நமது தர்மம் – நங்கநல்லூர் J K SIVAN
வெள்ளைக்காரன் ஆட்சியில் நேர்ந்த எத்தனையோ இடர்களில் ஒன்று நமது புராதன சனாதன தர்மத்தை ஹிந்து மதம் என்று பேர் கொடுத்து நம்மை அடையாளம் காட்டியது தான். சனாதனம் என்றால் என்றும் சாஸ்வதமானது என்று அர்த்தம். தர்மம் என்றால் யாருக்கோ எதுவோ கொடுப்பதில்லை. சமூகத்தை ஒன்றுபடுத்தி கட்டுக்கோப்பாக வைக்கும் கோட்பாடு. சாஸ்வதமான எங்கும் நிறைந்தவர்களை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்த செயல்.
எல்லோரையும் இப்படி ஒன்றாக பிணைப்பதின் உட் பகுதிகள் தான் அவரவர் அனுஷ்டான பழக்க வழக்கங்கள்.ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் நாம் மற்ற மதத்தினர் போல் அல்ல. ஏதோ ஒரு புத்தகம், யாரோ ஓரு வரை பின்பற்றி அவரை கடவுளாக கொண்டவர்கள் இல்லை நாம். எண்ணற்ற சித்தாந்தங்களை எத்தனையோ மஹான்கள், ரிஷிகள் உணர்த்தியதை ஒரு குடைக்கீழ் ஏற்று அங்கீகரித்து பின்பற்றுபவர்கள். இங்கு எந்த கட்டுப்பாடும், திட்டமும் கண்டிப்பும் கிடையாது. நமது பாரத வர்ஷம், வடமேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மா வரை பரவி இருந்தது. காந்தார் தேச ராஜாவின் சகோதரி தான் திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. பாரதத்தில் ஒரு சிறந்த பெண்மணி. பாரத வர்ஷத்தின் காந்தார் இப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கிறது.
மதங்கள் ஏதோ சில நம்பிக்கைகளை பூரணமாக அடிப்படையாக கொண்டவை. நல்லவர்கள், நல்ல காரியங்களைசெய்தவர்கள் பிறருக்கு நல்லதே செய்தவர்கள், உலக வாழ்க்கை முடிந்து இறந்த பின் கடவுள் வாழும் விண்ணுலகத்திற்கு, கைலாசமோ, வைகுண்டமோ, ஸ்வர்க்கமோ, எதற்கோ சென்று இன்பமுறுவார்கள். தீங்கு செய்தவர்கள், அதாவது பாபிகள், நரகம் எனும் துன்பம் மிகுந்த பகுதிக்கு செல்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் நமக்கு இருக்கிறது. யாரும் யாருக்கும் கெடுதி,தீங்கு செய்யாமல் தடுப்பதற்கு அருமையான யுக்தி இது. குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது அம்மாக்காரிகள் சொல்லும் பூச்சாண்டி விஷயம். நமது முன்னோர்கள்,ரிஷிகள் அநேக சாஸ்திரங்கள், ஆன்மீக வழிமுறைகளை வாழ்நாள் முழுதும் கடினமாக சிந்தித்து, யோசித்து பின்பற்றி நமக்கு அளித்திருப்பதை மதித்து பின் பற்றுவோர் ஆஸ்திகர்கள். இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் நாஸ்திகர்கள் என்று வகைப்படுத்தி அவரவர் கோட்பாடுகளுடன் வாழ இங்கே சுதந்திரமான வழியுண்டு, இதில் ஒன்றை மற்றவர் மேல் திணிப்பதோ, வன்முறையோ மட்டும் தான் கண்டிக்கத் தக்கது. நமது சனாதன தர்மத்தை சிந்தித்து அதிலிருந்து வேறுபட்ட கருத்துகளை உத்தேசித்து பிரிந்து தனித்து செயல்பட்டவர்கள் அவர்கள் பெயரால் ஒரு புதிய மதத்தை உருவாக்கி மக்களிடம் பரப்பினார்கள். இப்படி ஆரம்பமானது தான் புத்தரின் புத்தமதம், மஹாவீர ஜீனரின் ஜைன மதம், கிறிஸ்துவின் கிறிஸ்துவ மதம், முகம்மது அவர்களின் முகமதிய மதம் போன்றவை. கருத்து சுதந்திரம் என்றும் எதிர்க்கப்பட்டதில்லை . வன்முறை, திணிப்பு, பலத்தை, அதிகாரத்தை உபயோகித்து மதமாற்றம் மதவெறி கொடூரங்கள் தான் என்றும் எதிர்க்கப்பட்டவை. இது தவிர்த்து என்றும் சமூகத்துக்கு மதம் இன்றியமையாததாக தான் இருந்திருக்கிறது.
ஹிந்துக்கள் ஒருபுறம் சடங்குகள், நேம நியமங்கள் இவற்றை விடாமல் நம்பிக்கையோடு பின்பற்றி வரும்போது இன்னொரு சிறு பிரிவினர் ஆன்ம விசாரங்களில் ஈடுபட்டு தத்துவங்கள், மனக்கட்டுப்பாடு இவற்றில் ஈடுபட்டனர். இவர்களுக்கு வேதங்களின் உபநிஷத்துகள் , வேதாந்தங்கள், உறுதுணையாக இருக்கிறது. இவர்கள் ஒருவரை மற்றொருவர் எதிர்க்கவோ வெறுக்கவோ இல்லை என்பது சுவாரஸ்யமான விஷயம். இங்கும் பூரண சுதந்திரம் இன்றுமுள்ளது.