சாவித்ரி சத்யவான் கதை – நங்கநல்லூர் J K SIVAN
”சாவித்ரி கதை தெரியுமா உங்களுக்கு” என்று ஒரு நண்பரை கேட்டேன்.”சே சே, ரொம்ப பாவம் சார். அவ்வளவு பெரிய நடிகையர் திலகத்துக்கு இவ்வளவு கஷ்டமா?”’நடிகையர் திலகமா ? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?””என்ன சார் ஜோக் பண்றீங்க. பாசமலர் பார்க்கலே, ஜெமினி WIFE சார் சாவித்ரி…நவராத்ரி பார்த்திருக்கேங்க இல்லை.அந்த சாவித்ரியை தெர்யாதுங்கறீங்களே.”அடப்பாவி சத்யவான் சாவித்ரி கதை தெரியாதா உனக்கு? உனக்கும் இதுவரை தெரியாதவங்களுக்கும் சேர்த்து இப்போ சொல்றேன் கேட்டுக்குங்கோ.நாளைக்கு காரடையான் நோன்பு… காரடையான் நோன்பின் தாத்பரியம் மாங்கல்ய பலம். தீர்க்க சுமங்கலியாகத் திகழவேண்டும் என்பது திருமணமான எல்லா பெண்களுக்கும் உள்ள நியாயமான ஆசை. ”தீர்க்க சுமங்கலி பவ:” இது தானே பெரியோர்கள் ஆசீர்வாதம். அந்த பாக்யத்தை பெறவே ஸ்த்ரீகள் மேற் கொள்ளும் ஸ்பெஷல் விரதம் இது . கோவில் என்றால் அதற்கு ஒரு ஸ்தல புராணம் இருக்கும். நோன்பு பண்டிகை என்றால் ஒரு ராக்ஷஸன் கதை சம்பந்தம் இருக்கும். ஆகவே இந்த காரடையான் நோன்பு விரதத்துக்கு பின்னால் இருக்கும் ஒரு அற்புதமான கதை இருப்பதால் அதைச் சொல்கிறேன்
நான் மஹா பாரதத்தை முழுமையாக ”ஐந்தாம் வேதம்” என்ற குழந்தைகளுக்கான கதையாக எழுதும்போது விவரமாக தெரிந்து கொண்டது சாவித்ரி சத்யவான் சரித்ரம். அதைச் சுருக்கமாக சொல்வது இங்கே பொருத்தம்.
அஸ்வபதி எனும் ஒரு ராஜாவுக்கு சாவித்ரி என்ற பெண். அவளுக்கு ஏற்ற கணவனைத் தேட முயற்சி செய்து அவள் தந்தை அஸ்வபதி ஒரு சுயம்வரம் நடத்தினபோது வந்த எந்த ராஜ குமாரனையும், ராஜாவையும் சாவித்திரிக்கு பிடிக்கவில்லை. ”சாவித்ரி நமக்கு எட்டாக்கனி” என்று வந்த ராஜாக்களும் கொண்டு வந்த மஞ்சள் நிற பையோடு ஊர் திரும்பினார்கள்.
”இது என்னடா வம்பு. எவனையும் என் பெண்ணுக் கு பிடிக்கவில்லையே ” என அஸ்வபதி வருந்தினான். அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை யார்? என்று கவலை மனதை அரித்தது. சாவித்ரி தனக்கேற்ற மணாளனைத் தானே தேடிக் கொள்ளப் புறப்பட் டாள். உள்ளுணர்வு வழி நடத்த அந்த ராஜ்யத்தின் காட்டுப் பகுதிக்குச் சென்றாள். சத்யவான் என்ற ஒரு மரம் வெட்டியைப் பார்த்த கணத்திலேயே ”இவனே என் கணவன்” என முடிவெடுத்தாள் .
