SIVA VAKYAR J K SIVAN

சிவவாக்கியர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

அரியதோர் நமசிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே

கரியதோர் முகத்தைஉற்ற கற்பகத்தை கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்க வேண்டுமே

எவருக்கும் எளிதில் கிடைக்க முடியாத  மனித பிறவி எடுத்த நமக்கு   இந்த  அஞ்செழுத்து  மந்திரம் இருக்கிறதே.   ஓம்  நமசிவாய:  இதை  தக்க குருவிடம் உபதேசம் பெற்று  ஜபம் செய்யவேண்டும்.  முப்பது முக்கோடி  தேவர்களும் ஜெபிக்கும் இந்த மந்திரத்தின் சக்தி அளவிடமுடியாதது.  உச்சரித்தால்,  தோஷம், பாவம், மாயை, துன்பம்  சகலமும் விலகும். ஓடிவிடும்.
”கரிய” முகத்தோடு ,என்றால்   யானை முகம் கொண்ட,  ”கப்பிய கரி முகன்..” என்று பாடுகிறோம். பிள்ளையார்.  கற்பகவிநாயகர் என்று பெயர்.  கற்பக விருக்ஷம் போல் கேட்ட வரம் எல்லாம் அளிப்பவன்.    ஞான சிகரம். மோன விளிம்பு.  பண்டிதர்களும்  ஞானிகளும், கற்றுணர்ந்த பெரியோர் எல்லோரும்  ஏதோ சிவ  வாக்கியம் என்று  இந்த  நூலில் நான்  ஏதாவது  தவறாக எதையாவது  சொல்லியிருந்தால்  க்ஷமிக்க வேண்டும்  என்று சிவவாக்கியர்  எவ்வள்வு எளிமையாக அகம்பாவம் இன்றி சொல்கிறார் பாருங்கள்.  பிள்ளையாரை முதலில்  வணங்கிவிட்டு  ஓம் நமசிவாயம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.  பிள்ளையாரே  பிரணவ ஸ்வரூபம் தானே.   சிவவாக்கியர்  பாடல்கள்  நாலு வரிகளில்   சின்னதாக இருப்பவை.  

ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே. 3

நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்ட பகிரண்டம் அனைத்தும்  அடக்கம்.  ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற  த்ரிமூர்த்திகளும்  உள்ளே உள்ளனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும்  உகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது.  ஓம் நமசிவாய எனும்  இந்தபஞ்சாக்ஷரத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே உற்ற பொருளாய் ஆத்மாவாக  ஒளி வீசுகிறது.

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே. 4

எங்கே ஐயா  இவ்வளவு வேகமாக   அங்கும் இங்கும் ஓடி ஆடி தேடுகிறீர்கள்?  பரஞ்சோதி  பரமேஸ்வரன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து  உலவுகிறானே!  அவனை உணராமல்  அவனை எங்கோ தேடி  நாலா பக்கமும் பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் ண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை   ஆத்ம ஞான நாட்டத்துடன் நாடி  நம்முள்ளேயே  உட்கலந்து நிற்பதை,  என்றைக்கு உணர்ந்து கொள்ள ப்போகிறீர்கள்?

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே. 5

நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாயு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு தூங்குகிறது. இதைதான்  யோகிகள் குண்டலினி சக்தி  என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இந்த வாயு வால்  தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசி  யோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை. அதெல்லாம் சரி  படிக்கிறோம்  எழுதுகிறோம், இது நம்மால் முடிகிற காரியமா? என்று நினைக்கவேண்டாம். முயற்சித்தால் முடியாததொன்றுமில்லை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *