அறிவுரை ஒன்று – நங்கநல்லூர் J K SIVAN
என் தந்தையார் ஜே. கே. ஐயர் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு கொண்டாட்டம். அற்புதமான சிந்தனையாளர். ஸமஸ்க்ரிதம் ஆங்கிலம் தமிழ் என்ற மூன்று மொழிகளிலும் வல்லவர். நிறைய படித்ததோடல்லாமல் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு மாணவர்களுக்குப் புரியும்படியாக ஜனரஞ்சகமாக கல்வி, நல்லறிவு அறிவுரைகள் போதிப்பவர். ஒரு சம்பவத்தை அவர் மாணவர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் இருக்கிறது. என் துரதிர்ஷ்டம் நான் உயர் நிலைப் பள்ளி படிக்கும் காலத்தில் அப்பா ஒய்வு பெற்று வீட்டில் அமைதியாக தனியாக ஜபம் செய்து கொண்டிருந்தார். வீட்டில் அவர் அருகில் அமர்ந்து நான் பாடம் கேட்டதில்லை. இது தான் அவர் மாணவர் ஒருவர் சொன்ன சம்பவம்.
ஒருநாள் வகுப்பில் அப்பாவின் ஜிப்பாவிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு கீழே விழுந்தது. ஒரு மாணவன் அதை எடுத்து அவர் கையில் கொடுத்தான். அப்போதெல்லாம் பத்து ரூபாய் நோட்டு பெரிய அளவில் இருந்தது. மதிப்பு ரொம்ப அதிகம்.
அந்த ரூபாய் நோட்டை உயர்த்தி மாணவர்களிடம் காட்டினார். ”இது என்ன தெரிகிறதா? யாருக்கு வேண்டும்?”இதன் மதிப்பு என்ன?””பத்து ரூபாய்”நிறைய கைகள் உயர்ந்தன. ஜே கே.ரூபாய் நோட்டை கசக்கினார் ” இப்போது வேண்டுமா?அப்போதும் கைகள் உயர்ந்தன.ரூபாய் நோட்டை காலின் கீழ் போட்டு மிதித்து நசுக்கினார் ”’இப்போதும் வேண்டுமா?”கைகள் இறங்கவில்லை.
நான் இந்த ரூபாய் நோட்டை கீழே போட்டேன், கசக்கி, மிதித்து, உதைத்து, நசுக்கி இதெல்லாம் செய்தேனே. அப்போதும் அதன் மதிப்பு குறையவில்லை. அதை எல்லோரும் விரும்பினீர்கள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியதென்ன?
நமது வாழ்வில் எத்தனை யோ சந்தர்ப்பங்களில் நாம் கீழே விழுகிறோம், கசங்குகிறோம், மிதி படுகிறோம், நமது எண்ணங்களினால், முடிவுகளினால் குப்பையாகிறோம், ”சே என்ன வாழ்க்கை.எதற்கும் உதவாக்கரை யாகபோய்விட்டோமே என்று நம்மை நாமே சபிக்கிறோம். வருந்துகிறோம். எந்த கஷ்டம் வந்தாலும், எந்த இடுக்கண் வந்தாலும், துயர் நேரிட்டாலும், நாம் நாமே தான். நமது மதிப்பு குறையாது. நம்மை தெரிந்தவர்கள், நம்மை விரும்புவர்களுக்கு நம் மீது அன்பு செலுத்துபவர்களுக்கும் நாம் மதிப்புள்ளவர்கள்,உயர்ந்தவர்கள். ஒன்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய மதிப்பு நாம் செய்யும் செயல்களால் அல்ல, நமக்கு தெரிந்தவற்றால் அல்ல.நாம் உண்மையில் யார், நாம் யாருக்காக வாழ்கிறோம் என்பது தான் காரணம். நாம் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்கள். பெருமைப்பட வேண்டியவர்கள்/ மறக்கவேண்டாம். நமது குணம், நட்பு தன்னலமற்ற பண்பு மிக்க சேவை தான் நம்மை உயர்த்துபவை. நமக்கு நேரும் துன்பங்கள், சங்கடங்கள் தானாக வந்தவை அல்ல, நமக்கு கர்மபலனால் நெருப்பினை. அவன் அருளால் எல்லாம் கடந்து போகும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது.