திருப்பள்ளி எழுச்சி 9 – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர்
மார்கழி 29ம் நாள்.
திருப்பள்ளி எழுச்சி பாடல் 9
திருப்பள்ளி எழுச்சி என்று மணிவாசகர் சிவனை தரிசிக்க, நினைக்க, எல்லோரையும் துயிலெழுப்பியது மார்கழியில் மட்டும் அல்ல. வாழ்நாள் பூரா தூங்கிக்கொண்டே இருக்கும் நம்மையும் ஆத்ம ஞானம் பெற என்று அறிவோம். மொத்தம் பத்து பாடல்களில் இன்று ஒன்பாவது பாடல். அடுத்த பதிவோடு திருப்பள்ளி எழுச்சி நிறைவு பெரும்.
பொதுவாக, சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சிலது மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குரு மூர்த்தமாக அமைந்த ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன், சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்த விருக்ஷம் மேவிய குரு பரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார்.
மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களை நினைவூட்டும் வகையில் கனகசபை முதலான ஆறு சபைகளும் இக்கோயிலில் உள்ளன. திருப்பரங்குன்றத் திருப்புகழில் “அருக்கு மங்கையர்” என்று தொடங்கும் பாடலில் “வழியடியர் திருக்குருந்தடி அருள் பெற அருளிய குருநாதர்” என்று ஆத்மநாதசுவாமியை அருணகிரிநாதர் போற்றிப்பாடுகிறார்.
ஆத்மலிங்க வடிவில் ஈசன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை – அருவ நிலையை – ஆத்மசொரூபமாக உள்ள நிலையை
“பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்
பதனமாய் வைத்து மனத்துள்ளே – நிதம்
பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை – இது
பரம ரகசியம் என்று கொள்ளே” –
என்று மாணிக்கவாசகர் விலாசம் என்னும் பழைய நூல் புகழ்கிறது.
இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது
1) வனம் – குருந்தவனம்
2) தலம் – தீர்த்தத்தலம்
3) புரம் – சிவபுரம்
4) தீர்த்தம் – திருத்தமாம் பொய்கை
5) மூர்த்தி – ஆத்மநாதர்
6) தொண்டர் – மாணிக்கவாசகர்.
கோயிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, ஒரு வயதான தொய்ந்து போன குளம். சாலையிலிருந்து கோயிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக் காட்சி கண்ணில் படுகிறது. உட்புறம் சென்றால், சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் மர வேலைப்பாடுகள் அமைந்த விதானம் பராமரிப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறது.
மேலே பார்த்தால் விதானத்தின் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு) , ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப் பிடிபோல நிறுத்தி – அவருடைய திருவடிகளைச் ‘சிக்’ கென பிடித்து, உய்வு பெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே போ” என்று அறிவுறுத்துகிறதோ?
அடுத்து காண்பது ஒரு பெரிய மண்டபம் – ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான கலைப் பொக்கிஷம். வேலைப் பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும், ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு காட்சி தருகிறார்கள். நடுவே, மேற்புறத்தில் வண்ணமயமாக விராட் சொரூபம். எத்தனையோ தமிர்ஷ்டர்கள் கைங்கர்யத்தில் இப்படிப்பட்ட ஆலயங்கள் நமக்கு கிடைத்தும் நாம் பொறுப்பாக அவற்றை பராமரித்து அடுத்த தலைமுறையும் அனுபவிக்க காப்பாற்றவேண்டும் என்ற நினைவில்லாமல் இருப்பது வருந்தத் தக்கது.
பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்கள் ,வேத வனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர் இந்த மண்டபத்தை கிட்டத்தட்ட 350 வருஷங்கள் முன்பு கட்டியிருக்கிறார்கள்.
9 ”விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று களிதரு தேனே!
கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!”
எனையாளும் திருப்பெருந்துறை ஸர்வேசா , விண்ணில் வாழும் தேவர்கள் கூட நெருங்க முடியாத உயர்ந்தவனே, உன்னுடைய திருவடிகளுக்கு சேவை செய்யும் அடியார்களாகிய எங்களை இந்த பூமியில் வாழ வகை செய்து கொடுத்தவனே. நாங்கள் பரம்பரை பரம்பரையாக உன்னுடைய அடிமைகள். எங்கள் எல்லோருக்கும் ஆனந்தம் தருபவனே, இனிமையான தேன் சுவையே, கருணைக் கரும்பே, பக்தியோடு உன்னை வணங்குவோர் நெஞ்சில் குடி கொண்டவனே, எண்ணத்தில் நிறைந்தவனே,உலகமெல்லாம் நீயே, துயிலெழுவாய் தெய்வமே.