THIRUPPAVAI 30 J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே!  – நங்கநல்லூர் J K SIVAN
30 செல்வன் திருமால் – செல்வி ஆண்டாள் கல்யாணம்.
ஒரு மாதகாலம் நாம் மார்கழியில் வீட்டில் இருந்தபடியே ஆண்டாள் அளித்த  திருப்பாவை  பாசுரங்கள் எனும் அக்காரவடிசலை  ருசித்து அனுபவித்தோம். மார்கழி முடிந்து இனி உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த 29 நாளும் ஆண்டாள் பாசுரங்களை எத்தனையோ மகான்கள் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். அனுபவித்து உரையாற்றி யிருக்கிறார்கள், பிரசங்கித்து வருகிறார்கள். பாடியுள்ளார்கள்.  இன்னும் பாடுகிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பெரிய விஷயங்களைத் தொடுகிறது என்பதைத் தவிர என்னுடைய இந்த  அழகிய ஆழ்வார்  பதிவுகள்  பாராயண புத்தகமல்ல. குழந்தைகளுக்கும் சில பெரியவர்களுக்கும் திருப்பாவையை கதையாக எளிதில் அறிமுகம் செய்ய என்னாலான ஒரு சிறிய முயற்சி என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். கோதை  ஆண்டாள் பாடுவதாக  மார்கழி  நோன்பு பாசுரங்களை எப்படி முடிக்கிறாள் பாருங்கள்,  படியுங்கள்:
”வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.’
இது திருப்பாவையின் முடிவுப் பாசுரம். இதை பல ஸ்ருதி என்று சொல்வது வழக்கம். ஒவ்வொரு முக்ய ஸ்லோகத்தையும் , மந்திரத்தையும் தப்பில்லாமல் உச்சாடனம் செய்தால், விடாமல் சொன்னால், இன்ன பலன் கிடைக்கும் என்று அருள்வது தான் பலஸ்ருதி .
” இந்த ஸ்லோகம் சொல்லுங்கள் ஸார் , பாராயணம் பண்ணுங்கள் மாமா, அதன் பிரகாரம் நடக்கவும்” என்று ஒன்றை பற்றி ஒருவர் மற்றொருவரிடம் சொன்னால்,
” ஓஹோ அப்படியா, இதைச் செய்தால், இதன் படி நடந்தால், எனக்கு என்ன பயன், என்ன பலன்?” என்று கேட்பவர்கள் நம்மில் அநேகர் இருப்பதை அந்த இளம் பெண் கோதை நாச்சியார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்திருக்கிறாள். அவர்களை, (நம்மை) திருப்திப்படுத்த அவள் கொடுத்த வாய் மொழி இது .
கோதையின் திருப்பாவை முப்பது பாசுரங்களும் தினமும் விஷ்ணுசித்தரிடம் விளக்கம் கேட்ட ஆலய பட்டாச்சார்யர் என்னவோ கேட்கிறாரே, அது என்னவென்று காதில் விழுகிறதா ? கவனிப்போம்.
”ஸ்வாமி, நீங்கள் இன்று விளக்குகின்ற பாசுரம் தான் மார்கழிக்கான கடைசி பாசுரம் என்று அறியும் போது இனி தொடராதே என்கிற வருத்தம் மிகவும் இருக்கிறது ‘
‘ அப்படிச் சொல்லவேண்டாம். இதற்கு முடிவே கிடையாது. ஒன்றில்லை எனில் மற்றொன்று. இந்த பாசுரத்தில் ஆண்டாள் கேசவா மாதவா என்று கிருஷ்ணனை அழைக்கிறாள். ”க ” என்பது பிரமனைக் குறிக்கும் சொல். ”ஈசா” என்பது சிவனைக் குறிக்கும் சொல். (க+ஈசா = கேசவா). மும்மூர்த்திகளும் ஒன்றே என்ற அழகான வார்த்தை.
மாதவா என்பது மஹாலக்ஷ்மி தாயாரை(மா)  உடையவர் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்ததில் கிடைத்தவள் மஹா லக்ஷ்மி. (இந்த கோதை, தன்னை அரங்கனை அடைய வந்த மஹாலக்ஷ்மி என்பதை விளக்குகிறாளோ?)
