இன்றைய விசேஷம் – நங்கநல்லூர் J K SIVAN
ஹிந்துக்கள் எப்படி வாழவேண்டும் என்று அறிந்தவர்கள். இறைவனோடும் இயற்கையோடும் ஒன்றிய ஆனந்த வாழ்வு வாழ்பவர்கள். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விசேஷம், ஏதோ ஒரு கடவுளோடு சம்பந்தப்பட்ட திரு நாள். தன்னைப் படைத்த தெய்வத்துக்கு புராணங்களில் கண்டபடி திருமணம் செய்வித்து அழகு பார்ப்பவர்கள். அப்படித்தான் இன்று பங்குனி உத்ரம் தெய்வீக திருமண திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. என்ன விசேஷம் இன்று?
வருஷா வருஷம் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதம் பௌர்ணமியோடு கூடிய உத்ரம் நக்ஷத்ரம் முருகனுக்கு உகந்த நாள். முருகனின் அப்பா, சிவனுக்கும் அம்மா பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மதுரையில் திருமணம் நடந்த நாளும் இதே தான். ஆகவே சிவபக்தர்களுக்கு இது மேலும் ஆர்வத்தோடு கொண்டாட உதவுகிறது. தியானம் பண்ணிக்கொண்டிருந்த பரமேஸ்வரன் மேல் மன்மதன் மலரம்பு விட்டு மோனத்தை கலைத்ததால் முக்கண்ணன் நெற்றிக்கண் திறந்து மன்மதன் எரிந்து சாம்பலானான். பிறகு தேவர்களுக்கு ஆறுதல் கூறி சிவன் உமா தேவியை மணந்த நாள். விசேஷ அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம் ஸ்தோத்ரம் ஹோமம் எல்லாம் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். சுவாமி ஊர்வலம் வாத்ய கோஷத்தோடும். வைதிகர்கள் வேத பாராயணத்தோடு நடக்கும்.உயர்ந்த தத்துவமாக சொல்லப்போனால், நமது ஆன்மா பசு. பசுபதியுடன் இணைவது. அநேக சிவபக்தர்கள் இன்று விரதம் இருப்பார்கள். இன்றைய விரதத்தின் பெயர் கல்யாணசுந்தர விரதம். வைணவர்களுக்கு இது ஒரு புனித நாள். எப்படி?
பங்குனி உத்ரத்தன்று தான் ஸ்ரீ ராமன் மிதிலையில் சீதா தேவியின் கரம் பிடித்தார். பாணிக்ரஹணம். ஸ்ரீரங்கத்தில் வில்லிப்புத்தூரில், மற்றும் அநேக பெருமாள் கோவில்களில் ரங்கநாதன் ஆண்டாள் திருக்கல்யாண நாள், மொத்தத்தில் பங்குனி உத்ரம் திருக் கல்யாண நாள்.
பங்குனி மாதத்தில் தான் சுப்ரமணியன் ராக்ஷஸர்களை ஒடுக்க, பெற்றோர் ஆசியோடு புறப்பட்டார்.வழியில் தடையாக நின்றது க்ரௌஞ்சமலை. அந்த மலையை ஒட்டி தான் மாயாபுரி பட்டினம்.
சூரபத்மனின் தம்பி தாரகாசுரன் அரசாண்ட ஊர். தாரகாசுரன் யானை முகம் கொண்டவன். சூரசம்ஹாரத்தில் அவனை பார்த்திருக்கிறோமே. சூரபத்மன் குடும்பமே தேவர்களை வாட்டி வதைப்பதில் ஈடுபட்ட அசுர பலம் கொண்டவர்கள். தாரகாசுரனை சக்திவேலால் கொன்று தேவசேனாபதி தேவானையை மணந்த நாள் இந்த பங்குனி உத்ரம்.
ஐயப்ப பக்தர்களுக்கும் இது கொண்டாட்ட நாள். ஐயப்பன் முருகனின் அம்சம் அல்லவா?
பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களில் வழிபாடு செய்வதோடு, புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது ஹிந்து சுமங்கலிகளின் வழக்கம்.