மனைவி அமைவதெல்லாம்….. நங்கநல்லூர் J K SIVAN அம்பலவாண கவிராயர்
அறப்பளீசுர சதகத்தில் ஒரு பாட்டு.
என் அம்மா வழி தாத்தா, கொள்ளு, எள்ளு அதற்கு முந்திய சில தாத்தாக்கள் வாழ்ந்தது ராமநாடக கீர்த்தனை பாடல்களை பாடி பிரவசனம் பண்ணி அக்காலத்திய பிரபுக்கள், பெரிய ஜமீன்தார்கள், சிற்றரசர்கள் நிறைய இவர்களை ஆதரித்தார்கள்.
ராம நாடக கீர்த்தனைகளை இயற்றியவர் அருணாசல கவிராயர், அவர் மகன் அம்பலவாண கவிராயர். அவர் இயற்றியது தான் அறப்பளீசுர சதகம். அருமையான பாடல்கள் . அதில் ஒன்றை இன்று விளக்குகிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் அழகாகவும், செல்வத்திலும், செல்லத்திலும் வளர்பவர்களாகவும், ஒழுக்கம் மிகுந்தவர்களாகவும் , கடவுள் மேல் நம்பிக்கையோடு இருப்பவர்களாக திகழவேண்டும் என்பது தான் ஒவ்வொரு பெற்றோரின் கனவும் எதிர்பார்ப்பும் அல்லவா? அதை அருமையான பாடல் மூலம் சொல்கிறார் அம்பலவாண கவிராயர்.அறப்பளீசுர சதகம் என்றால் என்ன?
சதுரகிரி எனும் க்ஷேத்ரம் கொல்லி மலையில் உள்ளது. அங்கே இருக்கும் சிவஸ்தலம் அறப்பளி , அங்கே சிவனின் பெயர் அறப்பளீஸ்வரர். அவரை வேண்டிக்கொண்டு அவர்மேல் பக்தியோடு இயற்றிய 100 பாடல்கள் தான் அறப்பளீசுர சதகம்.
கணவனுக் கினியளாய், ம்ருதுபாஷி யாய், மிக்க
கமலைநிகர் ரூப வதியாய்க்,
காய்சினம் இலாளுமாய், நோய்பழி யிலாததோர்
கால்வழியில் வந்த வளுமாய்,
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன
வரும்இனிய மார்க்க வதியாய்,
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய், வாசல்
வருவிருந் தோம்பு பவளாய்,
இணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
என்பெயர் இலாத வளுமாய்,
இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம்
இல்வழி செலாத வளுமாய்,
அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்
ஆகும்;எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அறப்பளீஸ்வரா நான் தேடும் பெண் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லட்டுமா? கண்ணுக்கு இனியளாய் – கணவன் பார்வைக்கு அழகியவளாய், அவள் வாயினின்றும் புறப்படும் சொற்கள் செவிக்கினிமையாக, மிருது பாஷியாய், மஹா லக்ஷ்மி போல அழகுடையவளாக, கொஞ்சம் கூட கோபம் என்றே என்னவென்று தெரியாதவளாக, நோயற்ற ஆரோக்கியமான, நல்ல குடும்பத்தவளாக, பெண்மைக்குரிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு குணங்களை கொண்டவளாக, வீட்டில் பெரியோர்களுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்பவளாக, அவர்களால் போற்றப்படுபவளாக, வீட்டுக்கு வந்த விருந்தினரை, அதிதிகளை, முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்து நலம் புரிபவளாக, கணவனின் மனம் கோணாமல் அவனை மகிழ்விக்கும் மனைவியாக, நல்ல குழந்தைகளை பெறும் தாயாக இருக்கப்போவளாக, சுறுசுறுப்பில்லாதவள் என பெயர் எடுக்காதவளாக, மற்றவர்களுடன் வம்பு தும்பு பேசாதவளாக, அழகுக்கு அழகு செய்யும் ஆபரணங்கள் அணிகலன்கள் அணிந்த சர்வாலங்கார பூஷிதையாக, கற்புக்கரசியாக பெருமை அளிப்பவளாக இருக்கவேண்டும் . அறப்பளீசுர சுவாமி, அத்தகைய பெண் உன்னை ஒருகணமும் மறவாதவளாக இருக்க வேண்டும். நீ தான் அருள்புரியவேண்டும்” என்கிறார் கவிராயர்.
என் காதில் படும் விஷயம் இப்போதெல்லாம் வேறு மாதிரி அல்லவா இருக்கிறது. இப்போதைக்கு எப்படிப்பட்ட பெண் எங்கள் வீட்டு பெண் என்று அவள் பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்று அறிந்து என் காதுகளை நம்பமுடியவில்லை. நான் பெண் சுதந்திரத்துக்கு எதிரி இல்லை என்பது ஞாபகம் இருக்கட்டும்.
எங்கள் பெண் குண்டு தான். நிறைய படித்தவள் . அமெரிக்காவில் வேலை செய்பவள் . தானே காரில் எங்கும் செல்பவள். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவள். தலை பின்னல் பூ எல்லாம் பிடிக்காது. பட்டிக்காடு அல்ல. மஞ்சள், குங்குமம் என்று முகத்தை சாயம் போட்டுக்கொள்பவள் இல்லை. சமையல் எல்லாம் செய்யமாட்டான்.காபி டீ மெஷினில் தனக்கு மட்டும் போட்டுக்கொள்பவள். துணி தோய்ப்பது, வீடு பெருக்குவது, சமைப்பது எல்லாம் தெரிந்த கணவன் தான் வேண்டும். உரக்க பேசுபவன் , எதிர்த்து பேசுபவன் வேண்டாம். அவன் பெற்றோர்களுக்கு வீட்டில் அனுமதி இல்லை. க, அவள் சம்பாத்ய பணத்தில் ஒரு தம்பிடி கூட கணக்கு சொல்லவோ, கொடுக்கவோ விரும்பாதவள். இஷ்டப்படி செலவு செயது, நினைத்த இடத்துக்கு ஆண் பெண் நண்பர்களோடு இரவும் பகலும் செல்பவள். பண்டிகைகள் பக்ஷணங்கள் எல்லாம் கிடையாது. இன்னும் எத்தனையோ கண்டிஷன் போடுபவதெல்லாம் எனக்கு தெரியவில்லை.. தெரிந்து கொள்ள விருப்பமனு இல்லை…
பாவம் அம்பலண கவிராயர் சுத்த பட்டிக்காடு நூறு வருஷம் முன்னால் இருந்த பட்டிக்காடு மனுஷன். அவர் தேடுவது வேறே ரூட்…