சத்தியவான் மரம் வெட்டி அல்ல. சால்வ நாட்டு ராஜகுமாரன். எதிரிகள் நாட்டைக் கைப்பற்றியதால் ராஜா, தன் மனைவி, குழந்தை சத்யவானோடு காட்டுக்குத் தப்பி ஓடி வந்து இங்கே வாழ்ந்து கொண்டிருந்தான். அஸ்வபதியின் அரண்மனைக்குத் திரும்பிய சாவித்ரி ”அப்பா, நான் சத்யவானைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொன்னதும் அஸ்வபதி மகிழ்ந்தான். சத்யவான் மரம் வெட்டுபவன் அல்ல, விதிவசத்தால் நாடிழந்த ராஜகுமாரன் என்றறிந்ததும் மன நிம்மதி.
சத்தியவான் சாவித்ரி கல்யாணத்தில் ஒரு சிக்கல். ஒரு ஜோசிய முனிவர் அஸ்வபதியிடம் சொன்னபடி சத்யவானுக்கு ஆயுசு இன்னும் ஒரு வருஷம் தான். (நண்பர்களே, எனக்கு தெரிந்து நிறைய கல்யாணங்கள், நல்ல இடத்து சம்பந்தங்கள் சில ஜோசியர்களால் நின்று போகிறது. தடை படுகிறது. ஜோசியர் தப்பா, ஜோசியம் தப்பா என்பது இதை நான் எழுதும் வரையிலும் கண்டுபிடிக்க முடியாத ப்ரம்ம ரகசியம்.)அஸ்வபதிக்கும் ராணிக்கும் கலக்கம், இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும் சாவித்ரி கேட்கவில்லை. சாவித்ரி விரும்பியபடியே சத்யவானின் மனைவியானாள். மனைவி கணவனுடன் தானே தங்கி வாழ வேண்டும்? ஆகவே, சாவித்ரி, மரம் வெட்டும் கணவனுடன் காட்டில் போய் வசித்தாள். ராஜகுமாரியாக வாழ்ந்தவள் சந்தோஷமாக காட்டு வாசியானாள். விடாமல் காமாட்சி விரதம் காரடையான் நோன்பு மேற்கொண்டாள் .கணவனுக்கு ஆயுள் இன்னும் ஒரு வருஷம் தான் என்ற சங்கடம் நாளுக்கு நாள் அவள் மனதை உறுத்தினாலும் தன் மாங்கல்யத்துக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று திடமாக நம்பினாள் . ஒரு வருஷம் முடிந்ததும் சத்யவான் உயிரைப் பறிக்க யமன் வந்தான்.பொதுவாக யமனோ, அவன் ஆட்களோ யார் கண்ணிலும் படுவதில்லை. ஆனால், யமனின் வருகை சாவித்ரிக்குத் தெரிந்துவிட்டது.
‘ யம தர்மா, மனிதர்கள் உயிரைப் பறிக்க உன்னுடைய தூதர்கள் தானே வருவார்கள். நீ எதற்கு வந்தாய்?”
”ஆம், வழக்கமாக என் தூதர்கள் தாம் வருவர். மிகச் சிறந்த மனிதர்களை, உன் கணவன் சத்யவான் போன்ற அப்பழுக்கற்ற நற்குணங்கள் கொண்ட ,பேருக்கேற்ற, பெற்றோருக்கு பணிவிடை செய்து, கடமை தவறாமல் வாழும் உன் கணவன் சத்யவான் போன்றவர்கள் உயிர்களைப் பறிக்க நானே மரியாதை நிமித்தமாக வருவேன்.” என்றான் யமன்.
சத்யவானின் உயிர் ஒரு சிறு கட்டை விரல் அளவில் எமனின் பாசக் கயிற்றுள் அடங்கியது. உடல் கீழே கிடந்தது. யமன் சத்யவான் உயிரோடு தெற்கு நோக்கி செல்ல, சாவித்திரியும் பின் தொடர்ந்தாள் .
‘பெண்ணே நீ எதற்கு என்னைப் பின் தொடர்கிறாய். இந்த எல்லை தாண்டி நீ வரக்கூடாது. உனது கணவன் உடலுக்கு வேண்டிய கிரியைகளைச் செய். திரும்பிப் போ. ஏதாவது கேட்கவேண்டுமானால் சீக்கிரம் கேள். பெண்ணே. என்னை டிலே பண்ணாதே. நிறைய பேர் எனக்காக காத்திருக்கிறார்கள் நான் போகவேண்டும்” என்றான் யமன்.’
‘எமதர்மா, ஏழு அடிகள் சப்தபதி தொடர்ந்து நடந்தாலே வாழ்க்கையில் நட்பு உண்டாகிறது. நான் உன்னோடு பேசிக்
கொண்டு இருக்கிறேன். பக்தையாகவும் தொடர்ந்து வந்திருக்கிறேனே. எனக்கு உதவ வேண்டாமா?”
”உனக்கு ஒரு வரம் தருகிறேன் உன் கணவன் உயிரைத் தவிர வேறு ஏதாவது கேள் ”
”என் கிழ மாமனாருக்கு கண் பார்வை திரும்ப வேண்டும்.. ”
”சரி அப்படியே” இனி நீ போகலாம் ”
மேலும் யமனைப் பின் தொடர்ந்து சாவித்ரி சென்றாள்.
‘ இன்னும் எதற்கு என்னை தொடர்கிறாய்.”
”இல்லை தர்மராஜா. ஆத்மா, தன்வசம் இல்லாமல் எவனும், பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்ரஸ்தன், சந்நியாசி ஆக முடியாது. அந்தந்த ஆச்ரமத்துக்குண்டான கடமைகள், ஞானம், இன்றி வாழ்க்கை நிறைவு இல்லாமல் போகும். என் கணவன் என் ஆத்மா. அவன் எங்கு இருக்கிறானோ, எங்கு செல்கிறானோ அங்கே நானும் போவேன். அவனோடு இருப்பேன்””
‘பெண்ணே, உன் கற்பு, தியாகம், நேர்மை, பண்பு எனக்கு பிடிக்கிறது. உன் கணவன் உயிரைத் தவிர வேறு இன்னும் ஒரு வரம் கேள். தருகிறேன்.
”நன்றி தர்மராஜா, என் தந்தைக்கு நான் ஒரு பெண்ணாக பிறந்தேன். அவருக்கு புத்திர பாக்கியம் வேண்டும்”
‘அடாடா, அதுவும் கொடுத்தாகிவிட்டது. இனியும் தொடராதே. வரக்கூடாத இடத்துக்கு வெகு தூரம் என்னோடு நடந்து வந்து விட்டாய். பூலோகத்தில் வாழும் எவரும் இங்கே உடலோடு வரக்கூடாது. இங்கிருந்து உடனே சென்றுவிடு”’
‘என் கணவனின் தந்தை மீண்டும் ராஜ்யத்தை பெற்று அவர் அரசனாக தனது கடமையை புரிய அருள வேண்டும்”
‘ஆஹா. அவ்வாறே. ராஜ்யமும் திரும்பப் பெற்று உன் தந்தை ராஜ்ய பார கடமையும் புரிய வரம் தந்தேன் . இனியும் இங்கு நிற்காதே திரும்பிச் செல். உனக்கு ஸ்பெஷலாக இன்னுமொரு வரமும் தருகிறேன் உன் புருஷன் உயிரைத் தவிர. வேறு ஏதாவது கேள்.”
”என் கணவனைத் தொடர்வதில் எனக்கு எந்த களைப்பும் கஷ்டமும் இல்லை. தர்மாத்மா, நீங்கள் விவஸ்வானின் புத்திரன். அதனாலேயே வைவஸ்வதன் என்ற பெயரும் கொண்டவர். உங்களைப்போல், உலகில் எல்லோரையும் போல், தர்மம் கடைப்பிடிக்க எனக்கும் சத்யவானுக்கும் வம்சவ்ரித்திக்கு புத்ர பாக்கியம் வேண்டும். அனுக்ரஹம் செய்யவேண்டும். என் குழந்தையை என் தந்தையார் தன் மடியில் போட்டுக் கொஞ்சுவதை நான் பார்க்கவேண்டும்,’நல்லவேளை, தன் கடமையில் இவள் குறுக்கே வரவில்லை என்று ‘நிம்மதி’ கொண்ட யமன் யோசிக்காமல் அந்த வரத்தைத் தந்தான். அவனுக்கு எத்தனையோ இடம் போகவேண்டும். நிறைய பேரை அன்று பிடிக்கவேண்டும். ஆகவே இந்த சாவித்திரி வேறு ”தொண தொண ”வென்று பிடுங்கிக் கொண்டிருக்கிறாளே என்று அவள் கேட்டதற்கு ”சரி” என்று சொல்லி விட்டான். யோசிக்க நேரமே இல்லை அவனுக்கு.’பெண்ணே, தர்மத்தை நன்றாக அறிந்துகொண்டவள் நீ. உனது பரோபகார சிந்தனையை மெச்சி உனக்கு நீ வேண்டிய வரம் அளிக்கிறேன்” என்றான் யம தர்மன். சாவித்திரி யமனை வணங்கி நன்றி கூறி நின்றாள்.
”ஏன் இன்னும் நிற்கிறாய். நீ கேட்டதெல்லாம் கொடுத்துவிட்டேனே. செல் இங்கிருந்து”– யமன்
‘அப்படியென்றால் என் கணவனை எனக்குத் திருப்பித் தா’”
”என்ன உளறுகிறாய்?” திடுக்கிட்டான் யமன். கடமை உணர்விலேயே தான் ஒன்றி இருந்துவிட்டதில் அவள் கோரிய வரத்தின் பின்விளைவை அவன் எதிர்பார்க்கவில்லை.
”தர்ம தேவதையே, நீங்கள் சற்று முன்பு அளித்த வரம் எவ்வாறு என் கணவன் இன்றி நிறை வேறும்? அவருக்கு உயிர் பிச்சை கொடுத்து உங்கள் வரம் நிறைவேற அருள் புரியவேண்டும்”
யமன் கொடுத்த வரம் பலிக்க வேண்டுமென்றால், சாவித்ரிக்கு குழந்தை பிறக்கவேண்டும்; அப்படி குழந்தை பிறக்க, அவளுடைய கணவன் வேண்டுமே! வேறு வழியில்லாமல் சத்யவானைத் திரும்பக் கொடுத்தான் யமன்.
”சாவித்திரி, நீ ஒரு பதிவ்ரதை, சத்தியவானுக் கேற்ற சத்யவதி. இதுவரை நடக்காதது இப்போது நடந்து விட்டது. உனது தர்மம் வென்று அதன் மூலம் சத்தியவான் உயிர் பெறுவான். நீயும் அவனும் இன்னுமொரு நானூறு ஆண்டுகள் புத்திர பௌத்ரர்களோடு வாழ்வீர்கள்” என்று அருளினான் யமதர்மன். நானூறு வருஷம் கழித்து நான் சத்தியவானை பிடிக்க வரும்போது புதுசாக ஏதாவது வரம் கேட்டு என்னை துளைக்காதே” என்று சிரித்தான் யமன்.
சாவித்ரிக்கு இப்படி ஒரு தைரியமும், யமனையே பின்பற்றிப் போகக்கூடிய அருளும் கிடைத்ததற்கு அவள் மேற் கொண்டி ருந்த காரடையான் நோன்புதான் காரணம்.
கணவனின் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் எந்தக் குறையும் வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு சுமங்கலிப் பெண்கள் இந்த காரடையான் நோன்பு மேற்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற கணவன்மார்களும் நீண்ட நாள் சேர்ந்து வாழ்ந்து நல்லபடியாகக் குடும்பத்தை நடத்திச் செல்வார்கள் என்பது ஐதீகம். இந்த விரதத்தை காமாட்சி விரதம் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அம்பிகை காமாட்சியும் இப்படி ஒரு விரதம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டிருக்கிறாள்.
காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து காமாக்ஷி தியானத்தில் ஆழ்ந்தாள். கம்பா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்துத் பிடித்துவைத்திருக்கும் லிங்கம் கரையக்கூடாதே என்று காரடையான் நோன்பை மேற்கொண்டாள். அதாவது தெய்வமே மனித ரூபத்தில் இப்படி விரதம் மேற்கொண்டு மனிதர்களுக்கு வழி காட்டி யிருக்கிறது! காமாக்ஷி அம்மனின் விரத மகிமையால் மண் சிவலிங்கம் கரையவில்லை, குறைய வில்லை. நதி வெள்ள மாய்ப் பெருக் கெடுத்து ஓடியபோதும் மணல் சிவலிங்கத்தை நெருங்காமல் சுற்றி சென்றது. விரதம் முடிந்ததும் சிவ பெரு மான் தோன்றி அவளைத் திருமணம் செய்துகொண்டார். இதுதான் காமாட்சி விரத மஹிமை.
காரடையான் நோன்பு அன்று சுமங்கலிகள் அதிகாலையில் நீராடி, நெற்றியில் குங்குமத் திலகத்தோடு விரதம் நல்லபடியாக நடந்தேற விநாயகரை பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு சுத்தமான சொம்பில் நல்ல நீரை நிரப்பி ,மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைக் கொத்து செருகி, தேங்காயைக் குடுமி மேலே பார்த்தபடி சொம்புக்கு கிரீடமாக வைப்பது தான் பூஜா கலசம். நீர் தெளித்து துடைத்து கோலம் போட்டு அதன் மேல் கலசம் வைத்து புஷ்பம் சார்த்துவார்கள். கழுத்தில் கட்டிக்கொள்ளத் தோதாக சற்றே தடிமனான கயிறை எடுத்து அதற்கும் மஞ்சள் தடவி தயாராக வைத்துக் கொள்வார்கள். வீட்டில் இருக்கும் சுமங்கலிகள் கன்னிப் பெண்கள் எல்லோருக்கும் ஆளுக்கு ஒன்று நடுவிலே பூ கட்டிய மஞ்சள் சரடு. விரதத்துக்கு நைவேத்யமாக காரடையைத் தயாரித்து, கூடவே வெண்ணெயும் இருக்கும். வெல்ல அடை, உப்பு அடை இரண்டு வகை தயாரித்து ஒரு வாழை இலையில் வைத்து, அடைகளுக்கு மேல் கொஞ்சம் கெட்டியாக வெண்ணை வைத்து கலசத்துக்கு முன் படைப்பார்கள். வெற்றிலை-பாக்கு, பழம், பூ, மஞ்சள் சரடு எல்லாவற்றையும் வைத்து கும்பத்தில் ஆவாகனமாயிருக்கும் அம்மனை நோக்கி, ‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் வைத்தேன். ஒரு நாளும் என் கணவன் எனைப் பிரியாத வரம் தருவாய் தேவி’ என்று மனமுருகச் சொல்லி வேண்டிக்கொள்வது வழக்கம். கூடவே உங்களுக்குத் தெரிந்த அம்மன் ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் கூட தாராளமாக சொல்லலாம்.
இப்படி ஸ்லோகம் சொல்லி, நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி, பூஜையை முடித்ததும், இந்த கும்பத்துக்கு எல்லாரும் நமஸ்காரம் செய்து மஞ்சள் சரடை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொள் வார்கள். பிறகு காரடை, வெல்லஅடை பிரசாதத்தை வெண்ணெயோடு சேர்த்து சாப்பிடுவோம். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துண்டு, காரடை கொடுத்து உபசாரம் செய் வோம். அவர் களுடைய மன சந்தோஷம் சுமங்கலிகள் மாங்கல்யத்தை மேலும் பலமுள்ளதாக்கும்.
‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்று ஒரு பழ மொழி. அதாவது, மாசி மாதத்தில் வரும் இந்த காரடையான் நோன்பு நாளன்று பழைய தாலிச் சரடுக்கு பதிலாகப் புது தாலிச் சரடை மாற்றிக்கொள்வது. மாங்கல்ய பலத்தை அதிகரிக் கக்கூடிய விரதத்தை மேற்கொள்ளும் இந்த நாளைவிட, தாலியை புதுப்பித்து மாற்றிக் கொள்வதற்கு வேறு நல்ல நாள் இருக்க முடியுமா? நைவேத்யம் செய்த அடைகளில் சிலதை எடுத்து வைத்து மறு நாள் பேப்பர், பிளாஸ்டிக், தின்பதற்கு வரும் ஒரு பசுமாட்டுக்கு கொடுத்து அந்தப் பசுவையே அம்மனாக நினைத்து வழிபடலாம். காரடையான் நோன்புக்கான ஒரு ஸ்லோகம் தருகிறேன். நம்பிக்கையோடு துதித்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் நிறைவாகவும், சந்தோஷமாகவும் அமையும்.
”சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலாபாங்கலீலாம், குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூதப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம்தீபயந்தீம்,காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே”
”பிறைச் சந்திரனை சிரசில் ஆபரணமாக சூடியவளே, அம்பா, அழகு வதன முடையவளே , மனக் கிலேசம் சஞ்சலம், கொண்டவர் வேதனையை உன் கடைக்கண் பார்வையால் தீர்ப்பவளே, குந்த புஷ்பம் போல பேரழகியே, அழகிய மனம் கவரும் சரீரத்தைக் கொண்டவளே, மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே, வாக்தேவி, கவிகளின் வாக்கில் கல்பவல்லியே , காமாக்ஷி , தாயே உன் திருவடிகளுக்கு நமஸ்காரம்”
சாவித்ரி தான் மேற்கொண்ட கௌரி விரதத்தினை முடிக்க மண்ணால் அடையை செய்து வழிபட்டாள். விரதம் பூர்த்தியானது. இன்று காரடையான் நோன்பு கொண்டாடும் பெண்களின் கணவர்களும் குடும்பங்களும் ஒரு நூறு ஆண்டுகளாவது வாழட்டும்.
காரடையான் நோம்பு அல்லது காரடையன் நோன்பு என்பது மீன சங்கராந்தி அல்லது சங்கிராமண அன்று கொண்டா டப்படும் ஒரு முக்கிய தமிழ் பண்டிகையாகும். இது தமிழ் மாதம் மாசி முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் தருணத்தில் கொண்டாடப்படுகிறது. காரடை என்பது இந்த நாளில் தயாரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான நிவேத்யத்தின் பெயர் மற்றும் நோம்பு என்றால் விரதம் அல்லது உபவாசம்.
அதே நாளில் சாவித்திரி தனது கணவர் சத்தியவானை மரணத்தின் அதிபதியான யமனிடமிருந்து திரும்பப் பெற்றதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக காரடையான் நோம்பு சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளில் பெண்கள் கௌரி தேவியை வணங்கி, காரடையான் நோம்பு நிவேத்தியம் செய்கிறார்கள். பூஜைக்குப் பிறகு பெண்கள் தங்கள் கணவரின் நல்வாழ்வுக்காக மஞ்சள் சரடு அல்லது நோன்பு சரடு எனப்படும் புனித மஞ்சள் பருத்தி நூலைக் கட்டுகிறார்கள்.
திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இதை கடைபிடிக்கிறார்கள், திருமணமாகாத பெண்கள் தங்கள் கணவனாக சிறந்த நபரைப் பெற இதை கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் திருமணமான பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து, தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளுக்காகவும் அல்லது எதிர்காலத்தில் சிறந்த நபரை தங்கள் கணவராகப் பெறவும் இந்து தெய்வங்களை பிரார்த்தனை செய்கிறார்கள்.
காரடையான் விருத்தத்திற்கான விரதம் சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறும் நாளில் சூரிய உதயத்திலிருந்து அனுசரிக்கப்படுகிறது. மீன சங்கரமண நேரத்தைப் பொறுத்து தற்போதைய சூரிய உதயம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை எந்த நேரத்திலும் சாவித்ரி நோம்புக்கான வேகமான நேரம் குறையக்கூடும். உண்ணாவிரதத்தின் காலம் உள்ளூர் சூரிய உதயம் மற்றும் சங்கரமண தருணத்தைப் பொறுத்தது மற்றும் எல்லா இடங்களுக்கும் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.