முதல் பதினைந்து பாசுரங்களிலும் மற்ற பெண்களுடன் யமுனையில் நீராடி அன்றாடம் நோன்பு நோற்பதையும், 16வதில் நந்தகோபன் அரண்மனையை அடைவதையும் , அடுத்த 5 பாடல்களை நந்தகோபன், பலராமன், முதலானோரை துயிலெழுப்புவதையும், 23வது பாசுரத்தில் கண்ணனை துயில் எழுப்பி அவனை சிம்மாசனத்தில் அமரச் செய்வதையும், மற்ற இருபாடல்களில் பரிபூர்ண சரணாகதித்வம் பற்றியும் 26ல் விரதத்துக்கு தேவையான பொருள்களை வேண்டுவ தையும், 27ல் அந்த ஆயர்பாடிச் சிறுமிகளுக்கு சன்மானம் கேட்பதையும், 28வதில் அவனது மேன்மையை எடுத்துச் சொல்லி தாங்கள் செய்த நோன்பில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை க்ஷமிக்க வேண்டுவதையும், 29ல் நோன்பின் நோக்கத்தை அருளிச்செய வேண்டுவதையும், 30ல் அதை அடைந்தனர் என்ற பலஸ்ருதியையும் எத்தனை அழகாக மணி மாலையாக அந்த பட்டர் பிரான் வளர்த்த கோதை தொடுத்து அளித்திருக்கிறாள்  அந்த பலே சுட்டிப் பெண் ஆண்டாள்!.இந்த  ஆண்டாள் பாசுரத்தை விடாமல் எழுதிய எனக்கு கிடைத்த  பெரும் பரிசு பற்றி   ஏற்கனவே  சொல்லி யிருந்தேன். என் நண்பர்  ஸ்ரீ ராதாகிருஷ்ணன் 89 வயது முடிந்து 90ம்  பிராயம் ஆரம்ப நாள் அன்று  11.1.24 ஸ்ரீரங்கத்தில்  ரங்கனுக்கு மற்றும்  ரெண்டு சந்நிதிகளுக்கு  ஒரு  நித்ய பூஜை  கட்டளைக்கு  பணம் செலுத்தி அதன் மூலம் ரங்கநாதன் அருகே  நின்று தரிசனம் செய்ய  வாய்ப்பு கிடைத்ததில் என்னையும்  வாங்கோ என்று கூடவே அவரது  காரில் கூட்டிச் சென்றார்.  11.1.24  அன்று காலை மாலை ரெண்டு வேளையும்  ரங்கன் அருகே  சென்று நின்று தரிசனம் செய்யும் பாக்யத்தை ஆண்டாள் தான் நான் வணங்கும் கிருஷ்ணன் பேர்  கொண்ட ராதாகிருஷ்ணன் மூலம் பரிசாக எனக்கு அளித்தாள் .
திருப்பாவையை மனதில் பக்தியோடு, நம்பிக்கையோடு படித்து பாராயணம் செய்பவர்க்கு நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இதற்கு கண்ணன் அருள் புரிவான். ‘வாரண்டி, கேரண்டீ’ இது தான்.
ஒரு அழகிய மணிமாலையில் ஒரு மணி உதிர்ந் தாலும் மாலைக்கு மதிப்பில்லையே. அது போல் இந்த முப்பது பாசுரங்களையும் முழுமையாக பாடி வேண்டுவோர்க்கு பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் என்பது சான்றோர் வாக்கு.
திருப்பாவை 30 பாடல்கள் முடிந்து விட்டது என்பதால் இத்துடன் எனது அக்கார வடிசல் ”தடா” க்கள் காலியாக வில்லை. இனிமேல் தான் அக்கார அடிசலே வருகிறது. சர்க்கரை தைப்பொங்கல் உருவத்தில். எல்லா கல்யாணங்களும் எப்போது தை மாதம் வரும் கல்யாண முஹுர்த்தத்துக்கு என்று காத்திருந்து விமரிசையாக நடக்கிறது அல்லவா? தை மாத முதல் முகூர்த்த கல்யாணம் ஆண்டாள் ரங்கன் கல்யாணம் தான். ஆண்டாள் அரங்கனை அடையப் போகிறாள். பிரம்மாண்டமான கல்யாண ஏற்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன. திருமண அழைப்பு உங்களை அடையப் போகிறது. அதிகமாக பொங்கல் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொண்டால் ஆண்டாள் கல்யாண சாப்பாடு நிறைய சாப்பிட முடியாதே. நாளை வயிற்றை காலியாக வைத்துக் கொண்டு காத்திருக்கவும். நாளை சந்திப்போம்: ஒரு முக்கிய விஷயம் இந்த கல்யாணத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.அவரவர் இருக்குமிடத்திலேயே விருந்து வந்து சேரும்.
‘ஆண்டாளுக்கு திருமணம். அவசியம் வீட்டிலிருந்து கொண்டே மனதால் பங்கேற்று கௌரவிக்கவும். ஆண்டாள் அரங்கன் ஆசி பெறவும் –  இப்படிக்கு  ஜே.கே.சிவன்  மாமா, ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட், நங்கநல்லூர்   ”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *