திருமுருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரர்
அந்த புலவர் பெயர் கீரன். நல்லதே நினைப்பவர், சொல்பவர், செய்பவர் நேர்மையானவர் என்பதால் அவர் பெயர் நக்கீரர் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டு நாம் புத்தகத்தில் அவரை அப்படியே அறிந்து கொள்கிறோம்.அவர் சங்க கால புலவர், நெடுநல்வாடை , திருமுருகாற்றுப் படை இயற்றியவர்.
ஆற்றுப்படை என்பது ஒரு எங்கோ ஒரு ஊரில் உள்ள தனவந்தன் பிரபு, கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை தனக்கு எதிரே வந்து கொண்டி ருக்கும் ஏழை வறியோர்க்குச் சொல்லி
”நீயும் அவரிடம் போ, உனக்கும் ஏதாவது செல்வம், தானம்,தனம் , பொருளுதவி கொடுப்பார்” என்று தான் பெற்றவாறு மற்றவரும் பெறுமாறு வழி காட்டுதல்.
திருமுருகாற்றுப்படையில் அந்த தனவந்தர், பிரபு, செல்வந்தர் முருகன். நீயும் முருகனைப் பாடு, வழிபடு,உனக்கும் அருள்வான் என்று நம்மை முருகனை நினைக்க வைக்கிறார் நக்கீரர். ஆஹா எவ்வளவு பெரிய தாராளமான குணம். அனுபவ பூர்வமான அறிவுரை. கந்தசஷ்டி, சூரஸம்ஹார சமயத்தில் உங்களுக்கு நக்கீரரின் திருமுருகாற்றுப்படையை அளிக்க வேண்டாமா?
திருமுருகாற்றுப்படையில் முருகன் குடிகொண்ட ஆறுபடை வீடுகளைபற்றியும் நக்கீரர் சொல்கிறார். முதலில் திருப்பரங் குன்றத்தில் ஆறுமுகன் தேவானை கணவன், சூரனை ஸம்ஹரித்தவன் என்று சொல்கி றார். திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூ ரில் ஷண்முகனின் ஆறு முகங்கள் பன்னிரு கரங்கள், பற்றி மகிழ்ந்து பாடுகிறார். திருவாவினன்குடி எனும் பழனி யில் சிவபெருமான், திருமால், இந்திரன் ஆகிய மூவருமே அறுமுகனின் பின் செல்வதாக பாடுகிறார்.
திருவேரகம் எனப்படும் சுவாமிமலையில் பூணூல் அணிந்த அந்தணர்கள் முருகனை வணங்குவதைக் குறிப்பிடுகிறார். . குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணியில் வேலனின் வெறியாட்டம், கானவர் குரவைக் கூத்து என அக்காலத்திய நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். மொத்தத்தில் முருகனை அடைந்தால் அவனருளைப் பெறுவாய் என நமக்கு அறிவுறுத் துகிறார் நக்கீரர்.
பத்துப்பாட்டு எனப்படும் சங்க கால நூல்களில் காணப்படுவது திருமுருகாற்றுப்படை. இது ஆறு பாகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஆறு முகனின் ஒரு படைவீடு ஸ்தலம். . மொத்தம் 317 வரிகள். மிகக் கடுமையான சங்கத்தமிழ். அர்த்தம் புரிவது சாதாரணர்களுக்கு கடினம்.
திருப்பரங்குன்றத்திலிருந்து துவங்கும் திரு முருகாற்றுப்படையை கொஞ்சம் கொஞ்சமாக ரசிப்போம் ருசிப்போம்.
தொடரும்