ஸ்ரீமத் பாகவதம் 10வது காண்டம். – நங்கநல்லூர் J K SIVAN
கிருஷ்ணனின் மாய தோற்றம்
பிருந்தாவனத்தில் நாட்கள் பறந்து கொண்டே போகி றது. அகாசுரன் என்ற கம்சனின் ராக்ஷஸன் ஒரு பெரிய பாம்பாக வாய் பிளந்து அசையாமல் ஒரு பாறை போல் நிற்க கண்ணனின் நண்பர்கள் அதை ஏதோ ஒரு மலைக்குகை என்று நினைத்து அந்த பாம்பின் திறந்த வாய்க்குள் சென்று விளையாட, அகாசுரன் அவர்களை ஒன்றும் செய்ய வில்லை. அவன் கவனம் எல்லாம் கண்ணன் மீது தானே. கிருஷ்ணன் நிலைமையை புரிந்து கொண்டுவிட்டான். தெரிந்தே அவனும் அந்த திறந்த வாய்க்குள் நுழைந்த மறுகணமே பாறை போல், குகைவாய் போல் இருந்த தநதது வாயை அகாசுரன் மூடிக்கொண்டான். ஆஹா அத்தனை சிறுவர்களும் கிருஷ்ணனும் அகாசுரன் வாயில் மாட்டிக்கொண்டுவிட்டால் இனி அவர்களை விழுங்கிக் கொல்ல வேண்டியது ஒன்று தானே பாக்கி. கிருஷ்ணனைக் கொல்வது எனக்கு கொசுவை அடிப்பது போல் சுலபமான வேலை. வெற்றியோடு திரும்புகிறேன் என்று கம்சனிடம் சவால் விட்டு புறப்பட்ட அகாசுரன் திரும்பவே இல்லை. பிரிந்தா வனத்திலேயே அவன் காலம் முடிந்து விட்டது. கிருஷ்ணன் விஸ்வரூப தரிசனம் எடுத்து அகாசுரன் உடலைப் பிளந்து வெளியே தன்னுடைய நண்பர்க ளுடன் வெளியே வந்துவிட்டான். அகாசுரன் சரித்ரமாகி விட்டான். இது நடந்து பல நாட்கள் ஆகி இப்போது பழங்கதை யாகிவிட்டது.
இதோ கிருஷ்ணனும் நண்பர்களும் வழக்கம்போல் கன்று மாடுகளுடன் மேய்ச்சல் காட்டுக்கு புறப் பட்டுவிட்டார்கள் .இது ஒரு புது இடம். கிருஷ்ணன் கண்டுபிடித்த இடம். யமுனை ஆற்று ஓரத்தில் வெகு தூரத்தில் உள்ளடங்கிய அதிக ஜனநடமாட்டாம் இல்லாத ஒரு புல்வெளி. நிறைய காடு போல் மரங்கள் அடர்ந்து படர்ந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடு.. நிறைய பச்சை பசேல் என்று புள் செடி கொடிகள் மலிந்த இடம் என்பதால் கன்றுகள் வயிறு புடைக்க சுகமாக மேய்ந்து கொண்டிருந்தவை கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டன.
நாம் இங்கு விளையாடிக் கொண்டிருப்போம். கன்றுக் குட்டிகள் தமது இஷ்டம்போல் மேயட்டும்.என்று கிருஷ்ணன் நண்பர்களை விளையாட அழைத்து நீரில் குதித்து நீந்தி வெகுநேரம் விளையாடி, அப்புறம் நதிக்கரையில் மரத்தடியில் பசியோடு நண்பர்களு டன் சாப்பிட உட்கார்ந்தான்.
வழக்கம் போல் ஒவ்வொரு வீட்டிலிருந்து வகை வகையான உணவுகள். அதில் கிருஷ்ணனுக்கென்று ஒரு பகுதி.
நண்பர்களில் ஒருவன் ”கிருஷ்ணா,எங்கேடா நம்மு டைய கன்றுக்குட்டிகளைக் காணோம்.காட்டிற்குள் சென்றுவிட்டன. வழி தெரியாமல் எங்கோ போய் மாட்டிக்கொண்டுவிட்டதோ?” என்று கேட்க கிருஷ்ணன் ஒரு கணம் அங்குமிங்கும் கண்களை சுழலவிட்டான். ஆம் கன்றுக்குட்டிகள் கண்ணில்படவே இல்லை. நிச்சயம் காட்டின் உட்பகுதிக்குள் சென்றுவிட்டன. தான் உடனே போய் அவற்றை மீட்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
”டேய் நீங்கள் எல்லோரும் இங்கே சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருங்கள். நான் நொடியில் காட்டின் உட்பகுதியில் சென்று பார்த்துவிட்டு கன்றுக்குட்டிகளை திரும்ப அழைத்துவருகிறேன்” என்று சொன்னான் கிருஷ்ணன்.
இந்த சந்தர்ப்பத்துக்காக ஒருவன் வெகுநேரமாக காத்தி ருந்தான். கம்சனின் ராக்ஷஸன் அல்ல அது. பிரம்மதேவன்.
”யார் இந்த கிருஷ்ணன் ? பிருந்தாவனத்தில் அமானுஷ் யமான செயல்களைச் செய்கிறானே. ஒருவேளை நாராயணனாக இருக்குமோ? அல்லது ஒரு விசித்திர மனிதனோ? அவனைச் சோதித்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் பிரமன். பிரம்மாவுக்கு கிருஷ்ணன் எனும் அந்த விநோத மனிதன் நாராயண னாக இருந்தால் சந்தோஷம் தான். ஒருவேளை வேறு யாராகவாவது இருந்தால் தேவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமே! கன்றுக் குட்டிகள் புல்வெளி தண்டி காட்டுக்குள் சென்றபோது காத்திருந்த பிரம்மன் அங்கிருந்து அவற்றை கடத்தி எங்கோ தனது கட்டுப்பாட்டில் ப்ரம்ம லோகத்தில் ஒளித்து வைத்து விட்டான். கன்றுக்குட்டிகளை மட்டுமா?கிருஷ்ணன் கன்றுக்குட்டிகளைக் காணாமல் காட்டுக்குள் உள்ளே ஓடியபோது பிரமன் யமுனை நதிக்கரையில் மரத்தடி யில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கோப சிறுவர்களையும் ஒட்டு மொத்தமாக இமைப் பொழுதில் ப்ரம்மலோகத்துக்கு தூக்கிச் சென்று ஓளித்து வைத்து விட்டான். ”கிருஷ்ணன் இப்போது என்ன செய்கிறான். பார்க்கிறேன்” என்று கிருஷ்ணன் கண்ணில் படாமல் மறைந்திருந்து பார்த்துக் கொண்டி ருந்தான் பிரம்மதேவன். கிருஷ்ணன் நாராயணன் இல்லை யென்றால் பிருந்தாவன கோப கோபியர்கள் குழந்தைகளையும் கன்றுக்குட்டிகளையும் காணாத தால் கிருஷ்ணன் தான் ஏதோ செய்திருக் கிறான் என சந்தேகித்து அவனை தண்டிப்பார்கள்.
காட்டினுள்ளே வெகு தூரம் சென்று பார்த்த கிருஷ்ண னுக்கு கன்றுக்குட்டிகள் பற்றிய தடயம் ஒன்றுமே கிடைக்கவில்லை. என்னவாயிற்று கன்றுக்குட்டிகளுக்கு. ஒன்றைக்கூட காணோமே. விலங்குகள் கொன்று தின்றிருந்தால் ரத்தம் மாமிசம் ஏதாவது கீழே கிடைக் கும். ஆபத்து ஏதாவது நடந்திருந்தால் கன்றுக் குட்டி களின் அபயக்குரலாவது கேட்டிருக்கும் எனக்கு. எப்படி அவை மாயமாக போய்விட்டன?. ஒருவேளை கன்றுகள் தாமாகவே வழக்கம்போல் அவனைத்தேடி யமுனை ஆற்றங்கரை மரத்தடிக்கு வந்திருக்குமோ? கண்ணன் திரும்பி மரத்தடிக்கு வந்தான். மரத்தடியில் ஒரு நண்பனையும் காணோம். எப்படி அத்தனை ஆயர்பாடி பிள்ளைகளைகளும் கூட மாயமாக மறைந்தார்கள்?. ஒருவன் குரலும் எனக்கு கேட்கவில்லையே. அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவு, பாத்திரங்கள் எல்லாமே அப்படியே வைத்த இடத்தில் இருக்கிறதே. எதுவும் ஆபத்து நேரிட்டிருந்தால் ஒருவராவது ஓடிவந்து என்னிடம் சொல்லி இருப்பார்களே, கூப்பிட்டிருப் பார்களே.
கண்ணன் அவர்கள் பேரை எல்லாம் சொல்லி உரக்க கூப்பிட்டான். பதிலே இல்லை. ராக்ஷசர்கள் வேலை இல்லை இது. கன்றுகளுக்கோ ஆயர்குல பிள்ளைக ளுக்கோ ஆபத்தில்லை, அவர்களை எங்கோ ஜாக்கிரதையாக யாரோ என்னிட மிருந்து கடத்தி மறைத்து வைத்திருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். யாராக இருக்கும்? சிவன் இப்படி செய்யமாட்டார். கோப மூர்த்தி. சுட்டெரித்து விடுபவர். மற்ற இந்திராதி தேவர்கள் என்னை நெருங்க அஞ்சுவார்கள். அப்படி யென்றால் நிச்சயம் இது ப்ரம்மாவின் கைத்திறன்? இந்த ப்ரம்மாவின் சாமர்த்தியத்தை மிஞ்சும்படி நான் இன்னும் ஒரு பெரிய சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது போல் இருக்கிறது.
கிருஷ்ணனின் மாயையால் புதிதாக அத்தனை கன்றுகளையும் கோபர்களையும் தன்னிலிருந்து உருவாக்கினான். ஒன்றும் நடக்காதது போல் அன்று மாலை வழக்கம்போல் கண்றுகளோடும் நண்பர் களோடும் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் தத்தம் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதிலென்ன ஆச்சர்யம் என்றால் கன்றுகளும் பிள்ளைகளும் கிருஷ்ணனின் உருவம் என்பதால் குணாதிசயங்களில் சற்று மாறு பட்டு காணப்பட்டார்கள். ஆகவே கிராமத்தில் ஒவ்வொரு கோபியும் ”என்ன அதிசயம் இது? என் பிள்ளை ரொம்ப நல்லவனாக மாறிவிட்டானே, அவனைப் பார்க்கும்போது கிருஷ்ணனே என் வீட்டில் என் மகனாக மாறியது போல் இருக்கிறதே, எல்லாம் அந்த கிருஷ்ணன் பயல் சகவாசத்தால் தான். இந்த ஒரு வருஷ காலம் வழக்கமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்மேல் வைத்த அன்பு, பாசம் நேசத்தை விட கிருஷ்ணன் மேல் அவர்கள் கொண்ட பாசம் நேசமாக அது வளர்ந்ததன் காரணம் கிருஷ்ணனே அவர்கள் பிள்ளைகளாக மாயத்தோற்றத்தில் இருந்தது தான். அதே போல் தான் தாய்ப்பசுக்கள் கன்றுக் குட்டிகளிடம் ரொம்ப அதிகமாக அன்பை செலுத்தின. கிருஷ்ணனிடம் விளையாடுவது போல் கன்றுகளை நக்கி பாலூட்டி மகிழ்ந்தன. எல்லா கன்றுக்குட்டிகளும் காலையில் பார்த்ததை விட சாயந்திரம் இன்னும் அழகாக இருக்கிறதே என்று அதிசயித்தாள். எல்லாமே கிருஷ்ணனின் மாய உருவம் என்று யார் அறிவார்கள்? நடந்ததை கிருஷ்ணன் பலராமனிடம் ரஹஸ்யமாக சொன்னான்.
ப்ரம்மா கன்று களையும் கோபர்களையும் திருடி ஒளித்துவைத்து ஒரு வருஷம் ஆகிவிட்டது.
பிருந்தாவனத்தில் ஏதாவது ஒரு பெரிய கலவரம் நிகழும். கண்ணன் தண்டிக்கப்படுவான் என்று எதிர்பார்த்த ப்ரம்மா ஏமாந்தான். தான் கடத்திய கன்றுகளைப் போலவே, கோபர்களைப் போலவே ஒரு ஜோடி பிருந்தாவனத்தில் வழக்கம்போல் இருப்பதை பார்த்து திகைத்தான். நிச்சயம் கிருஷ்ணன் கைகாரன். பிரம்மனை சந்தித்து தான் உருவாக்கிய கன்றுகள், கோபர்கள் அனைவருமே,அனைத்துமே சதுர்புஜ மஹா விஷ்ணுவாக காட்சியளிக்க வைத்த போது பிரம்மன் மிரண்டு விட்டான். கிருஷ்ணன் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று புரிந்தது. பிரம்மாவிடம் கோபம் கொள்ளாமல் கிருஷ்ணன் புன்னகைத்தான். ப்ரம்மா தான் ஜாக்கிரதையாக மறைத்துவைத்திருந்த கோபர்கள், கன்றுகளை கிருஷ்ணனிடம் ஒப்படைத்து விழுந்து வணங்கினான். திரும்ப பெற்ற கோப சிறுவர் களுடனும் ஒரிஜினல் கன்றுக்குட்டிகளுடனும் கிருஷ்ணன் பிருந்தாவனம் திரும்பினான்.
இது ஒரே நாளில் நடந்த சம்பவம் என்றாலும் ஒரு வருஷம் ஆகிவிட்டது பிருந்தாவனத்தில். ஏனென்றால் பிரம்மாவுக்கு ஒரு நாள் நமக்கு ஒருவருஷம்.
இந்த கதைகளெல்லாம் நான் உங்களுக்கு சொல்கி றேனே, அதை ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு சுகப்பிரம்ம மகரிஷி பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னவை. ஸ்ரீமத் பாகவதம் நமக்கு அதை பரிசாக அளித்திருக்கிறது.