MORAL STORIES A MUST J K SIVAN

நீதிக்கதைகள் ரொம்ப ரொம்ப அவசியம். –   நங்கநல்லூர்  J K  SIVAN
உண்மையாக  சொல்லுங்கள். உங்களுக்கு  கதை  கேட்கவோ, படிக்கவோ  பிடிக்குமா  பிடிக்காதா?  எனக்கு தெரிந்து  நாம்  எல்லோரும்  கதைப் பிரியர்கள்.  சின்ன வயசிலிருந்தே  கதை பிடிக்காத குழந்தை கிடையாது.  நான் நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன்.   அதைவிட  நிறைய  குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி இருக்கிறேன். இன்னும்  கதை ‘ விட்டுக் கொண்டே’  தானே  இருக்கிறேன்.  பிசாசு, பேய், கதைகள்  சொல்வதை தவிர்த்து  ஏன்  நீதிக் கதைகள் சொல்லவேண்டும்? புராண சம்பவங்கள், மனிதர்கள் பற்றி ஏன்  சொல்லவேண்டும் ?  அதற்கு காரணம் இருக்கிறது.
நமது பாரத  தேச  பண்பாடு , மிகச் சிறந்தது.  பாரம்பரிய பெருமை கொண்டது.  இங்கு  இதிகாச, புராண பாத்திரங்கள் நல் வாழ்க்கைக்கு உதாரணங்களாக  படைக்கப்பட்டவை. மனிதனாகவோ, மிருகமாகவோ, பக்ஷியாகவோ அவை வேறு பட்டாலும் உயர்ந்த கோட்பாடுகள், தத்துவத்தை விளக்க அதிகமாக  பயன்படுகிறது.  அவை போதிக்கும் நியாயங்கள்  நேர்மை  நீதிகள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இது  அநேகரின்  அனுபவத்தில் கண்ட உண்மை.
எது நன்மை, எது தீமை,  எது கருணை, எது  நியாயம், எது தர்மம், எது பாசம்,  வீரம்,தியாகம்,  நேசம், எது இரக்கம், எது  பக்தி,  என்றெல்லாம் இளம்  வயதிலேயே  கற்க  இந்த கதைகள் அவசியமாகிறது.  சிந்தனையைத்  தூண்டி வளர உதவுபவை. தைர்யம், பயமின்மை, தன்னம்பிக்கை, பக்தியை  வளர்ப்பவை.   இடையிடையே நமது கலாச்சாரமும் வாழ்க்கை முறையும்  கற்பிப்பவை, மாதா, பிதா, குரு தெய்வம் என்று மரியாதையை, மதிப்பை. ஒழுக்கத்தை  மனதில் இளவயதிலேயே வளர்ப்பவை.
மஹாபாரதத்தில்  ஏகலைவன் என்று வேடன் வருவான்.  துரோணரிடம் வில் வித்தை கற்க விரும்பினான் .  ஆனால்  அவர்   ராஜ  குடும்பத்துக்கு மட்டுமே  சொல்லித்தருபவர்  என்பதால் அவரிடம்  தனுர் வித்தை கற்க முடியாமல் அவர் உருவத்தை மண்ணில் செய் து அதை வணங்கி வழிபட்டு  தானே முயன்று  சிறந்த வில் வீரனாக வளர்ந்தான்.  துரோணரின் சிறந்த மாணவன்  அர்ஜுனனையே வெல்லக்கூடிய திறமை ஏகலைவனுக்கு  கிடைத்தது . துரோணர் அவனை ஒருநாள் சந்திக்கிறார்.  அவன் வித்தையைக் கண்டு அதிசயிக்கிறார்.
”உனக்கு யாரப்பா குரு?””இதோ  நீங்கள்  தான் குருநாதா””நானா?””ஆம்  சுவாமி””நான்   எங்கே  எப்போது உன்னை சந்தித்து   உனக்கு  தனுர் வித்தை  கற்பித்தேன்? பொய்  சொல்லாதே ””ஐயா   இங்கே வாருங்கள்”ஏகலைவன் தனது  வீட்டுக்கு துரோணரை  அழைத்துச் சென்றபோது  அங்கே  அவன் தன்னுடைய  உருவத்தை மண்  பொம்மையாக செய்து  வணங்குவதை பார்க்கிறார்.  ஏகலைவன்  அர்ஜுனனை மிஞ்சிவிடுவான், அதை தடுக்கவேண்டும் என்று எண்ணிய  துரோணர்  கேட்கிறார்.”ரொம்ப  சந்தோஷம் ஏகலைவா” என்னிடம்  இப்படி எவ்வளவோ கற்றுக்கொண்டவன், எனக்கு குரு தக்ஷிணை கொடுக்கவேண்டாமா?குரு தக்ஷிணையாக அவர் கேட்ட தனது  வலது கட்டை விரலை  இழக்கிறான் என்று கதைமேற்கொண்டு செல்கிறது.

இதில்  ஏகலைவனின்  தன்னம்பிக்கை,   அயராத உழைப்பு, குருபக்தி மேலோங்கி நிற்கிறது. குழந்தைகள் ஆசிரியரிடம் எவ்வளவு பக்தியோடு, மரியாதையோடு நம்பிக்கையோடு நடந்து கொள்ளவேண்டும் என்று போதிக்கிறது. இதை படிக்கும்  ஐம்பது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்  இன்னும்  தங்களது  ஆரமப கால  ஆசிரியர்களை, ஆசிரியைகளை இன்னும்  ஞாபகம் வைத்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.  80 வருஷங்களுக்கு முன்  எனக்கு அனா , ஆவன்னா  கை பிடித்து  பலகையில்  எழுத   பழக்கிய காவேரியம்மா டீச்சரை மறக்க முடியவில்லையே.அவளுக்காக  கை  கூப்பி வணங்கி நன்றிக்கண்ணீர் வடிக்கிறேனே.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை,  சகோதர பாசம்,  ஒருவனுக்கு ஒருவள் என்ற  நேசம், போன்ற  உயர்ந்த பண்பை விளக்குகிறது ராமனின் கதையான ராமாயணம்.
பிறவியிலேயே கண்ணற்ற சூர்தாஸைப்  போல் கிருஷ்ணானுபவம் எவருக்கும் கிடைக்காது.  கிருஷ்ணனே தோன்றி அவருக்கு கண் பார்வை அளித்தான். அவனைக்கண்டு மகிழ்ந்த ஸூர் தாஸ் , ”என்  கண் பார்வையை  நீக்கிவிடு கிருஷ்ணா ””ஏன்?”   ”கண்ணனைப்  பார்த்த கண் கண்டதை எல்லாம்  பார்க்க வேண்டாம்”  என்கிறார்  ஸூர்தாஸ்.  ஒரு ஆழ்வாரும் இவ்வாறே சொன்னவர்.இந்த கதைகள்  இறை பக்தியை வளர்ப்பவை.
பெண் ஆணுக்கு நிகரானவள் மட்டுமல்ல, ஆணால் முடியாததையும் செய்பவள் என்று நிரூபிக்க சக்தி தேவதை யாகநவராத்ரி, விஜய தசமி அம்பாள் கதைகள்  பெண்ணின் பெருமையை விளங்குபவை. அம்பையால்  பீஷ்மரை வெல்ல முடிந்தது.விஷம் கொடுத்தும், மலையிலிருந்து உருட்டியும், கடலில் வீசியும்  கவலைப்படாத  சிறுவன் ப்ரஹ்லாதன் கதை அயராத கடவுள் நம்பிக்கையை காட்டி குழந்தைகளை மன உறுதியுடன் இறையாண்மையை பின்பற்ற செய்பவை.
துருவன்  சிறு வயதில் தனியாக காட்டில் தவமிருந்து  நாராயணனைக் கண்டவன்.ஹனுமான், கருடன் ஜடாயு,  ஆதிசேஷன், ஜாம்பவான்  கதைகள் பக்தி மனிதர்களுக்கு மட்டும் அல்ல பிற ஜீவன்களுக்கும் உண்டு என்று காருண்யத்தை குழந்தைகள் மனதில் வளர்ப்பவை.நட்புக்கு  அர்ஜுனன், கர்ணன், துரியோதனன் , சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள், போன்ற பாத்திரங்கள் உதாரணமாக விளங்குபவை.
சிபி சக்ரவர்த்தி, பாரி, பேகன், மனு நீதி சோழன் போன்றவர்கள்  கதை பிற உயிர்களிடத்தும் அன்பு பூணச் சொல்லித் தருபவை. இன்னும் மேலே மேலே  எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் கிருஷ்ணன் கதைகளில் எல்லாமே நிறைய இருப்பவை. நான்  அதைச் சொல்லிக்கொண்டே  இருக்கிறேன். என் வாழ்நாள் முடியும் வரை  சொல்லவோ,  எழுதவோ   அவன் தான் எனக்கருள வேண்டும். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *