BATHRAGIRIYAR J K SIVAN

பத்ரகிரியார் புலம்பல்  –  நங்கநல்லூர் J.K. SIVAN
பர்த்ருஹரி என்ற  வடக்கத்தி ராஜா, ஒரு விரக்தியில்  சகலமும் துறந்து, வாழ்க்கை வெறுத்து, சந்நியாசியாக தெற்கு நோக்கி நடந்து திருவிடைமருதூரில்  பட்டினத்தாரின் சிஷ்யனாகி  பத்ரகிரியார் என்ற பெயரோடு வாழ்ந்தார் என்கிறார்கள். இதெல்லாம் நிரூபிக்க அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. யாரோ பத்ரகிரியார் அற்புதமான சில விஷயங்கள் சொல்லி இருக்கிறார்  என்று தெரிந்து அவர் சொன்ன விஷயங்களை மனதில் வாங்கி சிந்திப்பதும் அதை பின்பற்றுவது மட்டுமே நல்ல பலன் அளிக்கும்.  பத்ர கிரியார் பாடல்கள்  ரெண்டு வரி மட்டுமே.  தனக்குத் தானே  ”நான் இதை அடைவது, திருந்துவது எக்காலத்தில் ?” என்று கேட்பது போல்  அமைந்தவை.  இதோ சில  பத்ரகிரியார் தத்துவங்கள்:
அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன்
தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம்?

இந்த பிரபஞ்சத்தை படைத்து காத்து தேவைப்படும்போது அழித்து, இந்த உலக இயக்கத்தையே தனது நடனமாகக்  கொண்டு  ஆடும் அந்த சிதம்பரேசன் என் தலைவன், அவனுக்கு நான் தொண்டரடி தொண்டன் என்று பணி செய்யவேண்டுமே!  அது எப்போ நடக்கும் ?

பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம்?

ஆமாம், ஆமாம், அந்த மஹா விஷ்ணுவே வராக உருவெடுத்து பூமி பாதாளம் வரை குடைந்து பார்த்தும் அடி  தெரியவில்லையே. மேலே முடியும் தெரியவில்லை. திருவண்ணாமலை குன்றில்  உன்னை ஒரு  ஒளியாக கண்டு மகிழ்வது ஒன்றே போதுமே.  அது எனக்கு எப்போ நடக்கும் ?

தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்?

என்னென்னவோ படித்துவிட்டேன். கேட்டு விட்டேன். பார்த்து விட்டேன். பரமேஸ்வரா! உன் ப்ரம்மத்வத்தை, அத்வைத சித்தாந்தத்தை, முக்திக்கு வித்தான அந்த ஞானத்தைப் பற்றி கொஞ்சமாவது நான் நினைக்க வேண்டாமா: அது எப்போ நடக்கும் ?

வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்?

சரி வேதாந்தம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்.  எல்லாவற்றையும்  விட்டுவிட்டு, இதிலிருந்தும் விடுபட்டு தனித்து உன்னையே நினைவில் நிறுத்தி  தியானம் பண்ணினால் எவ்வளவு சுகமாக இருக்கும்?  அது எப்போ என்னால்  முடியும் ?

இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்?

தாமோதரனை ரெண்டு நாள் முந்தி  ஹோட்டல் ராமா கபேயில் சாயந்திரம்  பார்த்தபோது  சூடாக பஜ்ஜி ஆர்டர்  பண்ணி  எனக்கும் வாங்கி கொடுத்தானே. இன்று காலை அவனுக்கு பால் என்கிறார்களே! இந்த வாழ்க்கை ஒரு  மாயை. நீர் மேல் குமிழி, இருப்பது போல் தோன்றி  இல்லாமல் போவது. நேற்றிருந்தவனை இன்று காலை காணோம். இன்று இரவு நான் படுப்பேன், தூங்குவேன் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை.  நாளை காலை எழுந்திருப்பேன் என்றும் சொல்ல இயலவில்லை. இந்த மாதிரி அநித்யத்தை எவ்வளவோ முறை அறிஞர்கள், ஞானிகள் சொல்கிறார்கள், கேட்டிருக்கிறேன். அப்படியும்  திரும்ப திரும்ப  புத்தி, மனம்,  சாம்பார் சாதம் தேடுகிறதே.  நான் உண்மையை அறிவது எப்போ?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *