கஞ்சி வரதப்பா – நங்கநல்லூர் J K SIVAN
நாட்டுப்புற கதைகள். நாடோடி கதைகள் என்று நிறைய சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். அவற்றை எப்போது யார் எழுதினது, சொன்னது என்ற விவரங்கள் யாருக்குமே தெரியாது. இருந்தாலும் என்னைப் போல் பலரும் அதை அனுபவித்தவர்கள். ‘ஆஹா’ என்ன ருசி! விஞ்ஞானம் கலக்காத நம்பிக்கை கதைகள். குழந்தைகள் எதைச் சொன்னாலும் நம்பும் என்பது போல் குழந்தையாகவே மாறி இவற்றை ரசித்தால் அருமையாக இருக்கும்.
ஏன்? எப்படி? எதற்காக? உண்மையா? என்றெல்லாம் ஆராய்ந்தால் அவ்வளவு தான் அதன் ருசி காணாமல் போய்விடும். அப்புறம் ஹோட்டல் அவியல் தான் மிஞ்சும்.
காஞ்சிபுரத்தில் ஒரு பிச்சைக்காரன் தினமும் வீடு வீடாக படியேறி ‘அம்மா தாயே’ என்று கெஞ்சி கத்துவான். ஒரு கவளம் சோறு கிடைப்பதே ததிங்கிணதோம். என்ன இது, கொஞ்சம் கூட தர்மமே, இரக்கமே இல்லாத மக்கள் இருக்கும் ஊராக இருக்கிறதே என்று காஞ்சிபுரத்தின் மேலே அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
வீடு வீடாக சுற்றியவன் ஒருநாள் ஒரு வைஷ்ணவன் வீட்டு வாசலில் போய் நின்றான். களைப்பும் பசியும் அதிகமாகி அந்த வீட்டு திண்ணையில் சாய்ந்தான். வீட்டுக்கார வைஷ்ணவர் வெளியே போயிருந்தார்.
அந்த வீட்டு வைஷ்ணவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு காஞ்சிபுரம் வரதராஜன் மேல் ஸ்லோகம் மெதுவாக சொல்லிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். அந்த வைஷ்ணவர் கை கூப்பிக் கொண்டு வரதராஜனை மனதில் நினைத்தவாறு ”கஞ்சி வரதப்பா” ”கஞ்சி வரதப்பா” என்று மெதுவாக சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
தனது வீட்டு வாசல் திண்ணையில் ஒரு முதியவன் படுத்திருப்பதை கண்டார். அதே சமயம் ”கஞ்சி வரதப்பா” என்று வணங்கியவரைக் கண்ட அந்த பிச்சைக்காரன் எழுந்து வணங்கி ” எங்கேப்பா” என்று கேட்க வைஷ்ணவர் அசந்து போனார்.
”என்ன சொல்றீங்க?””சாமி காஞ்சி வருதப்பா என்று சொன்னீங்களே எங்கேங்க??வைஷ்ணவருக்கு புரிந்து போய்விட்டது. தான் வரதராஜனை கஞ்சி வரதப்பா என்று சொன்னதை அந்த பசியோடு இருப்பவன் குடிக்க கஞ்சியை யாரோ கொண்டுவருகிறார்கள் என்று நினைத்து ”எங்கே??”என்று தேடுவதை உணர்ந்தார்.
பாவம் பசி. என்ன செய்வான். ”” கஞ்சியா வரலேப்பா, பாயசமா வருதப்பா” கொஞ்சம் இருப்பா, , பாயசம் தரேன்” என்று வீட்டில் அன்று மனைவி தயார் செய்து வைத்திருந்த பாயசத்தை கொண்டு வந்து குடிக்க கொடுத்தாராம்.