ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN
கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 2
இடையில் கோவணத்தை தவிர வேறொரு பந்தமும் இல்லாதவனை ஞானி, யோகி, முனிவர், ஆண்டி, என்கிறோம். அதையும் திறந்த நிர்வாண ப்ரம்ம ஞானிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். சிவபெருமான் கௌபீனதாரியாக பிக்ஷாடனராக இருக்கும் விக்ரஹங்கள் படங்கள் நமக்கு நிறைய தெரியுமே. ஆதி சங்கரர், பட்டினத்தார், ரமணர், ராமகிருஷ்ணர், சில சமயம் விவேகானந்தர், சமீபத்தில் வினோபா பவே, மஹா பெரியவா, எல்லோருமே கௌபீன தாரிகள் தான். ஆடையே அணியாமல் உடம்பின் நினைப்பே இல்லாமல் அவதூதர்களாக இருந்தவர்களும் உண்டு. சமீப உதாரணம் சதாசிவ ப்ரம்மேந்த்ரர்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் அமர்நீதி நாயனார்: அவர் சரித்திரத்தில் ஒரு சம்பவம் வரும்.சிவபெருமான் ஒரு முனிவர் போல வேடமணிந்து தன்னிடம் இருக்கும் ஒரே சொத்தான கௌபீனத்தை (கோவணம்) சிவபக்தனான, அமர்நீதி நாயனாரிடம் கொடுத்து “நான் வெளியூர் போகிறேன். அதுவரை இதை ஜாக்கிரதையாக வைத்திரு. ஊர் திரும்பியதும் இதை வந்து வாங்கிக் கொள்கிறேன்.பத்திரமாகப் பாதுகாக்கவும்” என்கிறார்.
இறைவன் சோதனையால், எவ்வளவு ஜாக்கிரதையாக வைத்திருந்தும் அந்த கோவணத்தை காணோம். முனிவரும் திரும்பி கோவணத்தை கேட்கும்போது அமர்நீதி நாயனார் திகைக்கிறார்.
“ஸ்வாமி கோவணத்தை காணோம். மன்னித்து விடுங்கள். அதற்குப் பதிலாக நீர் என்ன கேட்டாலும் நான் தருகிறேன்”
”பக்தா! என்னிடம் இன்னொரு கோவணம் இருக்கிறது. அதைத் தருகிறேன். அதன் எடைக்கு ஏதாவது பொருள் கொடு”
”அப்படியே செய்கிறேன் ஸ்வாமி ”
முனிவரின் கோவணம் ஒரு தராசு தட்டில், அதற்கு இணையான தனது சகல செல்வங்களும் மற்றொரு தட்டில்..வைத்தும் தராசு ஈடுகட்டியது போதவில்லை என்று காட்டுகிறது. கோவணத்துக்கு அவ்வளவு எடை அதிகமா? ஆச்சரியம். வேறு வழியின்றி அந்த தட்டில் தனது குடும்பத்தோடு ஏறி உட்கார்ந்தபோது ஒரு வழியாக தராசு சம நிலை காட்டியது.
”பக்தா, நீ உன் குடும்பம், உன் சொத்து சகலமும் எனது. என் அடிமை”
சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார் அமர்நீதி நாயனார், முனிவரின் கால்களில் விழுந்து வணங்குகிறார் தலை நிமிர்ந்தால் நிற்பது பரமேஸ்வரன். இது இறைவனை சோதித்த ஒரு திருவிளையாடல். அமர்நீதி நாயனார் இறைவன் ஆசியுடன் நீண்டநாள் வாழ்ந்து கைலாச பதவி அடைகிறார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் குரு சமர்த்த ராமதாசரும் கோவண தாரியே .நமது மஹா பெரியவா கூட கோவணத்தில் தரிசனம் கொடுத்திருக்கிறார். அவர் படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன். எவ்வளவு தேஜஸ் பாருங்கள் முகத்தில். நாம் சட்டையில்லாவிட்டாலே எவ்வளவு வெட்கப்படுவோம்.
ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவுக்கான துணி தான் கோவணம். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் . முற்றும் துறந்தவனையே கோவணாண்டி என்று சொல்வது. ஆதி சங்கரரின் இந்த ஐந்து கோவண ஸ்லோகங்கள் தான் ”கௌபீன பஞ்சகம்”
முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம் கொண்டு கைலாசத்தை துறந்து, பெற்றோரை வெறுத்து, பழனியில் கோயில் கொண்டபோது அவன் தோற்றம் இன்றும் கோவணாண்டி தானே. பேரே பழனியாண்டி. ஆண்டியின் யூனிபார்ம் தான் கோவணம். நிறைய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இவ்வாறு கோவணாண்டிகளாக (கௌபீன தாரிகளாக) வாழ்ந்தார்கள். ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், பட்டினத்தார், சில சமயம் விவேகானந்தர், எத்தனை மஹான்கள், சிலசமயம் மஹா பெரியவாளும். அப்படி அவர் இருந்த ஒரு படம் இத்துடன் இணைத்துள்ளேன்.
கோவணாண்டி என்றதும் அருவருப்பு வேண்டாம். கோவணம் அவமரியாதை கிடையாது. எவ்வளவு உயர்ந்த தியாகி அவன் என்று உணர ஆதி சங்கரரின் கோவணதாரி ஸ்லோகங்கள் ஐந்து பற்றி சொல்கிறேன். அர்த்தத்தை ஊன்றி கவனியுங்கள். புரிபடும்.
எனக்கு தெரிந்து இளம் வயதில் நிறைய வயல் வெளிகளில் வேலை செய்பவர்களும் கூட கௌபீன தாரிகளாகத்தான் வாழ்ந்தார்கள். இன்றும் கிராமங்களில் கௌபீனதாரிகளை பார்க்கலாம். இப்படிப்பட்டவர்களை பார்த்துவிட்டு தான் மஹாத்மா காந்தி தனது ஆடைகளை துறந்தார்.
கோவணதாரி ஸ்லோகங்கள் ஐந்தும் அற்புதமானவை. உயர்ந்த ஆத்ம வேதாந்த தத்துவங்களைப் பிழிந்த ரசம். அத்வைத ஸாரம் . கோவணாண்டி அடேயப்பா இவ்வளவு பாக்யவானா என்று மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்பவை. நீங்களே ருசித்து ரசியுங்கள்.
அடுத்த பதிவிலிருந்து ஆதி சங்கரரின் கௌபீன பஞ்சகம் ஸ்லோகங்கள் விளக்கத்தோடு தொடரும்.