THIRUVEMBAVAI 19 J K SIVAN

திருவெம்பாவை  —  நங்கநல்லூர்   J K  SIVAN மணி வாசகர்
மார்கழி 19ம் நாள்.

19.  திருவாதவூரர்

நம் எல்லோருக்கும் ஏதோ  ஒரு  ஒரு ஊர்  சொந்த ஊர், பிறந்தஊர் என்று ஒன்று  உண்டு.   பிறந்த ஊர், அல்லது பூர்வீகம்,   அல்லது வாழ்ந்த ஊர்  என்பதை  வைத்து  தான்  ஒருவரை  அடையாளம் சொல்வது  பண்டைய காலத்தில்  வழக்கம். அது ஒருவரின் அடையாளம்.  

அப்படித்தான்  திருவாதவூர்  மாணிக்கவாசகர்  பிறந்த ஊர் என்பதால் அவரை வாதவூரர் என்பார்கள்.  திரு வாதவூர்  மிக ரம்யமானது. வயல்களும், ஊரணிகளும், கண்மாய்களும் நீர் நிரம்பி செழித்து இருந்தது.
துவாபர  யுகத்தில் ஒரு முறை மழை பொய்த்ததால் அவ்வூரில் கடுமையான வறட்சி நிலவியது. கால்நடைகள், பறவைகள், மனிதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எங்கும் பஞ்சம்  தலைவிரித்தாடியது.  அந்த ஊர் மக்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, மஹா விஷ்ணு மழை பொழிய வேண்டு மென்றால் காசியில் இருக்கும் புருஷா மிருகத்தை அழைத்து வந்து யாகம் செய்தால் மழை பொழியும். அந்த புருஷா மிருகம் பீமன் அழைத்தால்  தான் வரும்  என்று  கூற, மக்கள் பீமனிடம் வேண்டி, புருஷ மிருகத்தை அந்த ஊருக்குள் அழைத்து வர யாகங்கள் தொடங்கினர்.

சில நாட்களில் மழை பெய்ய தொடங்கியது. நீர் நிலைகள் நிரம்பின. மக்கள் மகிழ்ச்சி டைந்தனர். அவ்வூர் பெரிய கண்மாய் நிறைந்து மறுகால் ஓடியது. (மறுகால் என்பது அதிகப்படியான நீரை வெளியேற்றும் வழி). புருஷா  மிருகம் மஹா விஷ்ணுவிடம், தான் வந்த வேலை முடிந்து விட்டது. விடை கொடுக்க வேண்டும், என்று கேட்க, மஹா விஷ்ணு  ”நீ திரும்பி போக வேண்டாம். இவ்வூரின் காவல் தெய்வமாக இருந்து இவ்வூர் மக்களைக்  காக்க வேண்டும்”  என்று கூறினார்.அன்றிலிருந்து புருஷா  மிருகம் இவ்வூரின் கண்மாயின் கரை அருகில் இரண்டு பெரிய கல்துாண் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறது.

திருவாதவூர்  மதுரை-மேலூர்  மார்கத்தில் தென் திசையில்  ஒன்பது கி.மீ தூரத்தில் உள்ள அமைதியான  ஊர். மதுரையிலிருந்து  திருவாதவூர்  என்று பலகையில் பேர்  எழுதி  பஸ் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.  அதில் ஏறி அந்த ஊர்  போக வேண்டும் என்ற  ஆசை மட்டும்  இன்னும் நிறைவேறவில்லை. அரை நூற்றாண்டுக்கு  மேல்   ஓடிவிட்டது  இந்த ஆசை நிறைவேறாமலே.

திருவாதவூர்  சிவாலயத்தில்  ஈஸ்வரனின்  பெயர்  வேதநாதர்,   திருமறைநாதர்.  .அம்பாள் ஆரண வல்லியம்மை. ஸ்தல வ்ருக்ஷம் மகிழ மரம்.   தீர்த்தம் கபில, ப்ரம்ம,  பைரவ தீர்த்தங்கள்.  மஹா  விஷ்ணு   இங்கே  பரமேஸ்வரனை  தவமிருந்து வழிபட்டபோது   சிவனிடமிருந்து  வேதம்  ”அஹம் ” வேதாஹம் என்ற  ஸ்ருதி  வெளிப்பட்டதால்  மூலவருக்கு  வேதநாதர் எனும்  திருமறை நாதர்  என்ற பெயர் அமைந்தது.  இந்த  சிறந்த பாண்டியநாட்டு ஸ்தலத்தை  ”தென் பறம்பு நாட்டுத் திருவாதவூர்”  என்று  நூல்களில் சொல்லி இருக்கிறார்கள்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான  பாரியின்  நண்பரான  புலவர்  கபிலரும் இங்கே தான் அவதரித்தார்.   மாணிக்க வாசகருக்கு    இறைவன்  திருச்  சிலம்பொலியைக் காட்டியருளிய தலம்.

இக்கோயிலுக்கு சற்றுத் தொலைவில் தான் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இல்லம் ஒரு கோயிலாக விளங்குகிறது. இனி மணிவாசகரின் 19வது  திருவெம்பாவை பாடலை  இன்று  அறிவோம்:

19. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

”மஹா தேவா, ஆதி அந்தமில்லாத,  யாரும்  அடிமுடி காணமுடியாத,  பெரும் பரம் பொருளே, உன் கையில், நானாகிய உன் குழந்தை அடைக்கலம்  என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம். உன்னிடம் விண்ணப்பிக்கிறோம் .விஸ்வேஸ்வரா. கேள். யாம் உன்னடியார். உனக்கே ஆட்பட்டோம். எம் கைகள் உனக்கன்றிப் பிற  தேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில்  இந்த  பரிசை,  எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?”
மணி வாசகர்  ஒரு பெண்ணாக தன்னை உருவகப்படுத்தி  மற்ற பெண்களை துயிலெழுப்பி  அருணாசலேஸ்வரனைப்   பணிய அழைக்கிறார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *