பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN
படிக்காத டாக்டர் காமு பாட்டி. 88 வயசு.
காமு பாட்டியை இஞ்சி பாட்டி என்று எல்லோரும் கேலி பண்ணுவார்கள். அவள் பள்ளிக்கூடமே போகாத டாக்டர். அவளுக்கு தெரியாத வைத்தியமே கிடையாது என்பது மொத்த குடும்பத்திலும் ஏகோபித்த அபிப்ராயம்.
சாப்பிட பிடிக்கலே, வயிறு என்னவோ பண்றது என்று அவள் எதிரில் சொல்லக்கூடாது. அஜீரணத்துக்கு பித்த வாந்திக்கு மருந்து சொல்வாள்.
நச்ச் என்று யாராவது தும்மினால் போதும். லொக் லொக் என்று இருமினால் விடமாட்டாள்.
”ஏண்டி சாமுவு க்கு நெஞ்சிலே கொர் கொர் என்று பூனைமாதிரி கடையறது. அவனைக்கூப்பிடு இங்கே”
”எதுக்கு பாட்டி என்னை கூப்பிட்டே?”.
நீ மட்டும் வந்து என்னடா பிரயோஜனம். சரசாவையும் கூப்பிடு இங்கே?
சாமு என்கிற சாமிநாதனின் அம்மா சரஸ்வதி வந்தாள் .
”கூப்பிட்டேளா பாட்டி”
”ஆமாண்டி மா.
”இதோ பாரு எனக்கு என் அம்மா சொல்லிக் கொடுத்ததை தான் உனக்கும் சொல்றேன். கேட்டுக்கோ. மனசிலே வாங்கிக்கோ.
அஜீரணம், சாப்பிட பிடிக்கலே, வாயிலெடுக்க வரது. வயத்துல புர் புர்ங்கிறதுன்னு நீ தானே சொன்னே.
ஒரு டம்ளர் ஜலத்திலே கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூணையும் போட்டு கொதிக்க வை. ஆறினதும் வடிகட்டி குடி. அஜீரணம் இருக்காது. இல்லேன்னா இன்னொரு வைத்தியமும் சொல்றேன் கேளு.
இஞ்சியை நன்னா அலம்பி ஒரு துண்டு , ஒரு எலுமிச்சம் பழம் நாட்டு சக்கரை நாலு சின்ன கரண்டி.அவள் சொல்வது டீஸ்பூன். இஞ்சியோட தோலை அருவா மணைலே சீவு. (இப்போ கத்தி , PEELER), சின்ன சின்ன துண்டா நறுக்கிக்கோ. அம்மிலே நைசா அறைச்சுடு. (அம்மியும் இப்போ கிடையாது. நமக்கு மிக்ஸி தான் அம்மி).
பிழிஞ்சு சாறு எடு. அடுப்புலே வச்சு கொஞ்சம் சுடப்பண்ணு. (காஸ் ஸ்டவ்வில் சிம் லே வச்சு இளம் சூடாக்கு) என்கிறாள். அதில் நாட்டு சக்கரை போட்டு கலக்கு.அப்புறம் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி பிழிஞ்சு சாறு எடுத்து சாருலே சேர்த்து குடு. காலம்பற வெறும் வயித்தில் அரை டம்பளர் கொடு. அப்புறம் பாரு அஜீரணம், பித்த வாந்தி எல்லாம் பறந்து போயிடும். கப கப ன்னு பசிக்கும்.
சாமுவோட நெஞ்சு சளிக்கு கை வைத்யமா இப்படி பண்ணு. யாருக்கு ஜலதோஷம் இருந்தாலும் மார்லே சளி இருந்தாலும் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்னா சுட வை. சூடு ஆறினதும் நெஞ்சில் பரக்க பரக்க தடவு. அப்புறம் பாரு சளி ஓடியே போயிடும்.
சளி இருமல் இருந்து வாய் ஓயாமல் இருமினால் 5,6 மிளகு எடுத்து வாயில் போட்டுண்டு மெள்ள கடித்து வாயிலே ஓரமா ஒதுக்கி வச்சுக்கோ. எச்சிழும் அந்த மிளகு சாரும் கலந்து துவாக உள்ளே இறங்கித்துன்னா இருமல் இருக்காது.
கஷாயம் கூட பண்ணி கொடுக்கலாம்: அதுக்கு உனக்கு என்ன வேணும்னா:
துளசி 20 இலைகள், மிளகு 10, இஞ்சி ஒரு துண்டு தோல் சீவினது , கற்பூரவல்லி ஐந்தாறு இலைகள் இதெல்லாம் ஒண்ணா சேர்த்து எண்ணெய் தண்ணி எதுவும் விடாமல் வாணலி லே போட்டு வதக்கு. அப்புறம் ஒரு தம்ளர் ஜலம் சேர்த்து மஞ்சள் தூள் அரை சின்ன கரண்டி (டீ ஸ்பூன்) சேர்த்து கொதிக்க வை. ஆறினப்புறம் வடிகட்டி குடிக்கச்சொல்லு சளி வெளியே வந்துடும். இருமல் நிக்கும்.
போனவாரம் பக்கத்து வீட்டு கோனார் மனைவிக்கு தலைவலி என்றது பாட்டி சொன்ன வைத்தியம்.
ஐந்தாறு துளசி இலை, துளியூண்டு ஒரு சின்ன துண்டு சுக்கு, ரெண்டு கிராம்பு ( லவங்கம்) இதெல்லாம் சேர்த்து அம்மிலே அரைச்சு நெத்திலே பத்து போடு. தலைவலி பறந்து போயிடும்.
”சாமு அடிக்கடி தொண்டைலே கரகரப்பா இருக்குன்னு சொல்றானே. அவனுக்கு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி எல்லாத்தையும் வறுத்துட்டு பொடி பண்ணி தேனிலே கலந்து கொடு. தொண்டை கரகரப்பு பட்டுனு போயிடும்..
கோமளி ஒருநாள் ”பாட்டி விக்கல் வந்து தொந்தரவு பண்றதே ஏதாவது வைத்தியம் சொல்லு” ன்னு கேட்டாள் . அவளுக்கு உடனே பாட்டி காலை நீட்டிண்டு முதுகை தூணிலே சாச்சு சொரிஞ்சுண்டே சொன்ன வைத்தியம்:
பெரிய நெல்லிக்காய் அஞ்சு ஆறு வெயில்லே வச்சுட்டு இடிச்சு, சாறு பிழிஞ்சுக்கோ. அதோடு தேன் கலந்து சாப்பிடுடி. விக்கல் அப்புறம் நின்னு போயிடும்.
பால்காரர் தாமு, ”பாட்டிம்மா என் புள்ளே பாபுவு க்கு வாய் நாற்றம் இருக்கு. என்ன பண்றதுமா?”ன்னு கேட்டதும் பீஸ் FEES வாங்காமல் பாட்டி சொன்ன வைத்தியம் இது தான்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆற வை. ஒரு நாளைக்கு மூணு வேளை அதிலே அவனை வாய் கொப்புளி னு சொல்லு அப்புறம் வாய்லே நாத்தம் இருக்காது.