ஸ்ரீ ஓட்டீஸ்வரர் ஆலயம். – நங்கநல்லூர் J K SIVAN
நான் ஒரு பெரும் பணக்காரன், அதிர்ஷ்டக்காரன் கூட என்று சொல்கிறேனே. என் சொத்து எது தெரியுமா? உங்களைப்போல் உள்ளன்புடன் பழகும் நண்பர்கள் குழாம். எனக்கு ஆயிரக்கணக்கில் நண்பர்கள், நூற்றில் தொணணுறு பேரை பார்த்தது கூட கிடையாது. எல்லாம் முகநூல் வாட்சாப், டெலிபோன், வீடியோ மூலம் தான். என் செல்வம் நண்பர்கள் என்பதால் நான் செல்வந்தன். அதிர்ஷ்டக்காரன் எப்படி என்றால் பல நண்பர்கள் என்னை அவர்கள் ஊர்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கோவில்களை தரிசிக்க வைக்கிறார்கள். இது அதிர்ஷ்டம் இல்லையா? எல்லோருக்குமா இந்த லாட்டரி பரிசு கிடைக்கிறது.
நேற்று அனுஷம். மஹா பெரியவா பற்றி அநேகருடன் பேச்சு. வழக்கம்போல் கட்டுரைகள் எழுதி வெளியிட்டேன். சாயந்திரம் ஒரு அழைப்பு. நண்பர் முருகன், கண்ணன் இருவரும் சைதாப்பேட்டை காரர்கள். இளவயது நண்பர்கள். ஒருவர் வாராந்திர பத்திரிகை நங்கநல்லூரில் நடத்துபவர். இன்னொருவர் ஆட்டோ ரிக்ஷாவில் எங்கும் சுற்றுபவர். இருவரும் பெரியவா பக்தர்கள் என்பதால் எனக்கு பழக்கமானார்கள் . அவர்கள் சென்னை யில் மாம்பாக்கம், சித்தாலப்பாக்கம், காரணை ஊர்களுக்கு அருகே இருக்கும் ஒட்டியம்பாக்கம் என்ற ஊருக்கு என்னை நேற்று அழைத்துச் சென்றதன் காரணம். அங்கே ஒரு பழைய சிவாலயத்தில் மஹா பெரியவா படம், ஆதி சங்கரர் படம் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செயதிருந்தது. அதை தரிசிக்க நாலு வார்த்தை சொல்ல. நான் ஆதி சங்கரரோடும், மஹாபெரியவாவுடனும் (பட ரூபத்தில் ) சேர்ந்து ஒட்டியம்பாக்கம் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஓட்டீஸ்வரரை பார்க்க சென்றேன் . ஒன்றரை ரெண்டு மணி நேரத்தில் சுலபமாக போக முடியும். அமைதியான அனால் வேகமாக வளரும் கிராமமா, டவுனா?
கிழக்கு பார்த்தகோவில், ராஜகோபுரம் இருக்கவேண்டிய இடத்தில் தற்போதைக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை.
அற்புதமான அமைதியான கோவில். நிறைய இடம் இருக்கிறது. பெரிய நீர் நிறைந்த சுத்தமான தெப்பக்குளம் கோவில் அருகே உள்ளது. சுற்றி வேலி போட்டதால் தப்பித்தது. பெரிய லிங்க ஸ்வரூபத்தில் ஓட்டீஸ்வரர் கம்பீரமாக காட்சி தந்தார். மங்களாம்பிகை புன்னகை தவழும் பேரழகி.
ருண விமோசன லிங்கம் ஒரு தனி சந்நிதியில், எதிரே சண்டிகேஸ்வரர். ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகம் கஜ பிருஷ்ட விமானத்தின் ப்ரஹாரத்தில் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் எதிரே ஜம்மென்று வேலும் மயிலோடும் நிற்கிறார். ப்ரம்மா , துர்க்கை சந்நிதிகள். காலபைரவ சந்நிதி நவகிரஹ தேவதைகள் நம்மை ரக்ஷிக்க தயாராக உள்ளார்கள்.
தெற்கு நோக்கி தக்ஷிணாமூர்த்தி நர்த்தன விநாயகர், சண்முகத்தை அடுத்து ஐயப்பன் சந்நிதி. அழகான பெரிய மண்டபத்தில் உத்சவ விக்ரஹங்கள் (உத்சவ ஓட்டீஸ்வரர் 125 கிலோ. தூக்க நான்கு ஆள் நிச்சசயம் வேண்டும்.கோவிலில் நுழைந்ததும் அற்புதமான கண்கவரும் நந்திகேஸ்வரர் மூலவரைப் பார்த்தவாறு கால் மடக்கி வழக்கம்போல் அமர்ந் திருக்கிறார். மஹா பெரியவா தத்ரூப சிலா ரூபத்தில் கருணை ஸ்வரூபமாக ஆசீர்வதிக்கிறார். குபேர லிங்கம் சந்நிதிக்கு பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகம்.காரணம் சொல்லத்தேவையில்லையே.
நேற்று ஞாயிறு என்பதால் பக்தர்கள் நாலரை ஆறு ராகு காலத்தில் ருண விமோசனருக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள். பஞ்சாமிர்தம் தயாரித்து அபிஷேகம். விபூதி அபிஷேகம், பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், தேனபிஷேகம்,இளநீர் பன்னீர் அபிஷேகம் எங்கள் தேவாரம் திருவாசகம், சிவ க்ஷேத்ர பாடல்களுடன் அற்புதமாக நிகழ்ந்தது. வெகு நாட்களுக்கு பிறகு சிவன் சந்நிதியில் நிறைய தேவார பாடல்கள் ஸ்லோகங்கள் வாயார பாடினேன். இங்கு அமைதியாக, நிசப்தமாக அவசரமின்றி மனதால் மஹா தேவனை நினைக்க வைத்தது. அருகே பெரிய வயதான அரசமரம். அதனடியில் நாகர்கள் சிலையாக வழிபடப்படுகிறார்கள்.
இந்த ஆலயத்தில் தான் முதல் முறையாக திருவோடு மரம் பார்த்தேன். காய் கண்ணில் படவில்லை. திருவோட்டுக்காய் (Calabash Tree) நிறைய தென் அமெரிக்காவில் காணப்படுவது. நமது ஊரிலும் கொண்டுவந்து வளர்க்கிறார்கள். அதன் காய் முற்றியவுடன் இரண்டாக பிளந்தால் ரெண்டு திருவோடு கிடைக்கும், எதிர்காலத்தில் பிழைக்க வைத்துக் கொள்ள சௌகர்யமாக இருக்கும்.. சின்ன மரம்.
திருவோட்டுக்காய் மரம் சிறியதாகவும் 10 மீட்டர் உயரம் வரை வளரும். கிளைகளில் மென்மையான வெண் சாம்பல் நிறம் கொண்டதாக இலைகள். பூக்கள் தனித்தோ கொத்து கொத்தாகவோ ஆண்டு முழுவதும் தோன்றும். பூக்கள் காம்புடன் குழல் வடிவில் காணப்படும். பழங்கள் ‘பூசணி’ வகை போன்று காணப்படும். பழங்கள் கண்கவர் தோற்றத்துடனும் மெதுவாக முதிர்ச்சியடையும் பண்புடனும் காணப்படுவதால் ஏழு மாதங்கள் வரை மரத்திலேயே இருக்கும். இப்பழங்கள் சேமிப்புக் கலன்கள், அழகுப் பெட்டிகள், இசைக் கருவிகள் போன்ற பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றன. இதன் பழச்சதை மூச்சிறைப்பு உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளுக்கும் மலச்சிக்கலைத் தீர்க்கவும் குடற்புழுவை அழிக்கவும் வயிற்றெரி ச்சலைக் (பொறாமையை அல்ல ) கட்டுப்படுத்தவும் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டீஸ்வரர் ஆலயத்தின் காலம் என்ன வென்று தெரியவில்லை. பல்லவ சிற்பக்கலை கண்ணுக்கு தென்படுகிறது. மஹாப லிபுரம் ரொம்ப தூரத்தில் இல்லையே!. பராபரியாக காதில் விழுந்த ஒரு சேதி என்னவென்றால் ஒரு பல்லவ ராஜா ஒரு பெரிய சிவலிங்கத்தை ஆட்கள் மூலமோ யானை மூலமோ சுமந்து கொண்டு எங்கோ சென்றபோது வழியில் ஒட்டியம்பாக்கம் பக்கம் வரும்போது நன்றாக இருட்டி விட்டது. வெளிச்சம், மின்சாரம் இல்லாத காலம். ஒரு குளத்தங் கரையில் தங்கினான். அங்கேயே இரவைக் கழித்து மறுநாள் காலை சிவலிங்கத்துக்கு பூஜை பண்ணிவிட்டு அதைத் தூக்க முயன்றபோது அதை அசைக்கவோ, நகர்த்தவோ முடியவில்லை. ஒரு அசரீரி ”என்னை இங்கேயே பிரதிஷ்டை பண்ணி விடு”என்று கட்டளை யிட்டதால் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஓட்டீஸ்வரரை நாம் காணமுடிகிறது. லிங்கம் தரையோடு ஒட்டிக் கொண்டு நகர்த்த முடியாததால் ஓட்டீஸ்வரம், ஒட்டியம்பாக்கம் ஆகியது. சிவனும் ஓட்டீஸ்வரர் ஆனார். இதுவரை ஒட்டியம்பாக்கம் சிவனைக் காணாதவர்கள் இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் சென்று அவரை தரிசிக்கலாம். கும்பல் ஜருகண்டி தள்ளுமே என்ற பயமே வேண்டாம்.