வெற்றி வேற்கை/நறுந்தொகை – நங்கநல்லூர் J K SIVAN
அதி வீர ராம பாண்டியன்.
அருமையான ஒரு பாண்டியன்.
நல்ல விஷயங்கள் எத்தனையோ நாம் அறியாமலேயே நமது வாழ்வு முடிந்து விடும் வகையில் இப்போது அமைந்து விட்டது நமது துரதிர்ஷ்டம். பணம் சம்பாதிப்பது முக்யமாகிவிட்டது. தாய் தந்தை , தாய் மொழி, தாய் நாடு எல்லாமே மனசாக்ஷி இல்லாமல் வெறுக்கப்பட்டுவிட்டது. இந்த தலைமுறை பெற்றோர் இதற்கு முக்ய காரணம். பாரம்பரியம், கலாச்சாரம், பண்பு, நட்பு, உறவு தேசப் பற்று, மொழிப் பற்று, எதுவும் பணத்துக்கு அப்பறம் தான் என்றாகி விட்டது.
அதனால் தான் நான் மறுபடியும் அதிவீர ராம பாண்டியனைப் பற்றி சொல்ல நேர்ந்து விட்டது. எல்லோருக்கும் தெரிந்தால் நான் ஏன் சொல்லணும்? ஆயிரமாயிரம் வருஷங்களாக தஞ்சாவூர் ஜில்லா எல்லையில் கடலோரத்தில் இப்போது இருக்கும் ஒரு ஊர் அதிராம்பட்டினம். அதை ஆண்ட ஒரு ராஜா தான் அதிவீர ராம பாண்டியன். அவன் பெயரால் அது அதிவீரராம பட்டினம் என்று இருந்து சுருங்கி அதிராம்பட்டினமாகிவிட்டது. ராஜா பிரபலமான எழுத்தாளனாக இருக்கிறான். கொஞ்சம் பலான விஷயங்கள் பற்றியும் ஆராய்ந்து புத்தகம் எழுதி இருக்கிறான். நாம் அதைத் தொடப் போவதில்லை.இவன் பெயரில் ரெண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். ஆகவே கெட்ட சமாசாரம் வேறே இன்னொரு அ .வீ.ரா. பாண்டியனுடையதாக போகட்டுமே.
நான் சொல்லும் ராஜா முதலாம் அதிவீர ராமன் எனும் பிற்கால பாண்டிய மன்னன். (1564-1606) என செப்பேடுகள் நிறைய சொல்கிறது. இலக்கியப் பணியோடு கோவில் திருப்பணிகளும் செய்தவன். ஸமஸ்க்ரிதம் அறிந்தவன். ஹர்ஷன் எழுதிய நைஷதம் தமிழில் இந்த ராஜா இயற்றிய நைடதம் ஆகும். எனக்கு ரொம்ப பிடித்தது அவனுடைய வெற்றி வேற்கை, அற்புதமான ஒரு நூல். இதற்கு இன்னொரு பெயர் நறுந்தொகை. தென்காசியில் உள்ள அருமையான சிவன் கோவில் இவன் கட்டியது அழகான கோவில். சென்று பார்த்தேன். ஏதோ ஒரு பாக்கியம் எனக்கு கிட்டி இருக்கிறது.
அதிவீர ராம பாண்டியனின் அருமையான நறுந்தொகை செய்யுள் கீழே உதாரணத்துக்கு கொடுக்கிறேன். யாரையும் சும்மா ஆளைப்பார்த்து எடை போடாதே என்கிறது இந்த பாடல்.
”தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.”
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
அர்த்தம் சொல்கிறேன். பனம்பழம் சாப்பிட்டதுண்டா? இனிப்பாக சுவையாக நார் நாராக இருக்கும். அதன் விதை பெரியது பனங்கொட்டை என்போம். பனைமரம் பெரிதாக,உயரமாக வளரும். என்ன பிரயோஜனம். ஒரு ஆள் கூட வெயிலுக்கு அதன் கீழே நிழல் பெற முடியாதே. ஆனால் ஆல மர விதை அப்படி இல்லை. மரம் பெரிதாக இருக்கும். அதன் பழத்தில் விதைகள் கடுகு மாதிரி தான் உருவம். அடேங்கப்பா, அது முளைத்து மரமானால் ஒரு பெரிய ராஜா தனது யானை குதிரைப் படையோடு ஆலமரத்தின் அடியில் நிழலில் இளைப்பாறலாம். ஆகவே ஒருவனின் உருவத்தை வைத்து இவன் பெரியவன் இவன் சிறியவன் என்று தப்பு கணக்கு போடுவது தான் தப்பு. பெரிய ஆளாக நாம் நினைப்பவன் அல்பனாக கூட இருப்பான். சின்ன ஆள், தண்டம் என்று நாம் நினைப்பவன் ராமனின் கோதண்டமாக இருப்பான். சக்திமான், பலருக்கு உதவுபவனாக இருப்பான் உருவத்தை வைத்து ஒருவனை எடை போடக்கூடாது. இனிமேல் கொஞ்சம் கொஞ்சம் வெற்றி வேற்கை எனும் நறுந்தொகையை படிப்போமா?
”தந்திரிக் கழகு தறுகணாண்மை’
ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்தக் காலத்தில் ஒரு ராஜாவின் சேனாபதியிடம் இருந்தது. அவன் ராஜ தந்திரி யாக இருந்தான். தனது நாட்டை விட பலம் மிக்க அண்டை நாடுகளிடம் நட்பாகவும்,தன்னை விட தாழ்ந்த பலம் கொண்ட எதிரிகளை நசுக்கியும் நாட்டை பாதுகாப்பவன். தந்திரம் மிக்க அவனை ராஜ தந்திரி என்பார்கள், அதிவீரராம பாண்டியன் ராஜாவுக்கு இது தெரியும் என்பதால் இதைச் சொல்கிறான். சேனாதிபதி தைர்யவானாக, பயமற்ற வீரனாக சேனையை வழி நடத்திச் செல்ல வேண்டும்”
”உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்’–
”எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று முகமலர்ச்சியோடு வரவேற்று, உபசரித்து, அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழவேண்டும். வயிறார உணவிட வேண்டும் என்று அதிவீரன் சொல்கிறானே.இப்போது இப்படியா நடக்கிறது?
சில வீடுகளில் ”போதுமா மாமா, சாப்பிடுவேளா, இன்னும் கொஞ்சூண்டு போடட்டுமா” என்று அரை கரண்டி அரைக் கரண்டியாக சாதம் போட்டு, ரெண்டு டீ ஸ்பூன் சாம்பார் போடுவது பார்த்திருக்கிறேன். போடும் போதே எங்காத்துக்காரர் எதுவுமே போட்டுக்க மாட்டார். கொலஸ்ட்ரால் பயம். அந்த வீட்டுக்காரர் பசி ஏக்க கண்களோடு பரிதாபமாக பக்கத்தில் உட்கார்ந்திருப்பார். எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோருமே ரெண்டு இட்லிக்கு மேல் சாப்பிடுவதில்லை என்றால் பசியோடு அமர்ந்திருப்பவர் மூன்றாவது இட்டிலி கேட்பாரா? இந்த அனுபவம் ஒருவேளை அதிவீர ராம பாண்டியன் காலத்திலேயே இருந்ததோ என்னவோ?தொடரும்