பட்டினத்தார் – நங்கநல்லூர் J K SIVAN
”இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்”
ஆரிய பவன் அல்வா சாப்பிட மூணு மணிக்கே கிளம்பி குடை பிடித்து நடந்து ரயில் ஏறி, கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, நடந்து கோவிந்தப்ப நாயக்கன் தெரு வரை போய் ஹல்வா சாப்பிட்டு இந்த தொந்தியைத் தடவி தடவி வளர்த்தேன். பகீரென ஒரு எண்ணம். இந்த தொந்தி எனதா?? இல்லை செட்டியார், அது எங்களுக்கு தான் சொந்தம் ? யார் சொல்வது இப்படி என்று பார்க்கிறேன். பேய்கள். கழுகுகள் , நாய்கள் , நரிகள்.. இதெல்லாம் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு என் பெரிய தொப்பையை பார்க்கின்றனவே. ஒருநாள் என் செல்லத் தொப்பையை என் உடலோடு ஒருநாள் தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் போட்டுவிடுவார்களே . அப்போது பாய்ந்து வந்து இந்த பேய்கள், நாய்கள், நரிகள், கழுகுகள், அல்வாவோடு இந்த தொப்பையை கிழித்து…..ஐயையோ , போதும் நிறுத்து…வேண்டாம். நான் இந்த உலகில் இருப்பதே அநித்தியம். பொய் ,நிச்சயம் இதை அப்படியே விட்டுவிட்டு கட்டின துணியோடு போவது மட்டுமே நிச்சயம்.
நித்யம்…
”நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே”
தெய்வ வழிபாடு, பூஜை எல்லாம் இப்படி தான் பண்ணவேண்டும் என்ற முறை , நெறி, வழக்கம் இருக்கிறது. அதற்கு ஆகமங்கள் இருக்கிறது. அதை நம்புகிறோம். பூஜை என்றால் அதற்கு மந்திரங்கள், அபிஷேகம், அர்ச்சனை, தூப தீப ஆரத்திகள் உண்டு.வாத்ய கோஷம் எல்லாம் உண்டு. ஹோமங்கள், தர்ப்பணம், அர்ப்பணம் எல்லாம் இருக்கிறது. அதற்கு காலம் நேரம் உண்டு, காலை, உச்சிப்பகல், மாலை நேரங்களில் ஜபம், மந்திரங்கள் உச்சரிக்கிறோம். மூச்சை அடக்கி தியானம் பண்ணுகிறோம் நாம அர்ச்சனை, பாராயணம் பண்ணுகிறோம். விபூதி, சந்தனம், குங்குமம் அணிகிறோம் . பட்டினத்தார் வஞ்சனை என்கிற வார்த்தையை உபயோகிப்பதை புரிந்து கொள்வோம். வஞ்சனை என்றால் உள்ளொன்று வெளியே மற்றொன்று என்கிற ரெட்டை வேடம். முழுமன ஈடுபாடு அங்கே இல்லை என்றால் வழிபட்டால் பயனில்லை. அது மடமை, கபடம் ஆகும். ஆகவே தன்னை மறந்து மனம் வாக்கு,. காயம் மூன்றுமே இறைவன் மேல் நம்பிக்கையோடு ஒன்றிணைந்து வழிபடவேண்டும். நம்மை நாமே திருத்திக் கொள்வோம். ‘வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்’ என்று உலகநாத புலவர் ”உலகநீதியில்” சொல்வது ஞாபகம் வருகிறது.