THATHASTHU – J K SIVAN

”ததாஸ்து”     அப்படியே ஆகட்டும்.  —    நங்கநல்லூர்   J K  SIVAN
”வார்த்தைகள்  பலித்து விடும்”  என்று  பெரியவர்கள்  வீட்டில்  சொல்லி  கேட்டதுண்டா?  நான்  நிறைய  கேட்டிருக்கிறேன்.அப்படி  என்றால்  என்ன அர்த்தம்?  எதற்கு  நாம்  இதற்கு பயப்படவேண்டும்?
சில  விஷயங்களைப் பற்றி  நாம்  அதிகம்  யோசிப்பதோ   சிந்திப்பதோ,தெரிந்து கொள்ள வேண்டும்  என்று நினைப்பதோ  இல்லை. இது  அப்படிப்பட்ட   ஒரு விஷயம்,  ”ததாஸ்து.”என்கிற  வார்த்தை.   ”அப்படியே  ஆகட்டும்”, ”அவ்வாறே  ஆகுக”  என்று  அர்த்தம் அதற்கு.   வீட்டில்  எந்த சுப காரியம்  நடந்தாலும்  வீட்டில், விழாக்களில்  ஆசீர்வாத மந்த்ரங்கள் , பகவானிடம்  கோரிக்கைகள், வேண்டுகோள்கள்  மந்த்ரங்கள்  உச்சரிக்கும்போது  மற்ற சில  பிராமணர்கள், பெரியவர்கள், வாத்தியார்கள்  அடிக்கடி  அந்தந்த  மந்த்ரங்கள் நாம்  உச்சரித்த பிறகு   ”ததாஸ்து” ததாஸ்து” என்று சொல்லி அக்ஷதை நம் தலையில்   தெளிப்பார்கள்.   ‘ததாஸ்து’ வைப்  பற்றி சில விவரங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
நமது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்  அமங்கல சொற்களாக இருக்கக்கூடாது, யாருக்கும்  சாபம் இடக்கூடாது, நல்ல பயன் தரும் சொற்களையே சொல்ல வேண்டும்.  ஏனென்றால்  எங்கும்  தேவதைகள்  நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மிடையே உலவுகிறார்கள். , தேவதைகளின் அதிர்வலைகள் எங்கும் நிறைந்திருக்கிறது ஆகவே தான் நம் சொற் களை அப்படியே நடக்கட்டும் என்று அவர்கள் ஆசிர்வதிப்பார்கள்.  எப்போதும் அவர்கள்  நாம் விரும்பியது போலவே  நடக்கட்டும்,  நம் வார்த்தை  பலிக்கட்டும், வேண்டுவது கிடைக்கட்டும் என்று வாழ்த்திக்  கொண்டே இருப்பார்கள். அவர்கள்  சொல்லும் வார்த்தை தான்  ”ததாஸ்து”
ஆகவே நாம்  விரும்பியது போலவே  ஆகிவிடும், நடந்து விடும். துர்  வார்த்தைகள், அமங்கல வார்த்தைகளை   நாம் உச்சரித்தால் அதுபோலவே  நடந்துவிடும். சொன்னால் பலித்துவிடும். மனிதன்  வாயிலிருந்து புறப்படும்  வார்த்தைகள்  நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும். வெல்லும், கொல்லும் .  வாயிலே சனி  என்று அதனால் தான் சொல்கிறோம்.
 நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால்,  இப்படிப்பட்ட  அபசகுன, அமங்கல வார்த்தைகளை நாம்  உச்சரிக்கவே கூடாது. மனதில் நினைக்கவே கூடாது. மனதில் நினைப்பது தான் வார்த்தையாக வெளியே  வரும்.  அதற்கு தான் எப்போதும் பகவன் நாமாவை விடாமல்  சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.  உச்சரிக்க வேண்டும் .அவன் அருள்  பெற முடியும் என்பதற்காகத்தான்.
நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம் நல்லதே சொல்வோம்  என்று அடிக்கடி பெரியவர்கள் சொல்வது இதற்காகத்தான்.  இதன் மூலம்  மனதில் மட்டுமல்ல நம் வீட்டிலும், நம்மைச் சுற்றிலும்  எங்கும்  சுபிக்ஷம், சந்தோஷம் என்றும்  குடிகொள்ளும்.
சதமானம்  பவதி … என்று நூறாண்டு வாழ்க  என்று வாழ்த்தும் போது ”ததாஸ்து” சொல்வதால் அப்படியே நடக்கும் என்று நமது நம்பிக்கை. நம்பிக்கை வீண் போனதில்லை.
 ”புத்ரபிராப்தி ரஸ்து , விவாஹ பிராப்தி ரஸ்து, ஆயுராரோக்ய அபிவிருத்தி..மங்களானி  பவந்து”  என்று எல்லாம்   விவாகம் நடக்கவேண்டும், குழந்தை பிறக்கவேண்டும் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழவேண்டும்  என்ற  பிரார்த்தனைக்கு  ”ததாஸ்து” சொன்னால் அப்படியே  நடக்கட்டும்  என்று ஆசீர்வாதம் அளிப்பது வழக்கம். .
