ஒவ்வோரு நாளும்….. நங்கநல்லூர் J K SIVAN
எங்கே திரும்பினாலும் யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒரு குறை சொல்கிறார்கள். ஏன் எவருமே சந்தோஷமாக இல்லை?. என்ன இல்லை இந்த திருநாட்டில்? கடவுள் எல்லோருக்கும் எல்லாமே அளித்திருக்கிறானே . தாய்க்குத் தெரியாதா சேய்க்கு என்ன தேவை என்று?
இதற்கு காரணம் மற்றவரிடம் மனதில் அன்பு இல்லாமை. உண்மை நேர்மை இல்லாமை. நெஞ்சில் அமைதி இல்லாமை. பிறரோடு ஒப்பிடும் தவறு நிலைப்பதால். இக்கரைக்கு அக்கரை பச்சை.
கடவுள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை எல்லோருக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் சூழ்நிலையையும் உருவாக்கி தருகிறது. அதை உணர்வதற்கோ, உபயோகப்படுத்திக் கொள்ளவோ நாம் அறியாமல் வீணாக்கி அவதிப்படுகிறோமே என்று தோன்றுகிறது.
மஹா பெரிய கங்கையோ பிரம்மபுத்ராவோ, கூட ஒரு சிறு ஓடையாக, சிற்றாறாக, ஊற்றாக தான் தோன்றுகிறது. அப்புறம் ஹோவென்று கடல் போல் பரந்து கடலில் கலக்கிறது. எவ்வாவு பெரிய பீமனாக இருந்தாலும் அம்மாவால் கைக் குழந்தையாக தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பாலூட்டி வளர்ந்த பிறகு தான் பீமனாகிறான்.
ஏழு வயதில் அப்பா ஜிப்பாவை மாட்டிக்கொண்டு காலில் பெரிய செருப்பு மாட்டிக்கொண்டு நடக்கமுடியாமல் நடந்த போது நானும் அப்பா மாதிரி பெரியவனாகி விட்டதாக ஒரு சந்தோஷ நினைப்பு. ஒவ்வொருவருக்கும் எத்தனையோ கற்பனைகள், கனவு மாளிகைகள் இருக்கிறது. பாலியத்திலிருந்து தொண்டு கிழம் வரை எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. அதனால் விளைவது அல்ப சந்தோஷமும் புரிந்து கொண்டால் கடைசியில் நிதர்சனமாக ஏமாற்றமும் தான்.
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து எழுந்ததுமே இந்த கனவுகள் எதிர்பார்ப்புகள் தொடர்கிறது. சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருவது தான் மனித வாழ்க்கை. மனதை அங்குமிங்கும் ஓட விடாமல் எதிலோ ஒன்றில் நிலைத்திருக்க நிறைய வழிகள் உண்டு. அதில் நான் தேர்ந்தெடுத்தது படிப்பதும் அதைப்பற்றி எழுதுவதும் தான். இதனால் யாருக்கும் தொந்தரவு இல்லை. காசு பணம் செலவில்லை. வீட்டை விட்டு எங்கும் போகவேண்டாம்.
ஒவ்வொருநாளும் 18 மணி நேரமாவது இன்பமாக இதில் அப்படி செலவிடும்போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இணை இல்லை. ஒவ்வொருநாளும் நான் மாணவன். ஏதாவது புதிதாக, தெரியாத, ஒன்றை தெரிந்து கொள்கிறேன். மற்றவர்களுக்கும் அதை சொல்கிறேன். என் எழுத்தை எவரும் விரும்பி படிக்கவேண்டும் என்ற கட்டாயமோ நிர்பந்தமோ எதுவும் இல்லை. பிடித்தவர்கள் படிக்கட்டும். எண்பத்தி ஐந்து வருஷங்களில் அறுபது வருஷங்களுக்கு மேல் வீணாக்கி விட்டோமே என்று ஆதங்கம் மனதில் தோன்றுகிறது.
அநேகர் என்னை தொடர்பு கொண்டு பேசும்போது இதைப் பற்றி பேசுகிறேன். சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று புரிகிறது. உடல் பற்றி சிந்திக்க நேரமில்லை. உடலில் இருக்கின்ற வலி மறந்து போய்விடுகிறது.உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட்டு தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார வைக்கிறது.
இடையிடையே எத்தனையோ சங்கீத வித்துவான்கள் பாடல்களைக் கேட்டு அனுபவிக்க நேரம் ஒதுக்குகிறேன். சிலவற்றை நானும் பாடிப்பார்க்கிறேன். அதுவும் ஆத்ம திருப்தி தருகிறது.. இப்படி திருப்பி திருப்பி கேட்டு பாடி நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடமாகிவிட்டது. ஸ்வரமோ, தாளமோ மனதைத் தொட வில்லை, பக்தி பாவம் ரொம்ப பிடிக்கிறது.