அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
இடங்கழி நாயனார்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சிறப்பு வாய்ந்தது. புகழ் பெற்றது. புதுக்கோட்டையில் ரெண்டு சிறு ராஜ்யங்கள் இருந்தது. ஒன்று கானாடு , இன்னொன்று கோனாடு. கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர்.
திருச்சி வழியாக விராலிமலை வழியே வந்தால் மதுரை செல்லும் பாதையில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திபில் உள்ள ஊர். பாண்டிய நாட்டு ராணி மங்கம்மாள் கொடும்பாளூரில் பாதயாத்ரிகள் உணவருந்த, தங்குவதற்கு சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். பல சத்ரங்கள் ஆங்காங்கே உருவாயின. மங்கம்மா சத்திரம் என்று எல்லோரும் நன்றியுடனே வாழ்த்திய அமைப்புகள். மங்கம்மா சத்ரத்தைப் போலவே கொடும்பாளூரும் பிரபலமான ஒரு பெயர்.
எல்லோருக்கும் தெரிந்த பெயர். அதுவும் பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு அது ராஜராஜ சோழன் மனைவி வானதி கொடும்பாளூர் இளவரசி என்ற அடையாளம் கொண்டவர் என்பதும் தெரியும். இந்த கோனாட்டுக்கு ஒரு ராஜா. அறுபத்து மூவரில் ஒரு சிறந்த சிவபக்தர். தொண்டர். பெயர் இடங்கழி நாயனார். வேளிர் குலத்து வீர சைவர். சிறந்த நேர்மையான ஆட்சி புரிந்தவர். பிற்கால சோழர்கள் வம்சத்தில் விஜயாலய சோழன், ராஜராஜ சோழன் வம்சத்தவர்.
கோனாட்டில் ஒரு சிவத் தொண்டரும் வாழ்ந்து வந்தார். தூய சிவனடியார். அநேக சைவர்களுக்கும் சிவபக்தர்களுக்கும் முடிந்தவரை தினமும் உபசரித்து உணவளிப்பவர். அவர்களை வணங்கி மஹேஸ்வர பூஜை செய்பவர். நேரம் வந்துவிட்டது. உலகத்துக்கு இடங்கழி நாயனார் யார் என்று தெரியவேண்டும். அதற்காக ஒரு சோதனை நடத்தவேண்டும் என்று பரமேஸ்வரன் சங்கல்பித்தான்.
பாவம் அந்த கொடும்பாளூர் சிவத் தொண்டருக்கு, ஒருநாள் உணவளிக்க அரிசியோ நெல்லோ வீட்டிலும் வேறு எங்கும் வெளியிலும் கிடைக்கவில்லை. என்ன செய்வார்? எப்படியாவது அரிசியோ நெல்லோ பெற்றுவிடவேண்டும் என்ற முடிவில் கோனாட்டு ராஜா இடங்கழியார் அரண்மனையில் சேமித்துவைத்திருந்த நெல்லை களவாட துணிந்தார். யாரும் அறியாமல் அரண்மனையில் புகுந்து நெல் சேமித்து வைத்திக்கும் நெற்களஞ்சியம், குதிரைத் திறந்து நெல் எடுத்தார். அவரை ராஜாவின் காவலர்கள் கையும் களவுமாக பிடித்து இடங்கழியார் முன் நிறுத்தினார்கள்.
”யார் இவன் என் அரண்மனையிலேயே களவாடியவன்? இவனுக்கு சரியான கடும் தண்டனை தருகிறேன்” என்று கோபமாக சிவனடியாரை பார்த்தான்.
“யார் நீ ?
” அரசே நான் உங்கள் குடிமக்களில் ஒருவன்”
” உனக்கென்ன தொழில்?”
” என்னால் இயன்றவரை சிவனடியார்களுக்கு அன்றாடம் உணவளித்து அவர்களை மஹேஸ்வரனாக கருதி வண்னடி பூஜை செய்பவன்”
கோனாட்டின் அரசன் இடங்கழியாருக்கு கோபம் உடனே விலகிற்று , அந்த சிவனடியார் மேல் பாசமும் பக்தியும் தோன்றியது”
”ஐயா, எதற்காக என் அரண்மனையில் யாரும் அறியாமல் நுழைந்து நெல்லைத்த திருடினீர்?”
”அரசே, நான் என்ன செய்வேன், என் வீட்டிலோ வேறெங்குமோ ஒரு மணி நெல் கூட கிடைக்கவில்லை, ஆகவே நீண்ட யோசனைக்குபிறகு வேறு வழியின்றி உங்கள் நெல்லை அனுமதியின்றி எடுத்து சிவனடியார்களுக்கு உணவு தயாரிக்கலாம் என்று தோன்றியது ”
‘இடங்கழியாருக்கு இதைக் கேட்டதும் கண்களில் நீர் பெருகியது.
”ஐயா, நீர் திருடரல்ல, உமக்கு சொந்தமான இந்த இடத்திலிருந்து ஸத் காரியத்துக்காக நெல்லை எடுத்துச் சென்றீர்கள். ஒரு தவறும் செய்யவில்லை. எப்போது வேண்டுமானாலும் இது உங்களுக்காகவே திறந்திருக்கும். நாட்டில் சிவனடியார்களுக்கு உதவ எல்லோர் இல்லத்திலும் களஞ்சியங்கள் திறந்தே இருக்கும்” என்று ஆணையிட்டார்.
இறக்கும் வரை இடங்கழியாரின் சீரிய தொண்டு எல்லா சிவனடியார்களுடைய ஆசியையும் பெற்று தந்தது. அவர்கள் மூலம் திருப்தியடைந்த பரமேஸ்வரனும் பலல்லாண்டுகள் நல்லாட்சி அளித்த இடங்கழியாரின் காலம் முடிந்தபிறகு தன்னொடு இருக்க கைலாயத்துக்கு அழைத்துக் கொண்டான்.
இடங்கழியார் சிறந்த சிவபக்தராக கருதப்பட்டு அறுபத்து நாயன்மார்களில் ஒருவராக இடங்கழி நாயனாராக இன்றும் நம்மால் சிவாலயங்களில் வணங்கப்படுகிறார். கொடும்பாளூரில் சிதிலமடைந்த மூவர் கோவில் என்ற ஆலயத்தின் படங்களை கூகுளில் பார்த்தேன். என் முகநூல் அன்பர்களில் யாரேனும் கொடும்பாளூரைச் சேர்நதவர்கள் இருந்தால் இடங்கழிநாயனார் வழிபட்ட சிவாலயத்தின் படங்கள் விபரங்களை எனக்குச் சொல்லலாமே.