CONSCIENCE J K SIVAN

மௌனத்தில் விளையாடும் மனஸாக்ஷியே  —.    நங்கநல்லூர்   J K  SIVAN
 ஹே  கிருஷ்ணா,  உனக்கே  தெரியும், உன் மேல்  அழகாக பாட நான் சூர்தாஸ் இல்லை, ஜெயதேவர் இல்லை,  தமிழ் தெரிந்தாலும்  பாரதியின் கால்  தூசு  கூட இல்லை..   ஆனால் உன் மேல்   எனக்கு அளவற்ற பக்தி உண்டு. நான் உன்னோடு பேசுபவன். ஆம்  மனதளவில்”–  இது  என் மனதில் உருவானது. அது இருக்கட்டும். பகவான்  நம்மைப் போல் யாரிடமாவது பேசுவாரா?  எப்படி , யாரோடு பேசுவார்?
ஆம்.
எல்லோருடனும் பேசுகிறார். எப்போதும் பேசுகிறார்.  ஆனால் யார் அவர் பேச்சைக் கேட்கிறார்கள்?
கடவுள் தான் மன சாக்ஷி.  அவர் பேசுவது நாம் எந்த மொழி பேசுகிறோமோ அந்த மொழி. அவர் வேறு யாருடனும்  நம்மைப் பற்றி பேசுவதில்லை.ஒவ்வொருவருடனும் தனித்தனியே  அவர்களது பிரச்னைகளுக்கு வழி காட்டுகிறவர். உபதேசிப்பவர். அறிவுரை தருபவர்.  எல்லாம் இலவசம், சுயநலமற்ற செயல்.
மன சாக்ஷியின் இன்னொரு பெயர் ஆத்மா   அதன் வெளிப்பாடு தான்  ”உணர்வு”, அது தான் பாஷை.
சத்யம் தர்மம், நேர்மை இது தான்  அடிப்படை தேவை.  எண்ணங்கள் வேறு  உணர்வு வேறு. எண்ணம் மாறிக்கொண்டே வரும். உணர்வு சத்யத்திலும் நேர்மை நியாயத்தை அடிப்படையாக கொண்டது. தவறே  செய்யாது. அதை மதிக்காமல் நாம் தெரிந்தே தவறு செய்கிறோம்.நமது உள்ளுணர்வை  வெளியே  சுவற்றில்  நம்  கண்ணெதிரே  தொங்கும்,  நாம் வணங்கும்,  கடவுளின் உருவத்தில் பெறலாம். கோவிலில் விக்ரஹம்  முன்னால்  நின்று அவரை உணர்ந்து  நன்றிக்  கண்ணீர் வடிக்கலாம்.  பகவான் பேசுவாரா என்று கேட்டோமே ?  அதற்கு பதில்  அவர் வார்த்தைகளிலும் பேசுவார்.  வரப்போவதை  எல்லாம்  சொல்லுவார், நடக்கப்  போவதை அறிவிப்பார்.  செய்யவேண்டியதை புரியும்படியாக சொல்வார்.
கடவுள் கனவில் வந்ததாக  எண்ணற்றவர்கள்  சொன்னதையெல்லாம்  புராணங்களிலும்  நீதி , பக்தி நூல்களிலும் படிக்கிறோம். மகிழ்கிறோம்.  இப்போதும் சிலர்  ”என் கனவில் வந்தார், அசரீரி கேட்டது” என்கிறோமே, அதெல்லாம் தான் அவரது வார்த்தைகள்.  யாரோ ஒரு குரு, ஆசார்யன் மூலம், நீதி நூல்கள் மூலம், வேத புராண நீதிகளிலின் மூலம் நமக்குத் தேவையான அறிவுரைகளை, வழி முறையை  நெறியை  பகவான் உணர்த்துகிறார்.  அதெல்லாம் நமக்கு புரிந்த வார்த்தைகளில் தானே நமக்கு அறிமுகமாகிறது.   என்னை ஜப்பானிய மொழியில் ஒரு நீதி நூலைப்  படி என்றால் எப்படி படிப்பேன்? புரிந்து கொள்வேன்?   நமது பாஷையில், மொழியில் இருப்பதையே  நம்மால் சரியாக, தப்பில்லாமல்  புரிந்து கொள்ள தெரியாமல் அர்த்தம்  தப்பாக புரிந்து கொண்டு நாம் அவஸ்தைகள்  படுகிறோம்.
