள் சட்டையில் முதுகுப் பக்கம் இங்க் தெளித்திருக்கிறார்கள். இங்க் துடைக்கும் ஒரு சாதனம் தலை முடி. அப்புறம் தானாகவே இங்க் உறிஞ்சும் பேனா வந்தபோது ஆச்சர்யம். அப்படிப்பட்ட ஒரு பேனாவை வாழ்வில் எப்படியாவது அடைய விரும்பிய காலம் ஒன்று உண்டு.
மிக விலையுர்ந்த பேனா வாடர்மன்ஸ் WATERMANS . பார்க்கர் PARKER பேனா சக்ரவர்த்தி. பிளாட்டினம் நிப் பேனா பேனாக்களின் ராஜா. என்னிடம் இல்லாத ஒன்று. சாதாரண பேனா, இங்க் பாட்டிலோடு பரிக்ஷைக்கு கிளிப் வைத்த அட்டையோடு போவேன்.வழியில் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டிருக்கிறேன்.
எங்கள் காலத்து பழைய சாய்வு மேஜைகளில் இங்க் பாட்டில் வைக்க ஒரு குழி இருந்தது. உபயோகித்த இங்க் பெயர் கிருஷ்ணவேணி. குயிங்க், QUINK. பிற்காலத்தில் பால் பாயிண்ட் பேனா வந்து இங்க் பேனா காணாமல் போனது. ஜெல் பேனா அருமையாக வந்துவிட்டது. எழுதுவதற்கு சிரமமே இல்லை. ஆனால் என்ன எழுதுவது என்று இன்னும் ஞானம் உதயமாகவில்லை? இப்போது கம்ப்யூட்டரில் பக்கம் பக்கமாக எழுதுகிறேன். பேனாவைப் பற்றி எழுதும் என்னிடம் இங்க் பேனா கிடையாது. பால் பாயிண்ட் பேனா பையில் இருக்கும். பாக்கெட்டில் கிடையாது.
தமிழ் கவிஞர்,சினிமா டைரக்டர், நடிகர், பாடகர், வில்லுப்பாட்டு வித்தகர், எழுத்தாளர், தில்லானா மோகனாம்பாள் புகழ், கொத்தமங்கலம் சுப்பு பேனா பற்றி எழுதிய ஒரு கவிதை ஸ்வாரஸ்யமாக இருக்கும். படியுங்கள்:
குல்லா நழுவி விழுகுதான்னு
நிப்பு பக்கம் வடியுதான்னுஎல்லா பேப்பரும் எழுதுமான்னு ரெண்டு பக்கம் தெரியுதான்னு இரு புயங்கள் இருக்குதான்னு, ரெண்டு நிப்பும் சரிசமமாஎழுத்து வேலை நடக்குமான்னு எப்பவுமே ரிப்பேரான்னு பாத்து ஊசி போல கிழிக்குதான்னும் ஓலைச்சத்தம் கேக்குதானும் வேசி மீனுக்கு இருக்குதானும் வேட்டி சட்டை பிழைக்குமான்னு எழுத கிழுத முடியுமான்னு கிளிப்பு சட்டையை கிளிக்குமான்னு கீழே நழுவி விழுகுமான்னு சளிப்பு தடுமன் இருக்கு தான்னு தலையை தலையை ஆட்டுதான்னு,நெக்கு பக்கம் ஒழுகுதான்னு,நெத்தி பொட்டு இருக்குதான்னு, பீடர் FEEDER ரொம்ப அடைக்குதான்னு,பேசிக்கிட்டே எழுதான்னு… பாக்கோணும்.