THIRUMURUGAATRUPADAI VERSES 41-60 J.K. SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN
நக்கீரர்  

முதல்  அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம்
வரிகள் 41  முதல் 60  வரை.  

காந்தள் கண்ணி சூடிய சென்னியன்
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து,
சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்; (42 – 44)

பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்குச்   45
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்; (45 – 46)
பொருளுரை:  பாறை நிலம் முதிர்ந்த குளிர்ந்த கடல் கலங்கும்படி உள்ளே புகுந்து, சூரனைக் கொன்றான், அவனுடைய ஒளிரும் இலையுடைய நெடிய வேலால்.

உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்
சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்,
கழல்கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு   50

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக் கையின் ஏந்தி, வெருவர
வென்று அடு விறற்களம் பாடித் தோள் பெயரா   55
நிணம் தின் வாயள் துணங்கை தூங்கப்; (47 – 56)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை,
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி,
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து   60
எய்யா நல் இசை செவ்வேற் சேஎய்; (57 – 61)

செங்காந்தள் அல்லது காந்தள் மலர்  ஒரு முழம்  கொடுப்பா  என்றால்  ”யோவ்  பூ  வேணும்னா  ஒழுங்கா பேசு, கெட்டவார்த்தை ஏன் பேசறே? என்று சண்டைக்கு வரும்  காலம் நம்முடையது.  இதற்கு  கார்த்திகைப்பூ என்று பெயர்.  இது ஆப்ரிக்கா, ஆசியா,தென்கிழக்கு ஆசியா,மலேசியாவின் சில பகுதிகளில் வளர்வது.   சிகப்பாக  நெருப்புப்  பூ போல் விரல்கள் மாதிரி  இருக்கும். விஷப்பூ  என்பார்கள். அதனால் இதை  வளர்ப்பதில்லை. நாட்டு  மருத்துவர்கள் இதில் இருந்து சில மாத்திரை செய்வார்கள். பெரிய  பெரிய  பூக்கள். ஏழு நாளானாலும்  வாடாது.
முருகனுக்கு  உகந்த மலர். இதை மாலையாக  சூடுபவன் ஆறுமுகன். ஜிலுஜிலு என்று குளுமையானது. வண்டுகள் மொய்த்து  தேன்  தேடும்.  மலைப்பகுதிகளில்   இதை ஏராளமாக  காணலாம்.  அடர்த்தி யாக  இருக்கும் என்பதால் குரங்குகளுக்கு கூட  வெளியே வர வழி தேட சிரமப்படும்  என்கிறார்  நக்கீரர்.
முருகன்  வேலாயுதத்தால் சூரனை சம்ஹாரம் பண்ணினான்.  பொன்  போல் தகதக வென  ஷண்முகனின் சக்தி வேல் கூர்மையாக  ஒளிரும் அல்லவா. சமுத்திரத்தில் பாய்ந்து சென்று  அப்படியே  பாறைகள்,மலைகளை  கலக்கி விடும்.
பிசாசுகளில் பெண் பிசாசுகள் சில  பெரிய,  பச்சைக் கண்களோடு,   கோரமான,  கூரிய  நீளமான  பற்களை உடையவை.  காய்ந்த  காற்றில் ஆடும்  விரித்த  கூந்தல்களை உடையவை.  பாம்புகளை  உடலில் அணிந்தவை.  ஆந்தைகள் அவற்றை சுற்றி ஆடும். இப் பேய்கள்  காதில் குண்டலம் அசைந்து ஓசை செய்ய  நடமாடும்.  அவற்றின் ஆகாரம்  பிணங்கள். சுடுகாட்டில்  எரியும், புதைக்கப்பட்ட பிணங்களை எடுத்து  கூரான  நகங்களால்  கிழித்து தின்பவை. அவற்றின் ஆட்டத்துக்கு நக்கீரர்  காலத்தில்  துணங்கை ஆட்டம் என்று பெயர்.
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து . . . .60
எய்யா நல் இசை செவ்வேற் சேஎய் (57 – 61)

முருகனை எதுவும் அணுகமுடியாது.  அஞ்சி ஓடிவிடும்.   அவனது வேலாயுதம்  அவனை விட  பெருமை வாய்ந்தது.  சக்தி வாய்ந்தது.  மாமரத்தை ஒரே  வீச்சில் ரெண்டாக பிளந்தது. ஒளிந்திருந்த அசுரர்கள் ரெண்டாக பிளவு பட்டு மாண்டார்கள். சூரன் இப்படி  மாய மாமரமாக  நின்றபோது பிளவு பட்டான்.  ஒரு பாதி சேவலாகவும்,  இன்னொரு பாதி மயிலாகவும்  மாறியது.   முருகன் சேவல்கொடியோனாக, மயில்வாகனனாக  சூரனை ஆட்கொண்டான்.
தொடரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *