காஞ்சி தர்சனம். – நங்கநல்லூர் J K SIVAN
கச்சபேஸ தர்சனம்
31.3.2024 அன்று ஒரு குட்டி ஸ்தல யாத்திரை. நண்பர் வரதராஜனுடன் காஞ்சிபுர ஆலய தர்சன பிரயாணத்தில் கூரம் , தூசி மாமண்டூர் மற்றும் காஞ்சிபுரத்தில் சில ஆலயங்கள் தரிசிக்க முடிந்தது. அப்படி தரிசித்த ஒரு அற்புதமான கோவில் தான் ஸ்ரீ கச்சபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் கச்சபேஸம் எனப்படும். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சத்தியவாகீஸ்வர விநாயகர் காட்சி தருகிறார். தமிழில் இவர் பொய்யாமொழிப் பிள்ளையார். காஞ்சிப் புராணம் இந்த ஆலயத்தைப் பற்றி நிறைய சொல்கிறது. இந்த ஆலயம் ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
கோவில்கள் பல மலிந்த காஞ்சிபுரம் ரெண்டு பாகமாக அறியப்படுகிறது. சிவ காஞ்சி , விஷ்ணு காஞ்சி என்பவை அவை. சிவகாஞ்சியில் நெல்லுக்கார தெருவில் கச்சபேஸ்வரம் அமைந்துள்ளது. கோவில் அருகே தான் பஸ் நிலையம் உள்ளது. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் 75 கி.மீ. ஒன்றரை மணி நேரத்தில் சௌகர்யமாக செல்ல சாலைகள் நன்றாக உள்ளன.
பலயுகங்களுக்கு முன் இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய வந்தவர்கள் மஹா விஷ்ணு, விக்னேஸ்வரர், ஐயனார்
துர்க்கை, சூரியன், பைரவர் ஆகியோர்.
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் போது மத்தாக தேர்ந்தெடுக்கப்பட்ட மந்தரமலையை அசையாமல் தாங்க முன் வந்தவர் மஹா விஷ்ணு. பெரிய ஆமையாக (சமஸ்க்ரிதத்தில் :கச்சபம்) பாற்கடலில் அடியில் இருந்தவாறு தனது பெரிய உறுதியான முதுகில் மந்தர மலையைத் தாங்கி பாற்கடலை கடைய உதவினார். அம்ரிதம் வந்தது. பாற்கடல் ஹோ வென்று கலங்கியது. இந்த ஆமையின் ஓடு தான் பின்னர் சிவபெருமான் அணிந்திருக்கும் கபாலமாலை நடுவே கோர்க்கப்பட்டுள்ளது. மஹா விஷ்ணு காஞ்சிபுரத்தில் கச்சப ரூபத்தில் ஈஸ்வரனை வழிபட்ட தாள் இந்த க்ஷேத்ரம் கச்சபேஸம் ஆனது. சிவன் கச்ச பேசர் .
வெகுகாலமாக செங்குந்த மரபினர் குழுவால் ஆலயம் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கச்சபேசத்தில், சிவபெருமான் ஓர் கல்பகாலம் பஞ்ச பூதங்களை மற்றும் சகல தேவதைகளை, ஊழி நடனம் ஆடி சராசரம் அழிந்து அவரது சங்கல்பத்தில் மீண்டும் பிரபஞ்சம் உருவாகியது.
உலகமெல்லாம் அழிந்த போதும் ஒரு வித மாற்றமுமின்றி காஞ்சியில் ஜோதி லிங்கமாக நின்று தமது சத்தியால் முன்போல விளங்க உலகங்களையும் உலகத்தில் சகல ஜீவன்களும் முன்போல் ஜீவிக்க சிருஷ்டித்தார். ஜோதி லிங்கத்தை வணங்கி ப்ரம்மா மீண்டும் ஸ்ருஷ்டி கர்த்தாவாக மீண்டும் செயல்பட்டார்.
கச்சபேச ஆலய சந்நிதிகள் இஷ்ட சித்தீசப் பெருமான் சந்நிதி, யோக சித்தீசப் பெருமான் சந்நிதி. தரும சித்தீசப் பெருமான் சந்நிதி, ஞான சித்தீசப் பெருமான் சந்நிதி, வேதசித்தீசப் பெருமான் சந்நிதி (சதுர்முகேசுவரர் சந்நிதி என்றும் சொல்வார்கள் ), யுக சித்தீசப் பெருமான் சந்நிதி, பாதாள ஈசுவரப் பெருமான் சந்நிதி, லிங்கபேசர் பெருமான் சந்நிதி, .குளக்கரை சலகண்டேசுவரப் பெருமான் சந்நிதி, கச்ச பேசற சந்நிதிக்கு வடக்கே ப்ரஹாரத்தில் 9 லிங்கங்களையும் (108, 1008 லிங்கங்கள்) இந்த ஆலயத்தில் தரிசித்து மகிழலாம்.
இதைத் தவிர விஷ்ணு துர்கைச் சந்நிதி. பஞ்ச சந்தி விநாயகப் பெருமான் சந்நிதி. பைரவர் சந்நிதி. சூரியன் சந்நதி.
சரஸ்வதி தேவி சந்நதி.ஆதிகேசவப் பெருமான் சந்நதி. வள்ளி தெய்வானை உடனுறை, ஆறுமுகம் பெருமான் சந்நிதிகளும் உள்ளன. இந்த ஆலய வளாகத்தில் ரெண்டு சிவாலயங்கள்.
கச்சபேஸ்வரர் ஆலயத்தின் வடக்கு பார்த்த ஏழு நிலைகொண்ட ராஜகோபுரம் வெகு தூரத்திலிருந்தே தெரியும். கச்சபேஸ்வரர் லிங்கம் ஆமை ( கூர்மம் ), தாமரை ( பத்மம் ), நாகம் , யுகங்கள் ,சிம்மம் ஆகிய பஞ்ச ஆசன (ஐந்து ஆசனங்கள்) மீது அமைந்துள்ளது ரொம்ப அரிதான ஒரு காட்சி. வேறெங்கும் பார்க்க முடியாது.
சித்திரை ப்ரம்மோற்சவம் ரொம்பவும் விசேஷம். ஆலயத்தில் உள்ள இஷ்டசித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்நானம் பண்ணினால் புத்ர பாக்யம் கிடைக்கும் என நம்பிக்கை, . சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து நான் சென்று பார்க்கும்போது ஏதோ ஒரு புது கோவிலுக்குள் செல்வது போல் தோன்றினாலும் இந்த ஆலயம் 1600 வருஷங்கள் முந்தையது.