நம்மைச் சுற்றி அஷ்ட தேவதைகள் இருக்கிறார்கள் என்கிறது சாஸ்திரம். அதேபோல் முனிவர்களும் யோகிகளும் குறிப்பாக நம்முடைய முன்னோர்களும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள்  அனைவரும் நம்  வார்த்தைகளை  கேட்டுக்கொண்டே  இருப்பதால்   அதற்கெல்லாம்  ‘ததாஸ்து ததாஸ்து’ என்று சொல்கிறார்கள்.  நாம் சொல்லும் நல்ல வார்த்தைக்கும்  சாபத்துக்கும்   ‘ததாஸ்து’  தான். ”என்ன  ராமண்ணா, சௌக்யமா””எங்கத்த சௌக்கியம்? விடாம இருமல், ஜலதோஷம், முதுகுவலி, மூட்டு வலி,  தலை சுத்தல் , நிக்கவே மாட்டேன்  என்கிறது. இந்த  வியாதி பிடுங்கல்  என்னை விட்டு  போகும்னு எனக்கு  தோணலை.  எந்த டாக்டராலும் குணப்படுத்தவே  முடியாது.என் முடிவே  இதாலே  தான் ”.  இப்படி   தானே வாங்கிக் கட்டிக்கொள்ளும்  ராமண்ணா அவ்வளவு தான். ராமண்ணா  எதிர்பார்த்தது நடந்தே தீரும்.  ஆகவே  தான்  இங்கிலீஷிலும் தமிழிலும்  அடிக்கடி  நாம் பாசிட்டிவ்  எண்ணங்கள்  மனதை நிரப்பவேண்டும் என்கிறோம்.. 

ராமாயணத்தில் இப்படித்தான்  ராவணனும் கும்பகர்ணனும்  பல்லாயிரம் வருஷங்கள் கடும் தவம் இருந்து கேட்ட வரத்தை   பெற்றார்கள். ராவணன் எந்த தேவனாலும்   ராக்ஷஸனாலும்,  மும்மூர்த்திகளாலும், தேவர்களாலும்  மிருகத்தாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வேண்டியவன் ‘மனிதனால் ‘  என்ற வார்த்தையை சொல்லவில்லை,  ”ததாஸ்து” என்று வரம் அருளினார் ப்ரம்மா.  ஆகவே  தான் விஷ்ணு மனித  குலத்தில்  ராமனாக  பிறந்து ராவணனை முடித்தார்.
 கும்பகர்ணன்   வரம் கேட்கும்போது  ”தேவர்களே  இருக்கக்கூடாது’  ”நிர்தேவஸ்ய ” என்று  கேட்பதற்கு பதிலாக ,வாய் குழறி  தவறுதலாக  ”நித்ரேவஸ்ய ” என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி  கேட்டுவிட்டான்.  அதனால் வாழ்க்கை முழுக்க நித்திரையில் கழித்து கடைசியில் மீளாத நித்திரையில் மறைந்ததும்  ” ததாஸ்து” வால்  தான்.
நம்முடைய  உடம்பு  ஒரு கோவில்.  நமது மனம் இறைவன் வாழும் இல்லம். கோவிலுக்கு  செல்லும் போது எப்படி குளித்து விட்டு, தோய்த்து உலர்ந்த  சுத்தமான வஸ்திரம் உடுத்திக் கொண்டு, உடலில்  விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து இறைவனை வணங்க செல்கிறோமோ அப்படி மனத்திலும் தூய்மையோடு, இருக்க  நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் தான்  ”ததாஸ்து”  வை நல்லதாக நமக்கு பெற்று தரும்.  குழந்தைகளுக்கு நாராயணன் , சிவன், லக்ஷ்மி , ஸரஸ்வதிம் கோவிந்தன் , என்று பெயர் வைக்கும் காரணம் அவர்களைப்  பற்றி பேசும்போது, கூப்பிடும்போது பகவன் நாமா, நல்ல வார்த்தைகள் நாக்கில் இருந்து  எப்போதும் வெளிப்படவேண்டும்  என்று   ”ததாஸ்து’ பெறுவதற்கு தான்.
குழந்தைகளை, உறவுகளை, மற்றவர்களை நோக்கி ,  ‘ நீ செத்துத் தொலை, நாசமாகப் போ,அழிந்து போ, ஒழிந்து போ’ போன்ற  கொடிய  அமங்கல வார்த்தைகளை உபயோகப்படுத்தவே  கூடாது.  இனிமேலாவது  ‘ததாஸ்து’ தேவதைகள் பற்றிய  நினைப்பு இருக்கட்டும்.
இதைப் படித்தவுடனாவது அவை நம்மை விட்டு போகட்டும்  அவை போகவேண்டும் என்று வேண்டிக்  கொள்ளுங்கள் . ”ததாஸ்து” நானே சொல்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *