உச்சினி மாகாளி கதை – நங்கநல்லூர் J K SIVAN
கோபம், சாந்தம், சந்தோஷம், வருத்தம், சோகம். போல பல உணர்ச்சிகள் நம் வாழ்க்கையின் அன்றாட வெளிப்பாடுகள். இதில் கோபம் ஒன்றை நம்மையும் மற்றவர்களையும் பயப்பட வைக்கும். மனிதர்களை போலவே கோபமான கடவுள்கள் நம்மிடம் சிலர் இருக்கிறார்கள். அநேகமாக வீட்டில் அவர்கள் படத்தையோ சிலையையோ வைத்து பூஜை செய்யும் வழக்கம் இல்லை. ஆண் கோபம் பெண்கோபம் இந்த இரண்டில் பெண் கோபம் பொல்லாதது. லேசில் தணியாது. சக்தி என்றே பெண்களுக்கு பெயர் ஆச்சே. எரிமலை போல் உள்ளேயே பதுங்கி இருக்கும். அதையும் மீறி ‘எப்போதுமே’ ‘எதற்குமே’ கோபப்படும் பெண்களும் உண்டு. யாருமே கிட்டே நெருங்க பயப்படுவார்கள். அது சரி, கோபத்துக்கு காரணம் ஏதாவது இல்லாமல் இருக்குமா? அநீதி,அநியாயம் அக்கிரமம் எல்லாம் நடக்கும்போது பொங்கி எழும் பெண்கள் போற்றப்படுகிறார்கள் . வீரமானவர்களிடம் கோபம் இருந்தால் இன்னும் விசேஷம். போன பெண் தெய்வத்துக்கு காளி , பத்ரகாளி அம்மன் என்றெல்லாம் பெயர்.
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் உயிர்ச்சேதம். . தேவர்கள் ஏராளமாக இறந்தபோது இந்திரன் கவலை கொண்டு விஷ்ணுவிடம் சென்று தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினான். அப்போது விஷ்ணு சொன்னார். பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது.அதைத் தேவர்களுக்குக் கொடு” என்று அறிவுரை வழங்கினார்.
இந்த தகவல் அசுரர்கள் காதுக்கும் எட்டி தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும் என்றதால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பலவகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு, வஜ்ராயுதம் , கற்பக விருட்சம் என்று பல தூய பொருட்கள். கடைசியில் ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் எரிக்கும் தன்மை கொண்டது. ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது பூமியில் விழக்கூடாதே என எல்லோரும் பயந்திட, பரம சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கி விட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருள்படுத்தவில்லை. பார்வதி கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து உச்சி மாகாளி பிறந்தாள் என்று ஒரு கதை.
சிவன் உச்சித் தலையில் பிறந்த காளியை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளைத் தன் மகளாகப் பாவித்தாள். அவளுக்கு வாந்திபேதி, பெரியம்மை, சின்னம்மை, வலிப்பு ஆகிய வியாதிகளை உண்டாக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். உன்னை வணங்குபவர்களுக்கு இந்தமாதிரி வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் என வரமும் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம், கறுப்பன், மோகினி ஆகிய பிசாசுக்கூட்டங்களையும் படைத்தாள். கிராமங்களில் வியாதி மக்களுக்கும் மாடு ஆடுகளுக்கும் வராமல் இருக்க ஆங்காங்கே அம்மன் கோவில்கள் உண்டு. இன்னும் எத்தனையோ பேருக்கு குலதெய்வம் அவர்கள்.
உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் பெற்றாள் . கயிலையை விட்டுப் புறப்பட்டவள் பூமியில் விக்கிரமாதித்தனின் நாடான உஜ்ஜையினுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள். இப்படி இருக்கும்போது ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் அவன் மந்திரி பட்டியும் அங்கே விலங்குகளை வேட்டையாடினர். களைத்துப் போய் விக்கிரமாதித்தன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான். மந்திரி பட்டியிடம் ”பட்டி, எனக்கு ரொம்ப தாகமாக இருக்கிறது. எப்படியாவது கொஞ்சம் தண்ணீர் குடிக்கக் கொண்டு வா” பட்டி காட்டுக்குள் பல இடங்களில் அலைந்து ஒரு சுனையைக் கண்டான்.
இதென்ன ஆச்சர்யம் இந்த பகுதி முழுதும் தெய்வீக மணம் கமழுகிறதே என்று வியந்தான். சுனைக்கு சற்று பக்கத்தில் உச்சினிமாகாளி புதைந்திருந்தது பட்டிக்குத் தெரியாதே. பட்டி சுனையிலிருந்து தண்ணீரைக் கொண்டுபோய் ராஜா விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தனுக்கு ஒரு புத்துணர்ச்சி. உறஙகினான்.தூக்கத்தில் ஒரு கனவு கண்டான். கனவில் உச்சினிமாகாளி வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் மறைந்திருப்பதை உணர்த்தி எனக்கு அங்கே ஒரு கோவில் கட்டு” என்றாள். அதனால் அவள் உச்சையினி மகாகாளி என்று பெயர் பெற்று உச்சினி மாகாளி ஆகிவிட்டாள் .
விக்ரமாதித்தன் விழித்தான். தான் கண்ட கனவைப் பற்றி பட்டியிடம் கூறினான். ”பட்டி, வா, எனக்கு அந்த சுனையைக் காட்டு” என்றான். நீ சொன்ன தெய்வீக மணத்துக்குக் காரணம் காளி தான். இங்கேயே அவளுக்கு ஒரு கோவில் கட்டுவோம் என்று உச்சினி மாகாளி சிலையை பிரதிஷ்டை செய்து பெரிய கோவில் கட்டினான். ரஹஸ்யமாக தங்கக்கட்டிகள் வைர வைடூர்யங்களை கோவிலருகே புதைத்து வைத்தான். காலப்போக்கில் அந்த காளி கோவில் சிதிலமாகியது.
ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்தியிலிருந்து நம்பியான் என்ற ஒரு பிராமணன் உஜ்ஜையினுக்கு வந்தான். அவன் அயோத்திக் கோவிலில் பூசை செய்பவன். அவன் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். ‘என் கோவிலுக்கு வா. எனக்கு பூஜை பண்ணு என்று அழைத்ததால் அங்கே வந்தான். சிதிலமான கோவில் புனருத்தாரணம் பண்ணப்பட்டது.
அயோத்தி நம்பியானுக்கு ஏழு பெண் குழந்தைகள். அவர்களுக்குக் கல்யாணம் பண்ண அந்த ஏழை ப்ராமணனிடம் காசு இல்லையே. தினமும் காளிக்கு பூசைபண்ணும்போது உச்சினி மாகாளியிடம் ”அம்மா என் பெண்களுக்கு கல்யாணம் பண்ண உதவி செய்” என உருகி வேண்டிக்கொள்வான். ஒருநாள் காளி அவன் கனவில் தோன்றினாள். ஒரு இடத்தை அடையாளம் காட்டி அங்கே இருக்கும் தங்கக் கட்டியை எடுத்துக்கொண்டு உன் பெண்களுக்கு கல்யாணம் பண்ணு” என்று சொன்னாள் . பொழுது விடிந்ததும் நம்பியான் ஓடினான். கணவாயில் அடையாளம் சொன்ன இடத்தில் தோண்டினான். ன். தங்கக்கட்டி கிடைத்தது. பக்கத்து நகரத்துக்குப் போய் தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு போகலாம் என்று எண்ணம். எவ்வளவோ அலைந்தும் அவ்வளவு பெரிய தங்கக்கட்டியை வாங்க ஆளில்லை. யாரிடம் அவ்வளவு பணமும் இல்லை. இரவில் நடந்தான்.
அது வெள்ளைக்காரர்கள் காலம். வழியே இரவில் ஒரு வெள்ளைக்கார அதிகாரி குதிரையில் வந்தவ நம்பியானை நிறுத்தி பையை சோதனை போட்டான். பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். ”எங்கே திருடினாய் இதை சொல் ”என்று அடித்து மிரட்டினான். நம்பியான் அழுதபடி நடந்ததைக் கூறினான். வெள்ளைக்காரன் விடுவானா? நம்பியானை கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போனான்.தோண்டினான். தோண்ட தோண்ட விக்ரமாதித்தன் புதைத்து வைத்த ஏராளமான தங்கம் வந்தது. வெள்ளைக்காரன் வீரர்கள் எங்கும் தோண்டினார்கள். காளி பார்த்துக்கொண்டா இருப்பாள்? பேய்ப்படைகளை வெள்ளைக்காரர்களின் மேல் ஏவினாள். பேய்ப்படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி வெள்ளை வீரர்களை வளைத்தன. அவை மாயமாய் நின்றுகொண்டு அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. வெள்ளை அதிகாரியும் படைகளும் அஞ்சி அலறி கோவிலை விட்டு ஓடினார்கள். வெளியே சொல்லமுடியாதபடி அனைவருமே ஊமையும், குருடர்களுமானார்கள்.மற்றவர்கள் சித்த ஸ்வாதீனமற்ற பைத்யங்களாயினர்.
நம்பியான் காளியை வணங்கினான். எப்படியோ தங்கக்கட்டி கைமாறி பணம் வந்தது. பெண்களுக்கு கல்யாணம் பண்ணினான்.சுபம் சுபம் சுபம்.