நாம் எல்லாம் ராஜாக்கள் – நங்கநல்லூர் J K SIVAN
வெகுகாலம் எனக்கு சுதந்திரநாளுக்கும் குடியரசு நாளுக்கும் வித்யாசமே தெரியாது. அப்புறம் தான் தெரிந்தது. சுதந்திரம் வேறு நாம் ராஜாக்களாக இருப்பது வேறு என்று.
பிரயாணம் செய்யும்போது வழியில் பசிக்கும். போகும் வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காது. ஆகவே எது கிடைக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதை எடுத்து கட்டி வைத்துக் கொண்டு ரயிலுக்கு புறப்படுவது போல் நமக்கு சுதந்திரம் 1947 ல் கிடைத்தது. பிறகு இருப்பதை அலசி, சட்டங்கள் இயற்றி, நம்மை நாமே எந்த ராஜா, கவர்னர் ஜெனரலும் இல்லாமல் எப்படி ஆள்வது என்று சிந்தித்து. சுதந்தரம் கிளப்பி விட்ட ரத்த காயங்கள் ஆறி, சிதைந்து கிடந்த நாட்டை ஒருவழியாக ஒன்று சேர்த்து குடியரசு நாடாக மாற்றும் காரியத்தில் காலம் ரெண்டு வருஷம் ஆயிற்று. இதற்கு நடுவே காந்தி கொல்லப் பட்டு நாடு முழுக்க ஒரு களேபரம். பாகிஸ்தான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது. காந்தி இல்லாதது பெரிய குறையாக இருந்த நேரம்.
ஜனவரி 26, 1950 நாம் குடியரசின் பிரஜைகள் ஆகி விட்டோம். இதை கொண்டாடினோம். எப்படி?
சூளைமேட்டில் கார்பொரேஷன் ஸ்கூலில் முதல் நாளே சுப்ரமணிய அய்யர் சொல்லிவிட்டார்.
‘டே பசங்களா, நாளைக்கு காலம்பர 6 மணிக்கு எல்லோரும் இங்கே வரணும். டிரஸ் பளிச்சினு இருக்கணும். எவனாவது குளிக்காம, தலை சீவாம, அழுக்கு டிரஸ் சோட வந்தால், நெற்றிக்கு இட்டுக்காமல் வந்தால் பிரம்பு பழம் ஒவ்வொரு கையில் அஞ்சு அஞ்சு சூடா கிடைக்கும். ஜாக்ரதை” .
யதேச்சாதிகாரத்தொடு குடியரசு விழா எங்களுக்கு. .
குடியரசு தினம் என்றால் என்ன என்று எங்கள் யாருக்குமே எதுவுமே தெரியாது. ஆனால் அன்று மூன்று கலர் கொடி ஏற்றி பாடுவார்கள், பெண்கள் கோலாட்டம் கும்மி அடிப்பார்கள். வரிசையாக நிற்க வைத்து மிட்டாய், கொடி எல்லாம் கொடுப்பார்கள். யாராவது ஏதாவது பேசின பிறகு தான் மிட்டாய் என்பதால் புரியாமலே அந்த ஆள் எப்போ பேசி முடிப்பார் என்று காத்திருப்போம்.
காக்கி அரை நிஜாரைத் தோய்த்து அதைக் கையாலே அழுத்தி சுருக்கம் நீக்கி, பஞ்ச பாத்ரத்தில் தணல் நிரப்பி துணியால் பிடித்துக்கொண்டு தாழ்வாரத்தில் தரையில் அதற்கு இஸ்திரி போட்டு அதோடு உடன் பிறவா அரைக்கை பச்சை கோடு போட்ட (என்னிட மிருந்த ஒஸ்தி அது ) ஒரு நல்ல சட்டைக்கும் இஸ்திரி போட்டு அணிந்து காலில் செருப்பில்லாமல் சூளைமேட்டு கார்ப்பொரேஷன் பள்ளிக்கூடத்துக்கு காலை 6 மணிக்கு வந்து காத்திருந்தேன். வயது 10.
காவேரியம்மா டீச்சர், சரோஜினி டீச்சர் எல்லாம் பெண்களை ஒருபுறமும் பையன்களை ஒருபுறமும் உயரம் பார்த்து கொடி கம்பத்தை சுற்றிலும் வரிசைப் படுத்தி நிறுத்தினார்கள். கொடி கம்பத்திற்கு முதல் நாளே பச்சை சிவப்பு வெள்ளை வர்ணம் அடிக்க அப்பாதுரை தயாராகி விட்டான். மேலிருந்து கீழா கீழிருந்து மேலா எது முதலில் வர்ணம் அடிக்க வேண்டும்? சிகப்பா பச்சையா என்று அய்யரிடம் கேட்டுக்கொண்டு அப்பாதுரை வர்ணம் பூசியது ஞாபகம் இருக்கிறது. என் வகுப்பில் என் நண்பன் பட்டுநூல்கார பையன் கிருஷ்ணமூர்த்தி மரம், கொம்பு எல்லாம் குரங்கு போல் ஏறுவான். அவனை கொடிமர உச்சியில் ஏறச் சொல்லி கொடியை மடக்கி கயிற்றுக் குள் சுமாராக செருகி கயிற்றை இழுத்ததும் உடனே சரியாக அவிழுமாறு வைக்க சுப்ரமணிய அய்யர் உத்தரவு கொடுத்தார்.
பள்ளிக்கூட மண் தரையை பெருக்கி, குடி தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பியும், நேரம் பார்த்து மணி அடிக்கும் வேலையும் செய்து வந்த அப்பாதுரை அன்று விடிகாலையிலேயே பள்ளிக்கூட ம் முழுதும் இலை தழை இல்லாமல் பெருக்கி வைத்திருந்தான்.
சுண்ணாம்பு கோடுகள், ”நல்வரவு” எல்லாம் வாசல் வரை கோலமாக எழுதி வைத்திருந்தது. வாழிய செந்தமிழ் பாட்டு ஆறு ஏழு பெண்கள் கடைசி நிமிஷம் வரை இன்னும் பயின்று கொண்டிருந்தனர். சரோஜினி டீச்சர் பாடிக் காட்டிக் கொண்டிருந்தாள் .
காலை ஆறுமணியிலிருந்து வெகு நேரம் காத்திருந்து நின்று கொண்டிருந்தோம்.
ஏழரை மணிக்கு வடிவேல் நாயக்கர் வந்தார். வெள்ளை வேஷ்டி அரைக்கை கதர் ஜிப்பா நெற்றியில் பட்டையாக திருநீறு, குங்குமம். வெள்ளை மீசையோடு கை ரிக்ஷாவில் வந்து இறங்கினார். அப்போதெல்லாம் சூளைமேட்டில் அதிகம் சைக்கிள் ரிக்ஷா கிடையாது. குதிரை வண்டி, அல்லது கை ரிக்ஷா தான். ஒருவர் இருவர் போவதாக இருந்தால் கை ரிக்ஷா, நிறைய பேர் போனால் குதிரை வண்டி.
நாயக்கர் எல்லோரையும் தலையைச் சாய்த்து மிரள மிரள பார்த்து மேல் துண்டால் முகம் துடைத்துக் கொண்டார். கும்பலைப் பார்த்ததும் வியர்த்து விட்டது. சுப்ரமணிய அய்யர் நமது நாட்டில் இன்று குடியரசு தினம். என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் இரத்தின சுருக்கமாக சொல்லி விட்டு ”நாயக்கர் அய்யா கொடியேற்றுவார்” என்றார்.
நாயக்கர் கிணற்றில் வாளியில் நீர் இறைப்பதைப் போல் சர் சர் என்று கயிரை இழுத்து அது கம்பத்தின் உச்சியில் திரும்பி நின்று நான் அவிழமாட்டேன் என்றதால் கிருஷ்ணமூர்த்தி தாவி ஏறினான். அதை அங்கே மெதுவாக இழுத்து சரி செய்து திருப்பிவிட்டு இறங்கினான். அதற்குள் நாயக்கர் கயிற்றை இழுத்து கிருஷ்ணமூர்த்தி மீது மலர் மாரி பொழிந்தது.
”குழந்தைகள் பாடட்டுமே” என்றார் நாயக்கர்.
சரோஜினி ஜாடை காட்ட பெண்கள் கோரசாக ”வாழிய செந்தமிழ், தாயின் மணிக்கொடி” எல்லாம் பாடினார்கள் . ”பச்சைமலை பவழ மலை” பாடிக்கொண்டே கூடை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடினார்கள்.. நாயக்கர் கைதட்டினார். உடனே எல்லோரும் கை தட்டினோம்.
”உங்க கையாலே முட்டாய் கொடுங்கோ” என்று சுப்ரமணிய அய்யர் சொல்லி நாயக்கரிடம் முதல் மிட்டாய் பெற்றார். பிறகு டீச்சர்கள். அப்பாதுரை, பிறகு சின்ன பெண்கள், சின்ன பையன்கள், அப்புறம் பெரிய பெண்கள் பையன்கள் என்று எல்லோருக்கும் நாயக்கர் கடை மிட்டாய்கள் கிடைத்தது. நாயக்கர் பலசரக்கு கடை வைத்திருந்ததால் கோழி முட்டை சைஸில் கலர் கலராக மிட்டாய் சப்ளை பண்ணினார். அது பாதியிலேயே தீர்ந்தது விட்டதால். அச்சு வெல்லம் எமர்ஜென்சி சப்ளையாக கொண்டுவரச் சொல்லி எங்களுக்கு எல்லாம் அச்சு வெல்லக் கட்டி தான் கிடைத்தது. கோழிமுட்டை மிட்டாய் கிடைக்கவில்லை.
முதல் குடியரசு ஏமாற்றம் எனக்கு.
நாயக்கர்வாள் குடியரசு தின வாழ்த்து செய்தி சொல்லுங்க ” என்று ஹெட்மாஸ்டர் சுப்ரமணிய அய்யர் சொல்ல
”நீங்களே எதாவது சொல்லிடுங்க” என்று நாயக்கர் வியர்த்து கொட்டியவாறு தப்பித்தார்.
பிறகு வாசலில் தண்ணீர்ப்பந்தல் வைத்து வருவோர் போவோர்க்கு நீர் மோர் பொறி கடலை சப்ளை செய்ய சுப்ரமணிய அய்யரிடம் கொஞ்சம் பொறி மூட்டை, சில மோர் பானைகள் எல்லாம் கொண்டுவரச் சொல்லி நாயக்கர் தந்து விட்டு கை ரிக்ஷாவில் உட்கார்ந்து இழுக்கப்பட்டு விரைந்தார்..