மானசீக பூஜை   –   நங்கநல்லூர்  J K SIVAN 
 
வயதான என் சகோதர சகோதரிகளே ,காசின்றி,செலவின்றி,எவருக்கும்  தொந்தரவில்லாமல், நாம் மானசீகமாக படுத்துக்கொண்டே இறைவனை பூஜித்து அர்ச்சிக்கலாம்.


மஹா பாரதத்தை  நினைக்கும்போது  நமது மனக்கண் முன் தோன்றுபவர்கள்  அர்ஜுனனும்  பீமனும் தான்.  இதில் அர்ஜுனனுக்கு  தேரோட்டியாக  இருக்க  பகவான் கிருஷ்ணன் முன்வந்தான்.  ஆயுதம் கையிலெடுக்காமலேயே  அவன் பாண்டவர்களுக்காக  போராடி  வெற்றி தந்தான்  என்றே  கூட சொல்லலாம். அர்ஜுனனுக்கு எப்படியெல்லாம் வழிகாட்டி  அவன்  பலமான எதிரிகளை வெற்றி பெற முடியுமோ அதற்கு  காரணமானவனாக செயல்பட்டவன் கிருஷ்ணன்.  கிருஷ்ணன் உதவி இல்லாமல் அர்ஜுனனால் செயல் பட்டிருக்க முடியாது. முதல் நாள் போருக்கு முன்பே  வில்லைக் கீழே போட்டு என்னால் யுத்தம் செய்ய முடியாது என்று  முடிவெடுத்தவன் மனதை மாற்றி ஊக்கமளித்து அவனுக்கு  க்ஷத்ரிய தர்மத்தை  நினைவூட்டி  கீதோபதேசம் செய்தவன் கிருஷ்ணன்.  கீதை உபதேசம் இல்லாமலிருந்தால்  மஹா பாரத யுத்தமே நிகழ்ந்திருக்காது.

பீமன்  அப்படியல்ல.  அவன் சிவபக்தன். கிருஷ்ணனின்  உற்ற நண்பன். இருவரிடமும் பேதமில்லாதவன். ஞானி. கிருஷ்ணனிடம் பக்தி மரியாதை கொண்ட சீலன். பதினாயிரம் யானை பலம் கொண்டவன். அவன் ஒருவனே  திருதராஷ்டிரன் புதல்வர்கள் நூறு  பேரையும் தனி ஒருவனாக கொன்றவன்.  பல கௌரவ சேனையின்  அதி ரதர்களை, மஹா ரதர்களை  கதி கலங்கச் செய்தவன்.

ஒரு சம்பவம் இந்த  இரு மஹா வீரர்கள்  சம்பந்தப்பட்டது. அதைச் சொல்கிறேன். வனவாசம் செய்யும் போதும்,  தீர்த்த யாத்ரையிலும்  அர்ஜுனன் பரமேஸ்வரனை பூஜை செய்து வழிபட்டவன். சிவனிடம்  பாசுபதாஸ்திரம் பெற்றவன்.  அவன் எண்ணற்ற  வில்வ தளங்களை சேகரித்து பரமேஸ்வரனுக்கு பூஜை செய்பவன். பீமன் அப்படி செய்யாதவன் என்று அர்ஜுனனுக்கு எண்ணம்.  ஆனால்  பீமனும்  பரமேஸ்வரனுக்கு பூஜை செய்தவன். அவன் ஒரு வில்வ தளத்தை கூட  எடுத்து சிவனுக்கு பூஜை செய்யவில்லை என்று அர்ஜுனன் அபிப்ராயம்.

ஒருநாள் அர்ஜுனன்  சிவகணங்கள் சிவன் மேலிருந்து  மலைபோல் பூஜை செய்யப்பட நிர்மால்ய தளங்களை வண்டி வண்டியாக எடுத்துக்கொண்டு போவதை கண்டான்.  அவர்களை நிறுத்தி கேட்டான்:
”இவ்வளவு தளங்களை எடுத்து யார் பூஜித்தது?”
”இவை  உன் சகோதரன் பீமனால் அர்ச்சிக்கப்பட்டவை”
”என் அண்ணா பீமனா. அவன் ஒரு இலையைக்  கூட  பறித்து பூஜை செயது நான் பார்த்ததில்லையே”
”இவை மானசீகமாக  அர்ஜுனன்  மனத் தூய்மையோடு  பூஜை செய்து அர்ச்சித்த தளங்கள்” –  சிவகணங்கள்.

 அர்ஜுனன் அதிர்ந்து போனான்.

வெறுமே  புஷ்பங்களை சேகரித்து பூஜிப்பதை விட  மானசீக பூஜை சிறந்தது. வெளிப்படையாக  பூஜை செய்பவன் மானசீக பூஜை செய்யலாம்.பக்குவப்பட்ட.  மனம் இறைவனோடு ஒன்றுபட்டவரால்  மட்டும்  தான்  மானசீக பூஜை செய்யமுடியும்.  ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தான்  தளம், புஷ்பம், பன்னீர், சந்தனம், ஜலம் , அக்ஷதை இதெல்லாம் அவசியம்.
மானசீகமாக வைரம், வைடூர்யம்,நவரத்தினம், தூப தீபங்கள் மாட மாளிகை கோவில்கள் எல்லாம் கூட கட்டி  ,எண்ணற்ற வருக்கு அன்ன தானம் செய்ய முடியும். மானசீக பூஜையில் கஞ்சத்தனத்துக்கு இடமே இல்லை. பூசலார் ஹ்ருதயத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணியவர்.


நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு  அன்றாட அற்புத மந்திரத்தோடு முடிக்கிறேன்.

” कायेन वाचा मनसेन्द्रियैर्वा ।बुद्ध्यात्मना वा प्रकृतेः स्वभावात् ।करोमि यद्यत्सकलं परस्मै ।नारायणयेति समर्पयामि ॥  

காயேன வாசா மனஸேந்த்ரியைவா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி”.

பகவான்  எதிர்பார்ப்பது  திரிகரண சுத்தி.  மனம் வாக்கு காயம்  மூன்றிலும் தன்னலமற்ற தியாக பரிசுத்த குணம். அவன் அருளால் அவன் தாளை வணங்கி நாம்  கண்ணில் ஒரு துளி நீரோடு அவனை சரணடைந்து வழிபடுவது தான் மேலே சொன்ன மந்திரத்தின் அர்த்தம். இனி, வெறுமே, “காயேன வாசா..” என்று சொல்லாமல், உணர்ந்து, நெகிழ்ந்து, ஒரு துளி விழி நீருடன் சொல்லி, நம்மை, அவன் திருவடிகளில் அர்ப்பணிப்போம்!..எல்லோராலும் பூசலாராக முடியும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *