பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பெரியவா அனுபவம்.
இன்று அனுஷம். மஹா பெரியவா சுதினம் . அவரைப் பற்றிய சின்னதாக கொஞ்சம் விஷயம் பகிர்ந்து கொள்ள விருப்பம்.
சென்ற வாரம் ஒருநாள் என்னிடம் டெலிபோனில் ஸ்ரீ ஜெயந்திரன் என்பவர் மதுரையிலிருந்து பேசினார். என்னுடைய மஹா பெரியவா கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர் என்று அறிமுகம் செய்து கொண்ட போது மஹா பெரியவாளுக்கு மானசீகமாக நமஸ் காரம் பண்ணினேன். பேசியவர் ஒரு மகானின் புத்திரர். மதுரை நாராயணய்யர் திருக்குமாரர்.
அவர் தந்தை , கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவரை மதுரை நாராயண அய்யர் என்று தான் எல்லோரும் அறிவார்கள். நாராயணய்யர் இல்லத்துக்கு அப்போதைய புது பெரியவா ஸ்ரீ ஜெயேந்திரர் வந்த சமயம் பிறந்த குமாரனுக்கு அப்பா வைத்த பெயர் ”ஜெயேந்திரன்”.
நாராயணய்யர் இல்லம் வெறும் வீடு அல்ல. மிக மிக சாந்நித்யம் கொண்ட பெரியவா கோயில் எனலாம். நிறைய அதைப் பற்றி சொல்கிறேன்.
நாராயணய்யர் ஏழு வயதிலிருந்து மஹா பெரிய வாளை நன்றாக அறிந்தவர். பல வருஷங்கள் மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணவர். பெரியவா சந்திரமௌலீஸ்வரர் பூஜை பண்ணியதும் அனைவருக் கும் தீர்த்த பிரசாதம் அலுப்பு தட்டாமல் களைப்பில் லாமல் வழங்கியவர். 2015 அக்டோபர் 2 அன்று 91 வயதில் மறைந்தவர். அக்டோபர் 2 மறக்கமுடியாத நாள். காந்தி, காமராஜர், வாழ்க்கையை நினைவூட்டும் நாள். தியாகிகள் தினம் என்பதால் மஹா பெரியவா அணுக்க தொண்டர் ஸ்ரீ மதுரை நாராயணய்யரும் விண்ணுலகில் பெரியவளோடு சேர்ந்த நாள்.
2014ல் 90 வயதிலும் நாராயணய்யர், பால பெரியவா விஜயேந்திரர் ஆக்ஞா உத்தரவுப்படி அருணாசல பிரதேசத்தில் ஒரு காட்டுப் பகுதியில் விஸ்வ சாந்தி யஞத்தில் கலந்து கொண்டபோது அவரை சந்தித்து பேட்டி கண்டவர்கள் புண்யசாலிகள். அவர்களிடம் நாராயணய்யர் தெரிவித்த விஷயங்களை இனி அறிவோம்:
”பெரியவாளை எப்போது முதலில் பார்த்தீர்கள்?”
”1933ல், அதுக்கு ரெண்டு வருஷம் முன்னாலேயே கூட தெரியும்”
”என்ன வயசு அப்போ?
”2014ல் 90. ஏழு வயசிலிருந்து பெரியவாளை நன்னா தெரியும்’
””ஏன் மதுரை நாராயணய்யர் னு பேரு?”
”அதுவா, நான் ரயில்வே உத்யோகத்திலிருந்தேன். கடைசியிலே மதுரையிலே ரிட்டையர் ஆனேன். அங்கேயே குடும்பம்”
‘அதெப்படி ரயில்வே யில் வேலை பார்த்தவர்கள் பெரியவாளோடு நெருக்கமா இருந்திருக்கா? நீங்க, பிரதோஷம் மாமா எல்லோருமே ரயில்வே உத்தியோகம்னு இருக்கே…!”
”ரயில்வே மட்டும் இல்லை, மஹா பெரியவா இந்த பிரபஞ்சத்தையே ஆகர்ஷிச்சவர். நா ஆஸேது ஹிமாச்சலம் வரை நிறைய இடங்களுக்கு ட்ராவல் பண்ணி இருக்கேன். பல மகான்களை பார்த்திருக்கேன். ஆனா இந்த ப்ரபு மஹா பெரியவா மாதிரி என்னை வேறே யாரும் ஈர்க்கவில்லை. ஏதோ ஒரு ஸ்ட்ராங் ஆகர்ஷண சக்தி அவரிடம் இருந்தது. அவர் காட்டின வழியில் நடப்பது என்று தீர்மானித்தேன்” கும்பகோணத்
திலேயே பிறந்து வளர்ந்து பெரிய வாளை பழக்க முண்டு. எங்கப்பா எங்க தெருவழியா பெரியவா வரும்போது வாசலிலே நின்னுண்டு பூர்ண கும்பம் கொடுப்பா”
”ஏன் மஹா பெரியவாளை ஆதி சங்கரர் அவாதாரம்னு சொல்றா?’
‘ஆதி சங்கரர் எப்போ தோன்றினார்? ஜைனர்களாம் பௌத்தர்களாலும் பாரத தேசம் மலினமடைந்து ஹிந்து சனாதனதர்மம் க்ஷீணமடைந்து வரும் சமயம் . அத்வைத சித்தாந்தத்தை பிரச்சாரம் பண்ணி ஹிந்து மதத்தை பலப்படுத்தினார். அதே போல மஹா பெரி யவா தோன்றியது எப்போது? ,நிரீஸ்வர வாதம் தலை எடுத்து ப்ராமண த்வேஷம் தலை எடுத்தபோது அநேக இடங்களில் சென்று நமது ஹிந்து கலாச்சாரத்தை பக்தியை பிரச்சாரம் பண்ணி இந்துமதத்தை பலப் படுத்த.’
”’ஒரு சம்பவம் சொல்றேன். ஆச்சரியப்படுவீர்கள்”
தாயுமானவர் தேஜோமயானந்தம் னு பாடல்கள் பாடியிருக்கிறார். அதிலே ஒண்ணுலே மதம் பிடித்த யானையை அடக்கலாம் னு சொல்லுவார். அது சித்தர் களால் முடியும். நம்ம மஹாபெரியவா அதே மாதிரி ஒரு பெரிய யானையை மதம் பிடிச்ச போது அடக்கி னதை கண்ணாலே நான் பார்த்ததை சொல்றேன்.
1933ல் திருவிடைமருதூர்லே சங்கர ஜெயந்தி மஹா கோலாகலாமா கொண்டாடினா பெரியவா. யானை ,குதிரை ஒட்டகை ன்னு ஊர்வலம். ஆதி சங்கரர் படத்தை யானைமேல் அம்பாரி கட்டி அதிலே வச்சு வாத்திய கோஷங்கள், பஜனை, மந்த்ர ஜெப உச்சாடனத் தோடு ஊர்வலம். நல்லவேளை ஒரு யானை மேலே அம்பாரி கட்டி இன்னும் அதிலே ஆதி சங்கரர் படம் வைக்கலே . அதுக்குள்ளே யானைக்கு என்னவோ ஆகி கோபமா, எல்லாத்தையும் உருட்டி உடைச்சு தள்ளிடுத்து. விஷயம் மஹா பெரியவா காதுலே விழுந்தது. ”அந்த யானையை இங்கே அழைச்சுண்டு வா” ன்னு சொன்னா. மலையாளி மாவுத்தன் ஒரு வழியா அதை பெரியவா கிட்டே அழைச்சுண்டு வந்தான். அவர் வாசல்லே அது பக்கத்திலே கையிலே தண்டத்தோடு நின்னு பார்த்தா. என்ன மானசீகமான சொன்னாளோ தெரியலே. பூனைக் குட்டி மாதிரி அந்த யானை ஒண்ணும் விஷமம் பண்ணாம சொன்னதை கேட்டு ஊர்வலத்தில் ஒழுங்கா போச்சு.”
இன்னும் மீதி விஷயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.