அனுபவம்  சில  உண்மைகளை நமக்கு உணர்த்தி வழிகாட்டுகிறது. அதற்கு தான் மஹான்கள்  புண்ய புருஷர்கள் சரித்திரம் எல்லாம் படித்து அவர்கள் அனுபவத்தால் நாமும் உண்மை அறிகிறோம்.  சரியாக வழி நடத்த எல்லாமே  நம் வாழ்வில் தான் நிகழ வேண்டும் என்கிற  கட்டாயம்  அவசியமில்லை. நெருப்பு தொட்டால் சுடும் என்று சூடு பட்டு தெரிந்து கொள்ள வேண்டாமே .பகவான்  நமக்குள் உள்ளுணர்வாக  அறிவுறுத்துவதை கவனிக்காமல், லக்ஷியம் பண்ணாமல் நமக்குத் தோன்றியபடி, விரும்பியபடி  சுய லாப நோக்கோடு, அஹங்காரத்தோடு  செய்யும் காரியங்கள், சொல்லும் வார்த்தைகள்,  எண்ணங்கள் தான் நம் அனுபவங்கள்  ஆகிறது.  அதன் விளைவு  சாதகமாக இருந்தால் திருப்தி, எதிர்மறையாக  அமைந்தால் துக்கம் துயரம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்.   அப்போது கடவுளை  நொந்து என்ன பயன்?
அதைத் தான் பட்டினத்தார்   ”தன்  வினை தன்னைச் சுடும்” என்றார்.
ஆத்மா  நமக்குள்ளே மெல்லிய குரலில்  மனசாக்ஷியாக  எப்போதும்  அறிவுரை சொல்கிறது. நாம் கேட்பதில்லை. அது பகவானுக்கும் தெரியும்.  ஆகவே  தான்   சில அற்புத மனிதர்களை அவ்வப்போது தோன்றச்  செய்து எல்லோருக்கும் பொதுவான  சில அருமையான  நீதிகளை, நல்வழியை, நேர்மையை, நியாயங்களை, நிதர்சனங்களை, வார்த்தையாக  புரியும்படியாக  ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள், புராணங்கள், பிரசங்கங்கள், அறிவுரைகள், உபன்யாசங்கள்,, நூல்கள், என்று பல வழியில் கீதை, ராமாயணம், பாகவதம்  மாதிரி எல்லாவற்றையும் யோசித்து  அளித்திருக்கிறான்.  தானே அவதரித்து அனுபவ பூர்வமாக  காட்டி இருக்கிறான். அதையும்  லக்ஷியம் செய்யாவிட்டால்  யாரை நொந்து என்ன பயன்?
கலியுகத்தில், வீடியோ, டிவி, புத்தகங்கள்,  வாட்ஸாப்ப், முக நூல் பத்திரிகைகள்,  மின்னஞ்சல் புத்தகங்கள் என்று பல விதங்களில் இதெல்லாம் அடிக்கடி நம் கவனத்துக்கு  சிலர் அளிக்கிறார்களே , அதில் ஜாக்கிரதையாக சரியானதை தேர்ந்தெடுத்து ஞானம் பெறலாம். எதிலும் அதிகமாக  கலப்படம் உள்ள காலம்   இது.  இப்படி  எல்லா இடங்களிலும் எப்போதும் உள்ளதைத்  தான்   ”பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்த பரி பூரணானந்தம்” என மஹான்கள் சொல்கிறார்கள்.
மொத்தத்தில் பகவான் ஒரு வழிகாட்டி,  நாம் செய்யும் காரியங்களை கவனித்துக்   கொண்டிருப்பவன். குறுக்கிடுபவன் அல்ல.  நாம்  தினை விதைத்தால்   தினை அறுப்போம்,  வினை விதைத்தால்  வினை தான் நம்மை வந்து அடையும்.  இதற்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *