உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி
8 முயற்சி திருவினையாக்கும்
”எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி
லப்போருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளி
னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே
யுண்மையிற் காண லுணர்ந்திடுக – விண்மை 8
காண முடியாததை, கேட்க முடியாததை, ஐம்புலன்களால் உணரமுடியாத அவனை, நாம் ஏதோ ஒரு உருவம் கொடுத்து, பெயரிட்டு, கண்டு வணங்கி மகிழ்ந்து வாழ்கிறோம். இப்படித்தான் அரூபமான அவனைக் காண, வணங்க, நம்மால் முடியும். அவன் மட்டுமல்ல நாமும் அப்படித்தான். இயற்கையாக ஆத்மாவுக்கு உருவமோ, பெயரோ இல்லை. அதை இந்த உடலாக மதித்து, நம்பி, ஏற்று, பெயரிட்டு, அந்த உடல் சுகத்தில் வாழ்பவர்கள் நாம். இதனால் உண்மையான ஆத்மாவை, வாஸ்தவமான, அழிவற்ற, அதை உணர்வதில்லை.ஆத்மாவாக இருந்தும் அதை உணராமலேயே மிருக வாழ்க்கை வாழ்ந்து மடிகிறோம்.
ஞானிகள் நம்மைப் போல் இல்லை. மனதை உள்ளே செலுத்தி ஹ்ருதயத்தில் உறையும் ஆத்மாவைத் தேடி உண்மை அறிகிறார்கள். ஆனந்த நிலை பெறுகிறார்கள். நாம் என்ன செய்யலாம்? நாம ரூபத்தோடு இறைவனை வணங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதோடு உள்ளே பிரவேசிக்கவும் முயன்று, நான் உண்மையில் யார் என்று விசாரம் செய்து கொண்டே முன்னேறலாம். ஒரு ஞானம் நிறைந்த குரு நமக்கு இதற்கு வழிகாட்டுவார். வேதாந்த விஷயங்களை கற்றறிந்து தனக்குள் தானே பரிக்ஷித்துக் கொண்டு படிப்படியாக ஆன்மாவை உணர கண்டிப்பாக எல்லோராலும் முடியும்.
ஐம்புலங்கள், உலக ஈர்ப்புகளிலிருந்து முதலில் நம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும். நம்மை ஏதாவது பிடித்து பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருந்தால் முன்னுக்கு போவது எப்படி? தூய சித்தத்தில் தான் ஆத்ம ஞானம் புரியும், விளங்கும். தியானம் மனதை ஒருமுகப்படுத்தும்.
நமது சரீரம் இருக்கிறதே அது தான் நமது கர்மத்தின் வினையின் பிடிப்பில் நாம் ஆடும் நாடகமேடை. மனம் ஆத்ம உபாசனையின் அரங்கம். நமது முயற்சியில் வெற்றி நமது ஆர்வத்தை பொறுத்தது. ஒரு காரியத்தை, சரியாகவோ, தப்பாகவோ, அல்லது எதுவும் செய்யாமலோ கூட நம்மால் இருக்க முடிகிறது அல்லவா? ஞானம் என்பது அனுஷ்டிப்பதால் வருவதல்ல, அறிவதால், அறிவினால் பெறுவது.
ஒரு உருவத்தை கடவுளாக ஏற்று நாம் வழிபடுகிறோம் அல்லவா? உருவத்தில் இறைவனை அறிவதோடு நில்லாமல் மனதை நம் உள்ளே திருப்பி நமது ஆன்ம ரூபத்தையும் தேடுவதில் செலுத்தி வெற்றி பெற வேண்டும். ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்:
ஒரு சாதகர் வடக்கே பஞ்சாபில் கிருஷ்ண தர்சனத்துக்காக தீவிரமாக முயன்றார். காணும் சாதுக்களை எல்லாம் அழைத்து வணங்கி வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். ஒரு வைஷ்ணவ சாது ”ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” ”எனும் மந்திரத்தை உபதேசித்து இதை விடாமல் சொல் .கிருஷ்ண தர்சனம் கிடைக்கும் என்றார். வெகுநாளாகியும் இதனால் பலனில்லை. ஒரு நாள் ஒரு சாது தெற்கே இருந்து வந்தவர் ”நீ ரமணாஸ்ரமம்” போ என்றார். பக்தரும் திருவண்ணாமலை வந்து ரமண மஹரிஷியைப் பார்த்தார். வடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது.
”இந்த ஆசாமி தான் பஞ்சாபில் என் வீட்டுக்கு வந்து திருவண்ணாமலை வந்து தன்னை தரிசிக்க பிரசாரம் செய்தவர். ஏமாற்று பேர்வழி” என்று ஆஸ்ரமத்தில் சிலரிடம் முறையிட்டார். அவர்கள் அவரைப் பார்த்து சிரித்தார்கள்.”என்னய்யா உளறுகிறீர்? பகவான் ஐம்பது வருஷங்களாக திருவண்ணாமலையை விட்டுஎங்குமே சென்றதில்லையே’ என்ற பிறகும் ரமணர் மேல்அந்த பக்தர்க்கு மரியாதையோ, பக்தியோ உண்டாகவில்லை. திருவண்ணாமலையில் தங்கி கிருஷ்ண ஜெபத்தில் ஈடுபட்டு கிருஷ்ண தர்சனம் கிடைத்தது. தற்பெருமை தலை தூக்கியது.
ஒருநாள் ரமணரிடம் சென்று ‘ நீங்கள் எதற்கு நேரத்தை வீணடித்து இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள், நீங்களும் கிருஷ்ண ஜபம் செய்து என்னைப்போல் பலன் பெறலாமே” என்று அறிவுரை சொல்லவேண்டும் என தோன்றியது. ரமணாஸ்ரமம் சென்றார். பல முறை முயன்றும் அவரால் சொல்ல வந்ததை சொல்ல இயலவில்லை. பக்தர் மனதில் ”நான் யார்” நான் யார் ”என்ற தேடலே தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ரமண மகரிஷி சைகையால் அவரை அழைத்து பேசினார்:
”இவ்வளவு நாள் எங்கே இருந்தாயப்பா?”
”நான் மலையடிவாரத்தில் தவம் செய்துகொண்டிருந்தேன்”
”ஓஹோ அதனால் பலன் அடைந்தாயா?”
”கிருஷ்ண தரிசனம் பெற்றேன்”
”விடாமல் எப்போதுமேவா?”
”இல்லை சுவாமி, விட்டு விட்டு, எப்போதாவது.”
”தோன்றி மறைவது எதுவும் ஸத்யம் இல்லையே. சாஸ்வதமாக அனைத்தும் அறியும் சக்தி தந்து அருள்வது, ஒளிர்வது, எதுவோ அதைக் கவனி, அது தான் உன் ஆத்ம ஸ்வரூபம்”
பேச்சு நின்றது. பகவானின் கண் பார்வை பக்தரை ஊடுருவியது. பக்தர் மனதில் நான் யார் எனும் ஆத்மவிசாரம் அப்போது முதல் உருவாகியது. கிருஷ்ண தரிசனம் அவரை சத்குருவிடம் அழைத்து சென்று ஆத்ம ஞானம் பெற வைத்தது.
நாம ஜபம், ரூப தியானமும் ஒரு பக்தனை படிப்படியாக ஆத்ம ஞானத்துக்கு இட்டுச் செல்லும். பகவான் ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த உதாரணம். பகவான் ரமணர் வெளியே குரு உதவி இன்றி சித்தம் ஸ்வரூபத்தில் ஒடுங்கியவர். ரொம்ப அதிசய மானவர் .
நாம ஜபம், ரூப உபாசனை, தியானத்தில், இவற்றோடு நிற்காமல் மனத்தை ஆத்ம விசாரத்தில் கொண்டு சென்றால் தான் முழு பயன்.
ரமணாஸ்ரமத்தில் பக்தர்களுக்கு, நாம ஜபம், ரூப ஆராதனை, த்யானத்தோடு பகவான் ஆத்ம விசாரத்திலும் ஈடுபட வைத்து உபதேசித்தார்.
நடேச முதலியார் என்ற ஒருவர் ரமண மஹரிஷியின் உபதேசம் பெற ரொம்ப முயன்றார். அவர் கனவில் ரமணர் தோன்றி ”முதலில் ரிஷபாரூடனான பரமேஸ்வரனை தியானி” என்று உபதேசித்தார். அவ்வாறே செய்து முதலியார் ரமணரிடம் வந்தார்.
”சுவாமி , எனக்கு நீங்கள் அருளவேண்டும் ”
” அப்பா, அருளை வேண்டுவது யார்? உன்னிலிருக்கும் ஆத்மாவா, உன் தேகமா, நீ இதில் யார்?”
”தெரியவில்லை சுவாமி ”
”தேஹத்தால் அதைக் கேட்க முடியாது. ஏன் என்றால் அது ஆத்மாவை அறியாது. கேட்பது ஆத்மா என்றால் அதற்கு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே, அதுவே அருள் ஸ்வரூபம் தானே . எப்போது ஆத்மா தான் தேகம் இல்லை என்று உணர்கிறதோ அப்போதே அதற்கு அருள் சம்பவித்துவிட்டது”
ரமணரின் இளவயதில் பள்ளிக்கூடத்தில் சக மாணவன் விளாச்சேரி மணி. அவனை எல்லோரும் போக்கிரி மணி என்று அழைப்பார்கள். அவன் ஒருநாள் அவன் தாயாரோடு திருப்பதி சென்று திரும்பும் வழியில் அவன் அம்மா ரமணரை தரிசிக்க வேண்டும் என்று விரும்பியதால் தாயோடு திருவண்ணாமலை சென்றான். தனது பால்ய நண்பன் வெங்கட் ராமனுக்கு என்ன ஆயிற்று என்று அறிய ஆவலோடு வந்தான். ராமணரிடம் அவனுக்கு பக்தி இல்லை. விரூபாக்ஷ குகையில் ரமணரைப் பார்த்த போது அவன் கண்ணுக்கு ”கடவுளே மனித ரூபத்தில் தீயில் ஸ்புடம் போட்ட தங்கம் போல் அமர்ந்தி ருப்பது மட்டுமே தெரிந்தது, கண்கள் அசைவற்று அகண்ட ஏரி போல் தோன்றியது. உடல் நடுங்க அப்படியே தன்னை மறந்த நிலையில் மணி கீழே விழுந்து வணங்கினான். ரமணர் பாதங்களை கெட்டியாகப் பற்றிக்கொண்டு ”பகவானே என்னைக் காப்பாற்றுங்கள்” என்று உரக்க கத்தினான்
”சே, சே, என்ன மணி இது. என் கால்களை விட்டு விட்டு ”சிவ சிவா ” என்று சும்மா இரு” என உபதேசித்தார். அவரது பாத ஸ்பரிசம் பட்டது முதல் மனதில் விடாமல் ” ஓம் நமசிவாய” என்ற மந்திரம் இதயத்துடிப்பில், ரத்த ஓட்டத்தில் மணிக்கு கலந்துவிட்டது. அவனது வாழ்வு இப்படியே நடந்து அமைதியாக சிவனடி சேர்ந்தான்.
நமக்கு எது சுலபமாக தோன்றுகிறதோ அதைச் செய்வதிலிருந்து தான் கடினமானவற்றை துவங்க வேண்டும்.