THE LAW OF KARMA J K SIVAN

பிரபஞ்ச காரண கார்யம் –      நங்கநல்லூர்  J K  SIVAN

என் மேலே எத்தனை பேருக்கு கோபமோ? எனக்குத் தெரியவில்லை. ஏன்?  நான் அடிக்கடி இந்த மாதிரி தலை சுற்றுகிற, புரியாத சமாச்சாரங்களை உங்கள் மீது திணிக்கிறேனல்லவா? நான் மட்டுமில்லை. எத்தனையோ பேருக்கும் இந்த மாதிரி சிந்தனைகள் தோன்றலாம், ஆனால் அவர்கள் அத்தனை பேருமே  அதை காமா சோமா என்று  என்னைப்  போல எழுதி ஊர் முழுதும் பரப்புவதில்லையே.  எனக்கு ஏன் அந்த மாதிரி இருக்க முடியவில்லை? இருக்கத் தெரியவில்லை?
இன்று எழுதிய விஷயமும் வழக்கம் போல தான். அதற்காகத்தான்  மேலே சொன்ன பூர்வ பீடிகை. என் மீது கோபப்படாமல் படியுங்கள். கொஞ்சம் என் சிந்தனையோடு ஒத்துப்போக சான்ஸ் இருக்கிறது.
”எப்படி பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுவது? எப்படி ஸ்வர்கத்துக்கு போவது என்று கேட்கவில்லை? எப்படி ஒருவன் ஸ்வர்கத்துக்கு போகாமல் இருக்க முடிகிறது என்பது தான் கேள்வி. பழங்காலத்து ரிஷிகள் இதை பலகாலம் யோசித்தவர்கள். எதுவும் ஸ்வயம்பு இல்லை. எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோ ஒரு முடிவில்லாத   ஹனுமார் வால்  போன்ற காரண காரியம் இருக்கிறது.  மனிதனை விட மேலான தேவர்களுக்கும் இதே சட்டம் தான்.  ஒரு உயிரிலிருந்து தான் இன்னொரு உயிர் ஜனனம் ஆக முடியும்.  ஏதோ ஒரு எண்ணத்திலிருந்து தான் இன்னொரு, இல்லை, பல  எண்ணங்கள் உருவாகிறது. பிரபஞ்சம் திடீரென்று எங்கிருந்தோ வந்து குதிக்கவில்லை.  புராணங்கள் நிறைய  படிக்கிறேன். அது என்னென்னவோ காரணம் காரியம் பற்றி சொல்கிறதே.  அநாதி காலமாக  இது தான் நியதி. களிமண்ணிலிருந்து பிள்ளையார் மாதிரி ஏதோ ஒரு இயற்கை  வஸ்துவிலிருந்து மனிதன் தோன்றினான் என்று வைத்துக்கொண்டால் நிச்சயம் அவன் மனதில் எண்ணங்கள் என்று ஒன்று இருக்கவே இருக்காது. பிளாஸ்டிக் பொம்மை சிந்திக்கிறதா?   மனிதர்களாகிய நாம் அப்படி உருவாகவில்லை.  புதிதாக  ”ஒரு   நெய்  மசாலா”  என்று கத்தினதும்  தோசைக்கல்லில் தோசை போல் உருவாக வில்லை. நாம் புதுசாக வந்தவர்கள்  இல்லை.   இல்லாத ஒன்றிலிருந்து வந்ததாக இருந்தால் முடிவில் இல்லாமல் போகலாமே. வரப்போகும் எதிர்காலத்தில் நம் போன்ற மனிதர்கள்  எப்போதும் தோன்றிக்  கொண்டே  இருக்கவேண்டும், நிச்சயம் வாழவேண்டும் என்றால்  அத்தனை பேரும் இதற்கு முன்  கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாகதான் இருக்கவேண்டும்  என்பது நிச்சயமாகத் தெரிகிறது.  உலக வாழ்க்கை, ஒரு தொடர்கதை.ஹிந்துக்களைப்  பொறுத்தவரை,  ஆத்மா என்பது  மனமோ, உடம்போ இல்லை. இந்த வாக்கியத்தை அடிக்கடி என் கட்டுரைகளில்  ரமணர்  சொன்னார், ஆதி சங்கரர் சொன்னார் என்று எழுதுவதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எது    ஸாஸ்வதமானது?  “நான்” . அது இந்த உடம்பில்லை. என் சின்ன வயதிலிருந்து இப்போது 85+வரை எவ்வளவு மாறுதல்கள் என் உடம்பில்.  