3 DAYS TRICHY VISIT J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பிரயாணம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
திருச்சியில்  ஊசி குத்த  இடமில்லை.  இருக்கும் தெருக்களில்  பறக்கின்ற  பல வித  துரித  வாகனங்கள். தெருவின் இருமருங்கிலும்  கடைகள்,  பார்க்குமிடமெல்லாம்  சிரிக்கும்  மந்திரி முகம். அவரைச் சுற்றி  பரிவாரமும் சிரிக்கிறது.  மொத்தத்தில் திருச்சி சிரிப்பாய் சிரிக்கிறது என்று சொன்னால் சரியோ?  இன்னும்  மறையாதது  பிரயாணத்தின் போது  காவேரியை கடக்கும்  பாலத்திலிருந்து  தெரியும்  மலைக்கோட்டை , அதன்மேல் உச்சி பிள்ளையார் கோவில்,   திருவானைக்கா பழைய  ஜம்புகேஸ்வரர்  ஆலயம். ரயில் பாதை,   சில பெயர்கள், பாலக்கரை,  மாம்பழ சாலை, ஆண்டார் வீதி,  தெப்பக்குளம், கண்டோன்மெண்ட்.  அம்மா மண்டபம், தென்னூர்  சாலை,  சின்னக்கடை வீதி,  தில்லைநகர்.   அம்மன் கோவில்கள் அநேகம் வழியில் கண்டு வணங்கினேன். காரை நிறுத்தி ஒவ்வொரு கோவிலுக்குள்ளும்  போக  ஆசை. ஆனால் கார்  என்னுடையதல்ல, நேரமும்  இல்லை.
90 வயது நண்பருடன் செல்லும்போது அவரது  உடல் சௌகர்யத்தையும்  கருத்தில் கொண்டு தான் பிரயாணம் பண்ண வேண்டும் அல்லவா?
அற்புதமான வக்கீல்  ராதாகிருஷ்ணன்.  அறுபது எழுபது வருஷ  அனுபவங்களை எல்லாம் சொல்லிக்கொண்டே  வந்தார். எனக்கு பேர் மட்டும்  தெரிந்த  எத்தனையோ  பல  பிரபலங்களுடன்  அவருக்கு  நேர்ந்த   அனுபவங்கள் கேட்க ஆச்சர்யமாக இருந்தன.
வயலூருக்கு செல்ல போட்ட பிளான்  நிறைவேறவில்லை.  ஆண்டார்வீதியில் மதுரா லாட்ஜ் ரொம்ப பழைய பிரபலமான  ஒரு  சாப்பாடு ஹோட்டல். சுசி ருசி  என்ற வார்த்தையை  இன்னும் செயலில் காட்டி வரும் அமைதியான  ஹோட்டல். பரம்பரையாக நடத்தப்பட்டு வருகிறது.  ரெண்டு தலைமுறையாக  ராதாகிருஷ்ணனுக்கு பரிச்சயமான  ஹோட்டல் என்பதால் அங்கே அழைத்துச்சென்றார்.  ஒரே சமயத்தில்  60-75 பேர்  சாப்பிடலாம் போல ரெண்டு பெரிய  ஹால். ஒவ்வொருவருக்கும்  .தனி குட்டி டேபிள். உட்கார ரவுண்டு ஸ்டூல்.  மேசையை அடைத்த பெரிய  வாழை  இலை ,  ஏடு.  சூடான பக்குவமான  கமகம என மணக்கும்  பச்சரிசி சாதம்.  சாம்பார், ரசம், கீரை மசியல், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு , கூட்டு கறி , பச்சடி, பாயசம், தயிர்,மோர், அப்பளம்….. வயிற்றில் இடம் இல்லை சாப்பிட.  கண்ணெதிரே  ”உணவை வீணாக்காதீர், எவர் பசியையாவது போக்குமே ” வேண்டியதை கேட்டு வாங்கி நிறைய  சாப்பிடுங்கள்”  TAKE ALL THAT YOU CAN EAT. BUT EAT ALL THAT YOU TAKE, SAVE FOOD, SAVE LIFE”  போன்ற  வாசகங்கள் மற்ற  ஹோட்டல்களில் நான் பார்க்காத  வாசகங்கள்.
ஸ்ரீரங்கத்தில்  அதே போல் ‘மடப்பள்ளி’  என்ற ஹோட்டலில்  சாப்பாடு  அமாவாசை  என்று வாழைக்காய் கறியோடு, வெங்காயம் இல்லாதா சமையலாக கிடைத்தது  சந்தோஷமாக இருந்தது.
ஸ்ரீ ரங்கநாதன் ஆலயத்தில் கிடைத்த  ‘சேஷ வஸ்திரம்’ எனக்கு  ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பரிசாக கொடுத்தது  ரங்கநாதன் அருளால் கிடைத்த   என் பாக்யம் என்று சொல்வேன். சேஷ வஸ்திரம் என்பது சுவாமி மேல்  அணிவித்த வஸ்திரங்கள். எல்லோருக்கும் கிடைக்காது. பிறந்தநாள், முக்யமான நாட்களில் பகவானை வேண்டி அவன் அருள்  ப்ரசாதமாக  அதை  அணிந்து கொள்வேன்.
திருச்சியில் இருந்து திரும்பி வரும் போது சமயவரம் அம்பாள் கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது.திருப்பட்டூர்  பிரம்மபுரீஸ்வரர்  கோவிலுக்குச்  சென்று விட்டு சென்னை  திரும்பினோம்.அடுத்த பதிவில்  திருப்பட்டூர்  ஆலயம் பற்றி சொல்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *