A GOOD PRACTICE J K SIVAN

இப்படிச் சொன்னால் நல்லதா?  –  நங்கநல்லூர்  J K SIVAN
வைகறைத் துயிலெழு,  விடிகாலையில்  கண்விழித்து  எழுந்திரு.  ஆஹா  எவ்வளவு அற்புதமான  அறிவுரை. கட்டாயம் நாம் இதைக்  கடைப்பிடித்து  சூரியன் உதித்தவுடன் அவன் பொன்  வெய்யில் நமது உடலில் படவேண்டும். அது தான் வைட்டமின்.  நோய் வராமல் காக்கும்  மருந்து. எழுந்தவுடன் கொஞ்சம்  நடக்கவேண்டும்.  கால் மணி அரைமணியாவது நடந்தாலே போதும். அற்புதமான  தெய்வீக  பாடல்களை கேட்டுக்கொண்டே  நடப்பவர்களை  தினமும் பார்க்கிறேன்.
மூச்சை  நன்றாக  நிதானமாக  உள்ளிழுத்து  ஸ்வாசத்தை  நிதானமாக  நிமிர்ந்த மார்போடு கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடவேண்டும்.  சும்மா  மூச்சை  இழுத்து வெளியிடுவதற்கு பதிலாக,  ஏதேனும் ஒரு  வாசகத்தை மனதில் சொல்லிக்கொண்டே  சுவாசிக்கலாம்.  ஓம்  நமசிவாய,   ஓம்  நாராயணா ,  காயத்ரி மந்த்ரம்,  ஸ்லோகம்,   ஏதேனும்  ஒன்றை  மனதில்  சொல்லிக்கொண்டே மெதுவாக  மொட்டை மாடியில் நடக்கலாம்.  தெருவில் நடக்க முடிந்தால், தெரு  ஒழுங்காக  நடக்கும்படியாக  இருந்தால் , நடக்கலாம். அப்புறம்  பாருங்கள்  நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை, இயற்கையின்  எழிலில் கிடைக்கும்  புத்துணர்ச்சியை,  மென்மையான காற்று தரும்  சுகத்தை. ஒருநாளுக்கு தேவையான  பாட்டரி சார்ஜ்  இது.  காசு செலவில்லாமல்  கிடைக்கும்  மருந்து.
இதன் மூலம்  நெஞ்சில் அமைதி தோன்றும். சத்தமில்லாத  அமைதியான  விடியற்காலை அளிக்கும்  பேரின்பத்துக்கு  ஈடில்லை.
ஒவ்வொருநாளும் நமக்கு   கடவுள் தந்த போனஸ், புத்துணர்ச்சியோடு,  ஒரு நம்பிக்கையளிக்கும்  பரிசு. நேற்று செய்த தவறை  இன்று செய்ய மாட்டேன் என  மனம்  ஒரு ப்ரதிஞை எடுத்துக் கொள்ளட்டும்.
பறவைகளின்  இனிய  குரல்கள்  நானும் உங்களைப்போல,  இன்று  என் கடமையை  சந்தோஷமாக, ஒழுங்காக,  செய்வேன் என்று  ஞாபகப்படுத்தட்டும்.
ஒரு வீடு கட்ட  எப்படி முதலில்  பிளான் போட்டு, அதை சரியான முறையில் பின்பற்றி  முடிக்கிறோமோ அது போல் ஒவ்வொருநாளும் செய்ய வேண்டிய  காரியங்களுக்கு  பலமான  அஸ்திவாரம்  இந்த விடிகாலை எழுந்திருந்து  பிரார்த்தனையோடு  சிறிது நடப்பது  அத்தியாவசியம்.  எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டு பொறுமையாக நிறைவேற்றும்போது ஏமாற்றம், எரிச்சல், கோபம், எங்கிருந்து வரும்? நமது  தோல்விகளுக்கு  வேறு எதையோ எவரையோ காரணம் காட்டும் குற்றம்  இனி வேண்டாம்.  நாம்  எங்கே தப்பு செய்தோம் என்று மனதை அலசி கண்டுபிடித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலே  போதும்.
செடி வளர எப்படி  உரம்  அவசியமோ,  அதுபோல் வாழ்க்கையில் முன்னேற  மனம் திடப்படவேண்டும். விடா முயற்சி அவசியம். நல்ல எண்ணங்கள்  உருவாகி செயல்படவேண்டும்.  அமைதியான  மனதில் தான் ஆற்றல் மிக்க செயல்கள் உருவாகும்.
இந்த பிரபஞ்சத்தில்  மஹா பெரிய மேரு மலைகள் கூட  சிறிய  மணல், கல் துகளால் தான் உருவானது.  கொஞ்சம் கொஞ்சமாக  அவை பெரிதாகி  சிறு துளி பெரு வெள்ளமாக  வளர்கிறது.  நம் செயல்களும்  சரியான, நல்ல எண்ணங்களாலேயே தோற்றம் பெறுகிறது.
செய்யும்  தொழில் தான் தெய்வம்.  எந்த காரியமும்  முதலில் சரியாக  சிந்திக்கப்பட்டு செயல்படவேண்டும்.  அதில் மனம் முழுமையாக ஈடுபட்டு அற்புதமான விளைவை  பெறலாம்.  கருமமே  கண்ணாயினார்  என்பது  ஆன்றோர்  வாக்கு. இப்படிப்பட்ட  ”கண்ணாயினார்கள்” தான்  கண்ணப்ப  நாயனார்களாக  பெருமை பெறமுடியும்.  ஒவ்வொரு மனிதனையும்  ஆக்குவதும்  அழிப்பதும்  அவன் எண்ணங்களும், நாக்கும், அவன் செயல்களும் தான் என்பதை  ஞாபகத்தில் வைப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *