குடும்பம். – நங்கநல்லூர் J K SIVAN
”சே சே வாழ்க்கை ஒரு நரகமாக இருக்கிறதே. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சாவு வராதா? தாங்கமுடியவில்லையே இந்த கஷ்டம்?” என்று சொல்பவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவர்கள் மேல் அனுதாபம் தான் கொள்வேன். படித்தவர்கள் கூட இப்படி நெகடிவாக நடந்து கொள்கிறார்கள். இந்த வாழ்க்கை நாம் சுகமாக வாழவேண்டும் என்பதற்காக கிருஷ்ணன் எவ்வளவு யோசனை பண்ணி சில ஏற்பாடுகள் செய்து நமக்கு அளித்திருக்கிறான் என்று ஏன் புரியவில்லை? மனிதப் பிறவியே ரொம்ப ரொம்ப அதிர்ஷ்ட வசமாக நமக்கு கிடைத்தது. நாம் சந்தோஷமாக வாழ குடும்பம் என்ற ஒரு நற்போத அமைப்பை அளித்திருக்கிறான்.
ஒவ்வொரு குடும்பத்திலும் சில அதிசயங்களை உருவாக்கி தந்துள்ளான். காசு கொடுத்து கடையில் வாங்கும் பொம்மை போல் இல்லாமல் பத்து மாதம் வயிற்றில் சுமந்து, நம்மை பிறக்க வைத்து, பிறந்ததும் நம்மை முதன் முதலாக அன்போடு வரவேற்க, அப்புறம் மூன்று நாலு வருஷங்கள் தூக்கி வைத்துக் கொள்ள, பிறகு தனது வாழ்க்கை பூரா தனது இதயத்தில் நம்மை சுமக்க —- அன்பே உருவான அம்மா, தாய் என்ற ஒரு ஜீவனை உருவாக்கி கொடுத்து இருக்கிறான்.
பிரதிபலன் பாராமல் நமக்காக உழைத்து நமது முகத்தில் காணும் சிரிப்பு ஒன்றே பரிசாக ஏற்க, — தியாகச் சின்னமாக தந்தை, அப்பா, என்ற ஒரு ஜீவன்.
நீ விரும்புவது எல்லாம் உனக்கு மட்டுமல்ல பிறர்க்கும் சொந்தம், சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று புரிய வைக்க, அன்பை பரிமாறிக்கொள்ள- சகோதர, சகோதரிகள், என்ற உடன்பிறப்பு ஜீவன்கள். தாய்க்குப் பின் சகோதரிகள் தான் தாயின் பொறுப்பை ஏற்பவர்கள்.
அதிகம் பேசாத , பாசத்தை வெளிக்காட்டாத, ஆனால் உள்ளே அபரிமித பரிவும் பாசம் பொங்கியுள்ள அண்ணன் தம்பிகள் எனும் ஜீவர்கள்.
உலகத்தை புரிந்து கொள்ள என்பதற்காகவே உற்ற நண்பர்கள் எனும் ஜீவன்கள். உண்மையான நண்பர்கள் கண்ணுக்குத் தெரியாத நக்ஷத்திரங்கள் போல். அவர்கள் இருப்பதை காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
உனக்கு தியாகம் என்றால் என்ன, வீட்டுக் கொடுப்பது எப்படி, அனுசரித்து வாழ்வது எப்படி, உனக்கு எப்போதும் உறுதுணை யாக இருக்க — மனைவி என்று ஒரு ஜீவன்.
அன்பு என்பது வெளிப்படுத்த, தன்னலம், சுயநலம் இன்றி பிறர்க்கு நீ சேவை செய்ய கற்றுக்கொடுக்க, அதனால் உண்டாகும் சுகத்தை அனுபவிக்க, கற்றுக்கொடுக்க, ” குழந்தைகள் ” என்ற ஜீவன்கள்.
இவ்வளவும் பெற்று நீ அன்பு ஒன்றே பிரதானம் என்று அறிய, மீண்டும் இப்படி வாழ வேண்டும் என்று உனக்கு போதிக்க….”பேரன் பேத்திகள்” என்று ஜீவன்கள் தந்திருக்கிறான்.
எனக்கு ஒன்பது பேரன் பேத்திகள், ஓரு கொள்ளுப்பேத்தி. ஒருவயதாகப் போகிறது…. சந்தோஷமாக இருக்க ஒரே ஒரு எல்லோருக்கும் தெரிந்த ரஹஸ்யம். ”அன்பு” பிறரிடம் குறை , தப்பு, தவறு, காணாமல் இருப்பது. எல்லாவற்றையும் அப்படியே அப்படியே சந்தோஷமாக ஏற்றுக் கொள்வது. கோபம் தாபம் இல்லாமல் புன்னகையோடு இருப்பது. இது இருந்தால் உனக்கும் சந்தோஷம்,உன்னைப் படைத்த கிருஷ்ணனுக்கும் ரெட்டிப்பு சந்தோஷம். ஏனென்றால் உன் குறைகளை எல்லாம் அவன் மேல் திணித்து அவனை மூட்டை சுமக்கச் செய்து விடுகிறாயே .