என் பழைய போட்டோக்களில் என்னை எனக்கே  அடையாளம் தெரியவில்லையே.  நான் மனமும் இல்லை.  அது உடம்பை விட படு வேகமாக  மாறிக்கொண்டே  இருக்கிறது. மனம் ஒரு குரங்கு. தாவிக்கொண்டே இருப்பது அல்லவா? ஒரு விநாடியிலிருந்த எண்ணம் அடுத்த வினாடியில் வேறாகிறது. அப்படியென்றால் ஏதோ ஒன்று என்னிடம் எப்போதும் மாறாத வஸ்துவாக இருக்கவேண்டுமே? அது என்ன?  இதோ கங்கை நதி, காவேரி நதி, ஹோ வென்று கோதாவரி,  கண் முன்னே ஓடுகிறதே. அது  சலனம் நிறைந்தது. ஓரிடத்தில் அது நிற்கவில்லை காலம் காலமாக  சமுத்திரத்தை நோக்கி ஓடிக்கொண்டே தானே இருக்கிறது.எது மாறவில்லை. அதன் இரு பக்கத்திலும் இருக்கும் கரை!   கரை இல்லை என்றால் கங்கை இல்லை.கோதாவரி இல்லை. அது போல் தான் இந்த உடம்பின் பின்னல், மனத்தின் பின்னே ஏதோ ஒன்று இருக்கவேண்டும் அல்லவா?  அதை நாம் ஏன் சிந்தித்தே பார்ப்பதில்லை.?  அடிக்கடி  ஆத்மா பற்றி எழுதுவதன் காரண காரியம் இப்போது புரிகிறதா? அந்த ஆத்மா தான் நம்மை எல்லாம் இணைக்கிறது. பிணைக்கிறது.  மனது ஒரு அற்புதமான  கருவி.  ஆத்மாவை நினைக்க வைக்கிறதே! ஒருவன் இறந்தால் ஹிந்துக்கள் நாம் என்ன சொல்கிறோம்?  அவர்  ”காலமானார்” என்கிறோம். காலம் ஓடிக்கொண்டே இருப்பது. நமது உடம்பு, மனம் எல்லாம் காணாமல் போனாலும் நதியின்கரை போல்  ஆத்மா நிலைத்தது, ஓடாமல் நிற்கிறது.மரணம் மனிதனை ஒரு எல்லைக்குள் நிறுத்தி அகற்றுகிறது.  ஆத்மா எதிலும் கட்டுப்படாதது. சுதந்திரமானது. நித்ய வஸ்து.உடம்பு, மனம் ஆத்மா மூன்றும் கலந்து ஓடுவது  தான்  காலச்சக்கரம், வாழ்க்கை சகடம்.  இது நம் சகலருக்கும் பொதுவான நியதி.  பிரபஞ்ச  நியதி.  இங்கே  தான் கர்மா புரியும். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு  பின் விளைவு உருவாகிறது.  ஒரு செயல் இன்னொரு  அதற்கு தகுந்த செயலில் தொடர்கிறது.  நம் பிறவி அப்படித்தான் நம்முடைய கர்ம பலனுக்குத் தக்கவாறு   அடுத்த பிறவியாக விளைகிறது.  இப்போது  ”சிவனாக ”இதை எழுதும் நாம் இதற்கு முன் என்னவாக இருந்தேன்? அடுத்த பிறவியில் யாராக, எதுவாக இருப்பேன்????   இப்படி சுற்றி சுற்றி நாம் ஓடும்  ஓட்டத்துக்கு முடிவே இல்லை போல் இருக்கிறது. இது தான் அவதார ரஹஸ்யமோ?   மேலே சொன்ன நியதிக்குட்பட்ட நாம் எப்போதும் நமது நடத்தையின் அடிமைகள். நமது குணத்தின் அடிமைகள், எண்ணங்கள், ஆசைகள் தாகங்கள் பசி, இதன் அடிமைகள்.  இதிலிருந்து விடுதலை எப்போ?  எக்காலம் எக்காலம் என்று பத்திரகிரியார் எழுதுகிறேனே புரிகிறதா?  பகவான் ஒருவனே  கர்மா இல்லாதவன், பிறப்பு இறப்பற்றவன், இந்த பற்றும் இல்லாதவன். திருவள்ளுவர்  சொன்ன  ”பற்றற்றான் பற்றினை பற்றுக இப்பற்று விடற்கு” இப்போது நன்றாக புரியும்.  அவனையே நினைப்போம், அவன் விட்டஇஷ்டப்படி நம்மை நடத்தட்டும்.  குரங்கு பொம்மை ஆடவேண்டுமானால் யாராவது அதற்கு சாவி கொடுக்க வேண்டுமல்லவா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *