மூன்று நாள் திருச்சி பயணம்.- நங்கநல்லூர் J K SIVAN
ப்ரம்ம புரீஸ்வரர் – திருப்பட்டூர்
இத்துடன் என்னுடைய திருச்சி ஸ்ரீரங்க பயணக் கட்டுரைகள் நிறைவு பெறுகிறது. நண்பர்களே, எப்படியோ கிருஷ்ணன் அருளால் ஜனவரி 10 கிளம்பி 11,12 ஆகிய இரு நாட்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு சில ஆலயங்களை தரிசிக்கும் பாக்யம் என் நண்பர் ஸ்ரீ ஜம்புநாத ராதாகிருஷ்ணன் அவர்களால் எனக்கு சௌகர்யமாக கிட்டியது. அவருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பெரும்பகுதி புறப்பட்ட நாள் 10.1.24 மற்றும் திரும்பிய நாள் 12.1.24 காரில் கழிந்தாலும் இடையே கிடைத்த சில மணி நேரங்கள் அற்புதமாக மறக்க முடியாத படி கழிந்தது. கிட்டத்தட்ட இதையும் சேர்த்து ஒரு பத்து கட்டுரைகள் எழுதினேனே எப்படி? என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த மாயன் மாதவன் லீலைகளில் இதுவும் ஒன்று. எனது பயணம் சௌகர்யமாக நடக்க ரெண்டு முக்கியமான நண்பர்களும் காரணம். ஸ்ரீ லக்ஷ்மணன் சேகர் என்ற ஸ்ரீ ராதாகிருஷ்ணன் நண்பரும், நமது முகநூல் வாசகரும், மற்ற ஸ்ரீ யுவராஜ் என்ற வாகன ஓட்டுனரும் தான். அற்புதமாக குறித்த நேரத்தில் எங்கு போகவேண்டுமோ அங்கே இருவரும் திட்டமிட்டு அழைத்துச் சென்றார்கள். நீடூழி வாழ வேண்டுகிறேன். ராதாகிருஷ்ணன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவரது 100வது பிறந்த நாள் அன்றும் நாங்கள் இருவரும் சுவாமி தரிசனம் பண்ணவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
கிருஷ்ணன் அருளால் யாரோ வா என்று கூப்பிட்டு அழைத்துக் கொண்டு போனார்கள். போனேன், வந்தேன் என்று ஜடமாகவா இருக்க முடிகிறது? அதே கிருஷ்ணன் எனக்கு உணர்வுகளையும் அல்லவோ கொடுத்திருக்கிறான். நன்றியை வெளிப்படுத்த மனதையும், நாக்கையும் அல்லவோ அளித்திருக்கிறான்.
நான் அதிருஷ்டக்காரன் என்பதில் எனக்கே சந்தேகமில்லை. இல்லையென்றால் இத்தனை கோவில்களுக்கு சௌகரியமாக ஒருவர் என்னை அழைத்துப் போவாரா. போகுமிடத்தில் எல்லாம் அன்னம் ஆகாரம் தங்க சௌகரியமான இடம் வேறு. இதைத்தான் ”கொடுத்து வைத்தல்” என்பார்களோ ?
12.1.2024 அன்று காலை திருச்சி ஆண்டார் வீதியில் மதுரா லாட்ஜில் காலை 9 .30 மணிக்கே சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். முன்பெல்லாம் காலை 8.30க்கே சாப்பாடு ரெடியாகிவிடுமாம். இப்போது பழக்கங்கள் மாறிவிட்டதால், ஆபீஸ் போகும், வேறு வேலைக்கு செல்பவர்கள் காலை உணவாக முழு சாப்பாட்டையே முடித்துக் கொள்ள சௌகர்யமாக காலை 9.30க்கு சூடாக பெரிய வாழை இலையில் அம்ருதமாக சுசி ருசியாக உணவு கிடைக்கச் செயகிறார்கள்.
நண்பர் திருச்சி வக்கீல் ராதாகிருஷ்ணனோடு திருச்சி வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு 48 மணி நேர யாத்ரா சஞ்சாரம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. திருச்சியிலிருந்து 25 அல்லது 27 கி.மீ தூரத்தில் சென்னை மார்கத்தில் திருப்பட்டூர் என்கிற ஒரு ஊர் வரும். அதிலிருந்து 10 கிமீ. தூரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கிறது.
தெருவிலிருந்தே அம்பாள் கோபுர தரிசனம் பெற்றேன். பெரிய சாலையிலிருந்து ஏழெட்டு கி.மீ. தூரம் ஊருக்குள் சென்றால் ஸ்ரீ ப்ரம்ம சம்பத்கௌரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். அமைதியான மிக புராதன, அழகான சிற்பங்கள் உள்ள ஒரு ஆலயம். ஒரு வயதான மகிழமரம் ஸ்தல வ்ருக்ஷம். தரையில் மகிழம்பூக்கள் பாவாடை விரித்திருந்தது. பெருக்கி ஓரமாக குவித்திருந்தார்கள். என்ன வாசனை!! சத்தியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது. திருப்படையூர் திரிபடைந்து திருப்பட்டூர் ஆகிவிட்டதாம்.
பதினாறு பட்டைகள் (ஷோடச லிங்கம் ) கொண்ட பெரிய சிவலிங்கம் பிரம்மபுரீஸ்வரர். ப்ரம்மா வழிபட்ட கோவில். தனது சாபம் தீர பிரம்மா 12 சிவலிங்கங்களை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அழகிய சிவலிங்கங்கள் இந்த வளாகத்தில் உள்ளன. தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரரரை விட முன்னவர் இவர். இந்த ஆலய நந்தியை தொட்டால் உயிருள்ள காளையைத் தொடும் உணர்ச்சி தோன்றுமாம். ஆலயத்தில் பூஜிக்கப்படும் விக்ரஹங்களை, சிலைகளை அர்ச்சகர் ஒருவரே தொட தகுதியா னவர். பிரதோஷ காலத்தில் நிறைய பேர் இந்த நந்தியை தொடுவதாக அறிகிறேன். என்ன சொல்வது?? இப்படித்தானே சப்தஸ்வரம் ஒலிக்கும் கல்தூண்களை கற்களால் அடித்து, உடைத்து விடுகிறார்கள். பக்திக்கும் ஒரு எல்லை உண்டு. ஆலயத்தில் சரபேஸ்வரர் நரசிம்மனின் உக்கிரத்தை கட்டுப்படுத்தும் சிலை அழகாக உள்ளது. வழக்கமாக ப்ரம்மா வின் பெரிய முகம் பூரா மஞ்சள் பூசப்பட்டு அழகாக இருப்பார். வெள்ளியன்று நான் சென்றபோது அழகிய கருப்பு வர்ணத்தில் பிரம்மா முகத்தில் புன்முறுவல்.
எங்கு போனாலும் இரட்டையர்களான ரிஷிகள் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் (புலிக்கால் ரிஷி) சேர்ந்தே சென்று சிவனை உபாசிப்பது வழக்கம். இங்கேயும் வந்திருக்கிறார்கள். பதஞ்சலி சமாதி இந்த கோவிலில் உள்ளது. அவரது மார்பு விலா எலும்புகள் எக்ஸ்ரே போலவே கல்லில் வடித்து வைத்திருப்பது ஆச்சர்யம். அதே போல் வியாக்கிரபாதர் கங்கை நீரால் அபிஷேகம் செய்ய மேலே பறந்து சென்ற வெள்ளை யாரை ஐராவதத்தை கேட்க, கங்கை நீர் எடுத்து சென்ற ஐராவதம் ”கிடையாது போய்யா” என்று சொல்ல, வியாக்கிர பாதர் தனது புலி நக கால்களால் தரையில் கீறி ஒரு குளம் செய்து அந்த நீரே கங்கைநீராக அபிஷேகம் செய்கிறார். இதற்குள் ஐராவதம் கொண்டு சென்ற கங்கைநீரால் சிவனை அபிஷேகம் செய்ய முற்பட ”நீ இதை வியாக்ராபாதருக்கு கொடு முதலில்” என்று சிவன் திருப்பி அனுப்ப, ஐராவதம் ரிஷியிடம் ”ஸாரி,ரிஷி, இந்தாருங்கள் கங்கை நீர் ”என்று கொடுக்க, ”too லேட், வேண்டாம் உன் கங்கை நீர். நானே தயாரித்து அபிஷேகம் பண்ணிவிட்டேன்” ரிஷி சொல்ல ஐராவதம் தானே அந்த கங்கைநீ ரால் பிறகு சிவனுக்கு அபிஷேகம் செய்தது என்று ஒரு ஐதீகம். வியாக்ராபாதரின் சமாதி இங்கே இருக்கிறது.
திருப்பட்டூர் ஆலயத்தின் பெரிய வளாகத்தில் ஒரு பழைய கைலாசநாதர் ஆலயமும் ஒரு அழகிய பெரிய நந்தியும் கண்கொள்ளாக் காட்சி. எந்தநேரமும் கைலாச நாதர் கோவில் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ரொம்ப ஜாக்கிரதை யாக நெருங்கி செல்லவேண்டும். காஞ்சி புரத்தில் கைலாசநாதர் கோயில் உள்ளே நிற்பதைப் போல ஒரு பிரமை ஏற்படுகிறது. பல்லவர்கள் கைத்திறன் இது. பதஞ்சலி ஜீவசமாதியாக இருக்கிறார் என்பதால் இங்கிருந்து பலர் யோக சாஸ்திரங்களை த்யானம் செயது பயில்கிறார்கள்.
மஹா பெரியவா ஒரு தடவை என்ன சொன்னார் தெரியுமா?வேதங்களை சிவன் அம்பிகையிடம் அளிக்க, அவள் அதை பிரம்மாவிடம் ஒப்படைக்க, ப்ரம்ம தேவன் அவற்றை ”இந்தா, நீ வைத்துக் கொள்” என்று நந்தியிடம் தந்து அவரிடமிருந்தே ரிஷிகள் பெற்றனராம். ஒருவேளை அது இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடந்ததோ? ஏனென்றால் சிவன் பிரம்மபுரீஸ்வரர், அம்பாள் ப்ரம்ம சம்பத் கௌரி, ப்ரம்மா, நந்தி, பதஞ்சலி ரிஷி, எல்லாருமே இங்கு இருக்கின்றார்களே. பாதாள லிங்கம் பிரம்மாண்டமாக தனி சந்நிதியில் இருப்பதை தவறாமல் அங்கே செல்லும்போது தரிசிக்கவேண்டும். மேலே சொன்ன பன்னிரண்டு லிங்கங்களும் இங்கே ஜோதிர் லிங்கங்கள்.
ஒரு வரியில் ஸ்தலபுராணம் சொல்கிறேன்;’பிரம்மாவுக்கு சம அந்தஸ்து கொடுத்து ஐந்து தலைகளோடு படைக்கும் தொழிலைக் கொடுத்த சிவன், ப்ரம்மாவுக்கு கர்வம் தலைக்கேறியதால், அவனது ஐந்தாம் தலையைக்கொய்து, அவனது படைப்புத் தொழிலையும் பிடுங்கி, ப்ரம்மா மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் பெற 12 லிங்கங்களை கொண்டு இந்த திருப்பட்டூரில் வழிபட்டு, பதவியை மீண்டும் பெற்றானே ன் தவிர ஐந்தாவது தலை போனது போனது தான். மீண்டும் பெறவில்லை.
அர்ச்சகர் கம்பரசம்பேட்டையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் குடியிருப்பவர். ராதாகிருஷ்ணனைப் பார்த்ததில் சந்தோஷம். அதனால் எனக்கும் மரியாதை. ப்ரம்மாவின் மேல் சாற்றிய வஸ்திரம் எங்கள் பேரில் அர்ச்சனை. மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கருப்பு பிரம்மாவை போட்டோ எடுக்கவில்லை.
திருச்சி பக்கம் போகிறவர்கள் இந்த கோவிலை மறந்து விடாமல் சென்று பார்க்கலாம். என் அனுமதி தேவையில்லை.