WHAT IS MAYA J K SIVAN

மாயை புரிகிறதா? –   நங்கநல்லூர்    J  K SIVAN

”ஸார் , கிருஷ்ணன் கதை எல்லாம்  ஒவ்வொருத்தர்  ஒவ்வொரு  மாதிரி சொல்றாங்களே?  ஏன் ஸார் ?  —  மணவாள முதலியாருக்கு இது பெரிய கவலை?
”வாஸ்தவம்  முதலியார்வாள் .  முழுக்க  பதினைஞ்சு நாள்  ஆகலே,  அதற்குள்ளே   சாத்தான் குளத்தை பத்தி சொல்லும் போதே   ஆளுக்கு ஆள்  ஒவ்வொரு  மாதிரி  சொல்லும்போது, ஐந்தாயிரம், ஏழாயிரம் வருஷ  சமாச்சாரம்   ராமாய ணத்தையே  பல மஹான்கள் கொஞ்சம் வித்யாசத்தோடு அங்கும் இங்குமாக அளித்திருப்பதில்  என்ன ஆச்சர்யம். அது அவரவரர்  மனோதர்மம், சுதந்திரம். எல்லாமே  வித்யாசமா  இருக்கட்டுமே. அதனால் என்ன? சாப்பிடும்போது சாம்பார் ஒரு ருசி, மோர்க்குழம்பு ஒரு ருசி, பச்சடி ஒரு ருசி, பாயசம் வேறே ருசி. எல்லாம் நமக்கு பிடித்து தானே  ஒரே இலையில் அத்தனையும் சாப்பிடுகிறோம். ராமனைப் பற்றி யார்  என்ன எழுதினாலும்  ஓகே.   கம்பர் எழுதினமாதிரி  துளசிதாசர் இல்லை,  வியாசர் ஆனந்த ராமாயணம் வேற மாதிரி…. இருக்கட்டுமே .  அதே போல்  அப்படி தான்  பாரதமும்   நிறைய இருக்கிறது.  ஒவ்வொரு ரிஷி, மஹான்  ஒவ்வொரு விதமாக  உபதேசிப்பார்.  வியாசர்,  வில்லி புத்தூரார், பெருந்தேவனார் என்று பல தினுஸு  இருந்துட்டு போகட்டுமே. எல்லாம் ருசிதான். கத்திரிக்காயை கூட்டாக, கறியாக , சாம்பாராக, வத்தலாக, சாதமாக எப்படி சாப்பிட்டாலும்   மொத்தத்தில்  எந்த ரூபத்திலும் கத்திரிக்காய் ருசிக்கிறதே. .   இதை தான்  ஸம்ஸ்க்ரிதத் தில்   ”லோகோ  பின்ன ருசி”  என்பது.   உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான  அணுகுமுறை”
”எனக்கு  ஒரு கிருஷ்ணன் கதை சொல்லுங்கோ.  நீங்க  நிறைய  எழுதி தள்ளறேங்க. படிக்க முடியலை சார். ”
”நான் என்ன பண்ணுவேன் முதலியார். ஏதோ மனசிலே  ஊற்று மாதிரி  பொங்கறது. முடிந்ததை யெல்லாம்   காற்றுள்ள போதே  தூற்றிக்கொள்னு எழுதறேன்..அவ்வளவு தான்.  அப்புறம்  எழுத முடியுமோ முடியாதோ. 84+ லே முடிஞ்சபோதே  எழுதி வச்சுட்டா,   நான் முடிஞ்சப்புறம், என்னிக்காவது யாராவது   எப்போ  வேணுமின்னாலும் படிச்சுக்கட்டுமே. படிக்காட்டாலும் சந்தோஷம். எனக்கு எழுதின சந்தோஷம் நிம்மதி இருக்கே  அது போதுமே . .  நான் காசு, பெருமைக்காக  எழுதறவன் இல்லை..  யாராவது நன்கொடை  கொடுத்தா  அதை  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் பேரிலே  பேங்க் மூலமா வாங்கி புஸ்தகம் போடறோம், விலை கிடையாது… அதுக்காக சும்மா  படிக்காம வாங்கி தூரப்போட  தரமாட்டேன்.”
”தெரியும் சிவன் சார், உங்களைப்பத்தி.  சரி  ஒரு  கிருஷ்ணன் கதை இப்போ சொல்லுங்கோ ”
”ஒரு டம்ளர் சூடாக வெந்நீர் சாப்பிட்டுவிட்டு  சொல்கிறேன்.”
++”நாரதரும்  கிருஷ்ணனும்  ரொம்ப நெருங்கிய  குரு சிஷ்யன் அல்லவா?.  அடிக்கடி ஏதாவது  நாரதருக்கு சந்தேகம் வரும்.  கிருஷ்ணன்  நிவர்த்தி பண்ணுவார்.  ஒருநாள்  காலை ரெண்டு பேரும்  வழக்கம்  போல வாக்கிங் போகும்போது  திடீரென்று நாரதருக்கு  ஒரு  சந்தேகம்.
“கிருஷ்ணா, மாயை  மாயை  என்று  நொடிக்கொரு தரம் சொல்கிறோம்.  உண்மையில்  மாயை என்றால்  என்ன   என்று  கொஞ்சம்  புரியும் படியாக  சொல்லேன்”
“சரி நாரதா, யோசித்து  பார்க்கிறேன், எப்படி அதை   உனக்கு புரிய வைக்கிறது என்று.   நாம்  ஏதோ பேசிக்கொண்டே வந்தோம்   நீ குறுக்கே இந்த சந்தேகத்தைக் கேட்டு  எனது சிந்தனைத்  தொடரை அறுத்து விட்டாயே நாரதா!,. அதோ  தெரிகிறதே  அந்த  மலை வரை  நடந்து போகலாம் வா ”  என்றான் கிருஷ்ணன்
 இருவரும்  ஏதோ  பேசிக் கொண்டே  நடந்தனர்.  மலையடிவாரத்தில்  கிருஷ்ணன் ஒரு மரத்தடியில் நின்றான்.  எதிரே ஒரு  கிராமம். சில வீடுகள் தூரத்தில் தெரிந்தன.
”சற்று  நாம்  இங்கே உட்காருவோம்.  அதற்குள்   நாரதா, எனக்கு  நீ ஒரு  உதவி  செய்கிறாயா?”
“சொல்லுங்கள், பிரபு!”
“ரொம்ப  தாகமாக  இருக்கிறது.  ஒரு  செம்பு  ஜலம்  அதோ அந்த வீடுகளில் ஏதாவது ஒன்றிலிருந்து சீக்கிரம்  வாங்கிக்  கொண்டு  வாயேன்”.
” இதோ, நொடியில்   வருகிறேன்”   நாரதன் ஓடிச்சென்று  ஒரு  குடிசை  வாசலில்  நின்றான். உள்ளேயிருந்து  ஒரு  அழகிய  பெண்  வெளியே வந்தாள் ”யார்  நீங்கள்  என்ன வேண்டும்?” ஒரு  செம்பு நீர் கொடு அம்மா”அப்புறம் நடந்ததை ஒரே  வாக்கியத்தில் சொன்னால்  கதை நீளம் குறையும்.நாரதன்  அவள் அழகில் மயங்கி  அவள்  குடும்ப விஷயம்  எல்லாம் கேட்டு அவள் மேல் காதல் கொண்டு அவளை  கல்யாணம் செய்து கொள்ள விரும்பி, அவள்  என் அப்பாவிடம் கேள் என சொல்ல,  அவன்   மெதுவாக அவரை அணுகி அவர் கடைசியில்  அனுமதி வழங்கி, இருவருக்கும் மணமாகி,  இரண்டு குழந்தைகள்  பிறந்து  ஒருநாள்  அந்த  கிராமத்தில் வெள்ளம் வந்து  அனைவரும்  மூழ்கிவிட  நாரதன்  தன்  மனைவியை  தன்  இடுப்போடு  பிணைத்துக் கொண்டு  தலையில்  ஒரு  சிறு குழந்தையை சுமந்து  மற்றொரு கையில் பெரிய  குழந்தையை  பிடித்தவாறு  தண்ணீரில்  ஒருவாறு தத்தளித்து நீந்தி   கரை சேர  முயற்சிக்கும் போது  வெள்ளத்தில்  தலை மேல் இருந்த  குழந்தை  அடித்துப்  போகப் பட்டு, அதை பிடிக்கப் போய் வலது கையை  சுதாரிக்கும்போது  அந்த  கையில்  பிடித்திருந்த  பெரிய  குழந்தையை  நழுவ விட்டு அதுவும்   நீரில்  அடித்துக் கொண்டு போகப்பட்ட பின் , ”ஐயோ என் குழந்தைகள், குழந்தைகள்”…. என்று   அலறி,  குமுறி,  இடுப்பில் பிணைக்கப்பட்ட   மனைவியையும்  வெள்ளத்தில்  கோட்டை  விட்டு   நிறைய  தண்ணீர்  குடித்து  மயங்கி  கரையில்  ஒருவாறு  தள்ளப்பட்டு  விழுந்தான்.   சினிமா எடுப்பவர்கள் ஒன் லைன்  என்பார்களே  அதுபோல் ஒரு வரியில் நாரதன் கதை சொல்லிவிட்டேன்.  அப்புறம்…….
 மெதுவாக  சுய நினைவு  வந்து விழித்து பார்த்த  நாரதன்  எதிரே  கிருஷ்ணன்  நின்று கொண்டிருந்தான்.
 “ஐயோ,  இது என்ன  கொடுமை  பதினைந்து வருஷங்கள் ஆகி விட்டனவே”  என்று  நாரதன்  வருந்த  கிருஷ்ணன்  சிரித்தான்
“என்ன,   நாரதா!   நொடியில்  தண்ணீர்  கொண்டு வரேன்  என்று சொல்லி  அரைமணி  நேரமாக   காத்திருக்க  வைத்தாய்  என்னை!”   என்ற கிருஷ்ணனிடம்
 “என்ன  அரை மணி நேரமா   பதினைந்து வருஷம்  அல்லவோ  ஆனது….. காதல், கல்யாணம், குழந்தைகள்,  மரணம், எல்லாம் இழப்பு…. மயக்கம்….. ஐயோ……”
” எதுவுமே நடக்கவில்லையே  நாரதா,   நிஜத்தைப்  போல  மனதில் தோன்றுவது தான் மாயை.. இப்போது  இந்த அனுபவம் உனக்கு  மாயையைப் புரிய வைக்கிறதா?  என்றான்  கிருஷ்ணன்  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *