கவலை பல ரகம். நங்கநல்லூர் J K SIVAN
ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? ஏழை, பணக் காரன், முதியவன்,சிறியவன்,ஆண் பெண், யாராக இருந்தாலும் கவலை இல்லாதவன் எவனும் கிடையாது.
கவலைப்படஎண்ணற்ற காரணங்கள் இருக்கிறது.
பணம், புகழ், அழகு இது இருப்பவன், இல்லாதவன் ரெண்டு பேருக்குமே ஏதோ ஒரு கவலை. இதற்கு காரணம் மன அழுத்தம். அதிலிருந்து மீண்டவன் தான் கவலை இல்லாத மனிதன். இந்த மன அழுத்தம் முழு நேரமும் பாதிப்பதில்லை. இருக்கும் கொஞ்ச நேரத்தை தின்று விடுகிறது. கவலையை அதிகரிப்பதற்கு உதவும் சில சமாசாரங்களை கவனிப்போம்.
தனிமை எதையோ நினைத்து கவலைப்பட வைக்கிறது. தனிமையை புறக்கணித்து எல்லோரிடமும் கலந்து பழக வேண்டும்.
வயதானவர்களைக் கண்டால் மற்றவர் நைசாக டிமிக்கி கொடுத்து விட்டு வேறு பக்கம் சென்று விடுகி றார்கள். ஆகவே இந்த பெரிசுகள் தன்னிடம் மனம் விட்டு பேச அல்லது சொல்வதை பொறுமையாக கேட்க ஆள் இல்லாமையால் கவலைப்படும்.
சிலருக்கு பல பேர் உள்ள கூட்டத்தில் தனிமையாகவும் பதட்டம் ஆகவும் உணர்வர்.இது INFERIORITY COMPLEX. தாழ்வு மனப்பான்மை.
எந்த காரியம் தொட்டாலும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும்போது கவலை பெருகும். தைரியம்,சுய நம்பிக்கை அவசியம் .
திடீர் என ஏற்பட்ட ரொம்ப நெருங்கிய, பிடித்த, அன்புக் குரியவரின் பிரிவு, மறைவு, கவலையை கூட்டும். இது தான் வாழ்க் கை என்று அதை ஏற்க மனம் திடமாக வேண்டும். எது வேணாலும் சரி வந்தது வரட்டும் என மன அழுத்தத்தை விலக்க வேண்டும்.
அம்மா அப்பா உற்ற நண்பன், நண்பி போன்ற நம்பிக்கை மிகுந்த நபரிடம் எல்லா கவலைகளையும் கொட்டி , மனதை காலியாக்கிக் கொள்ளவேண்டும்.
சிலர் ஒரு பழைய டைரியில் மனதில் எழும்பும் எண்ணங்களை எழுதி தள்ளுவார்கள். கவலை எல்லாம் எழுதி கிழித்து போடுவது நல்லது.
ஒரு சாதாரண ஐம்பது ரூபாய் நோட்டு கூட எந்த அழுக்கடைந்தாலும் ஏன் கிழிஞ்சாலும் கசங்கினாலும் அதன் மதிப்பை இழப்பதில்லை. ஒரு சாதாரண துளியூண்டு காகிதத்தே அந்த மதிப்பு என்றால் மனிதனின் மதிப்பு எதற்காக கவலைகளால் பாதிக்கப் படவேண்டும்?நன்றாக பிடித்த உணவை நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவோம், பாடுவோம், ஆடுவோம். கவலை ஓடிவிடும்.நகைச்சுவை காணொளியை காணுங்கள். வாய்விட்டு சிரித்து மன அழுத்தத்தை துரத்தி அடியுங்கள்
நல்ல பிடித்த இசை கேளுங்கள்.
பயம் கலக்கம், எல்லோருக்கும் எதைப்பற்றியாவது இருக்கத்தான் செய்யும். தூசி தட்டுவதை போல அதை அலக்ஷியம் பண்ணி ஒவ்வொரு வினாடியும் புது மனிதனாக உருவெடுப்போம்.
இனிமையான பாடல்கள் கேட்கலாம். கால் போன போக்கில் நடக்கலாம்தாய் தந்தை, உறவோடு, நண்பர்களோடு மனம்விட்டு பேசலாம்
குழந்தைகளோடு விளையாடலாம்
மனைவியோடு சேர்ந்து வீட்டு வேலை செய்யலாம்
புத்தகங்கள் படிக்கலாம்
நண்பனோடு ஊர் சுற்றலாம் பேசலாம்
கோவிலுக்கு சென்று வழிபடலாம்
கவலையைப் பற்றி சொன்னேனே, இதைப் பற்றி எத்தனையோ வருஷங்களுக்கு முன் ஒரு தமிழ்ப் புலவர் ஒரு நாலு வரி எழுதி இருக்கிறார். ரொம்ப ஜோரான எளிய பாடல். படித்து விட்டு யோசியுங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கென்ற ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் என்று புரியும். விசனம் என்றால் கவலை..
”பாலுக்குச் சர்க்கரை யில்லை யென்பார்க்கும் பருக்கை யற்ற
கூழுக்குப் போட உப்பில்லை யென்பார்க்குங் குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பில்லை யென பார்க்குங் கனத்த தண்டி
மேலுக்குப் பஞ்சணை யில்லை யென்பார்க்கும் விசனம் ஒன்றே”
.இன்னும் பேசுவோமா?