திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரர்
முதல் அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம்
வரிகள் 1 முதல் 40 வரை.
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன் 1-6
உலகமெலாம் மயங்கி வியக்கும் பொன்னொளி மேனியன், எங்கோ இருந்தும் எங்கும் ஒளிவீசும் கடலில் இருந்து உதிக்கும் சூரியன் போன்ற, சர்வ சக்தி யுடையவன், அழகிய குமரன், பலமிக்க பன்னிரு கையன். எதிரிகள் அவனைக் கண்டோ அவன் பெயர் கேட்டாலோ, அஞ்சி கதிகலங்கி நிலைகுலைந்து ஓடுவார்கள். அண்டிய அடியார்களை ஆதரித்துக் காப்பவன், தேவசேனாவின் பதி ஆறுமுகன்.
கடப்ப மாலை புரளும் மார்பினன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்
துருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் 7-12
கடம்ப மலர் கார் காலத்தில் மலரும். உருளையாக இருக்கும். தேர் சக்கரம் மாதிரி இருக்கும் என்கிறார் நக்கீரர். முருகன் தரிக்கும் மாலை. போருக்கு போகும்போது அணியும் மாலை தார் மாலை. தார் வேந்தன் என்று தமிழில்படிப்போம். வீரமாக ஒரு ராஜா அணிந்து போருக்குச் செல்வது. கருப்பான மேகங்கள் நிறைய மழை நீரை தன்னுள் கொண்டு அசையமுடியாமல் மெதுவாக வானில் அசைகிறது. பளிச் பளிச்சென்று மின்னல். சூரியனும் சந்திரனும் இருளை போஃகுவது போல் ஒளி வீசுகிறது. கார் மேகம் எந்நேரமும் பிரசவித்து மழை பெய்யலாம். அப்படிப்பட்ட மழை பெய்து துளிர்த்த கடம்பமலரை சூட்டிக் கொண்டிருப்பவன் முருகன்.
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடிக்
கணைக்கால், வாங்கிய நுசுப்பின், பணைத்தோள்,
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில், 15
பல்காசு நிரைத்த சில் காழ் அல்குல்,
கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழைச்,
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு;
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்துத்
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து 25
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ, கருந்தகட்டு
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டிக்
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇத், துணைத்தக 30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை,
தேம் கமழ் மருது இணர் கடுப்பக் கோங்கின்
குவி முகிழ் இளமுலைக் கொட்டி, விரிமலர் 35
வேங்கை நுண் தாது அப்பிக் காண்வர,
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறற் கொடி
வாழிய பெரிது என்று ஏத்தி, பலர் உடன்,
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடிச் 40
இனி வரும் வர்ணனை 40 வரிகள் பூரா அந்த கால சூர பெண்களின் அழகையும் , அவர்களது ஆடை, அணிகலன்களையும் பற்றி தான். நக்கீரர் ரொம்பவே ரசனை உள்ளவர் என்று தெரிகிறது.
பெரிய உயரமாக வளர்ந்த மூங்கில் மரங்கள் காடுகளாக நிரம்பிய மலையில், சலங்கை சூழ்ந்த ஒளியுடைய சிவந்த அடியினையும் திரண்ட காலினையும், வளைந்த இடையினையும், மூங்கில் போன்ற தோளினையும், இந்திரகோபம் போன்ற, நிறம் சேர்க்காது இயல்பாகவே சிவந்த நிறமுடைய பூந்தொழிலையுடைய ஆடையினையும், பலமணிகள் கோத்த வடமாகிய மேகலையை அணிந்த, கையால் இயற்றப்படாத அழகை இயல்பாகவே பெற்ற அழகினையும், நாவலோடு பெயர் பெற்ற பொன்னால் செய்யப்பட ஒளிவீசும் அணிகலன்களையும், மிகத் தொலைவு இடத்திலிருந்தும் விளங்கும் சிறந்த அழகுடைய வாளிப்பான மேனியை உடைய சூரர் மகளிர், தோழியர்கள் நன்றாக சோதித்து, இணைத்த, வாசனை தைலங்கள், நெய்யணிந்த முடியில், சிவந்த காம்பினையும் சிறிய இதழ்களையுமுடைய வெட்சி மலர்களை இடையிடையே இட்டு, பச்சை பசேல் என்று இருக்கும் தண்டினையுடைய குவளை மலரின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு, சீதேவி என்னும் அணிகலனை வலம்புரி வடிவில் செய்யப்பட்ட கொண்டையில் வைத்து, பொட்டு வைத்த மணமுடைய அழகான நெற்றியில் சுறாவின் வாய்போன்று செய்த அணிகலனை கீழே விழாமல் சரியாக பொருத்தி வைத்து, முற்றிலும் முடித்த அழகிய கருமையான கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் சொருகி, கரிய பூங்கொத்துக்களை அதன் மேல் இட்டு, கிளையினின்றும் தோன்றி அழகாக வளர்ந்த நீரின் கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதல் செய்த மாலையை வளைய வைத்து, தம்மில் ஒத்த வளவிய காதில் இட்டு நிறைந்த பிண்டியின் ஒளியுடைய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வைரத்தையுடைய (வலுவான உட்பகுதியுடைய) சந்தனத்தைத் தேய்த்த பொலிவினையுடைய நிறத்தையுடையதாகிய குழம்பை மணம் வீசுகின்ற மருதப் பூவை அப்பினது போல கோங்கின் குவிந்த அரும்பை ஒத்த இள மார்பகங்களில் அப்பி, விரிந்த வேங்கை மலர்களின் நுண்ணிய தாதினையும் அப்பி, மேலும் அழகு உண்டாக, விளாம்பழ மரத்தின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்து, கோழியின் உருவத்தைத் தன்னிடத்தில் கொண்ட, பகைவரை வீழ்த்திய வெற்றியையுடைய கொடியை வாழ்த்தி, பலரும் ஒன்றுகூடி வளமை விளங்குகின்ற மலை எல்லாம் எதிரொலிக்குமாறு பாடிஆடுகின்ற தெய்வ மகளிர் உலவும் சோலையையுடைய”என்று திருப்பரங்குன்ற அழகை வர்ணிக்கிறார் நக்கீரர். கடபுடா தமிழ். லேசில் புரியாது. கடைச்சங்க காலத்தில் இப்படித்தான் தமிழ் பேசுவார்கள். தொடரும்